அசத்தும் கேரளா.. ஒற்றை தடுப்பூசி கூட வீண் இல்லை.. செவிலியர்களுக்கு சபாஷ் போடும் பினராயி விஜயன்
திருவனந்தபுரம்: நாடு முழுவதும் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையிலும், கேரள சுகாதார துறையின் சிறப்பான நடவடிக்கைகள் காரணமாகத் தடுப்பூசி செலுத்தும் பணிகள் அங்குத் துரிதமாக நடைபெற்று வருகிறது.
இந்தியாவில் தற்போது கொரோனா பரவலின் 2ஆம் அலை ஏற்பட்டுள்ளது. நாட்டில் தற்போது தினசரி கொரோனா பாதிப்பு மூன்று லட்சத்தை கடந்துள்ளது.
இதன் காரணமாக மத்திய அரசு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை வேகப்படுத்தியுள்ளது. கடந்த மே 1ஆம் தேதி முதல் 18+ அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது. இருப்பினும், பல்வேறு மாநிலங்களிலும் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது.

வீணாகும் தடுப்பூசி
இதுமட்டுமின்றி நாட்டில் பல்வேறு மாநிலங்களிலும் அதிகளவில் கொரோனா தடுப்பூசி வீணாக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் கொரோனா தடுப்பூசி அதிகளவில் தமிழகத்தில் வீணடிக்கப்படுவது தெரியவந்தது. அதேநேரம் அண்டை மாநிலமான கேரளாவில் தடுப்பூசி மிகக் குறைந்த தடுப்பூசிகளே வீணாவதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
|
அசத்தும் கேரளா
இந்நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது ட்விட்டரில், "மத்திய அரசிடம் இருந்து கேரளா 73,38,806 டோஸ் தடுப்பூசிகளைப் பெற்றது. நாங்கள் 74,26,164 பேருக்குத் தடுப்பூசி செலுத்தியுள்ளோம். வீணாகும் தடுப்பூசியைக் கருத்தில் கொண்டு ஒவ்வொரு தொகுதியிலும் இருக்கும் கூடுதல் குப்பிகளையும்கூட நாங்கள் பயன்படுத்துகிறோம். நமது சுகாதார ஊழியர்கள், குறிப்பாகச் செவிலியர்கள் மிகவும் திறமையானவர்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

தடுப்பூசி பணிகள்
கேரளாவில் தடுப்பூசி செலுத்தும் பணிகளில் சுகாதார ஊழியர்கள் மட்டுமின்றி அனைவரும் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாகவே அங்குத் தடுப்பூசி பணிகள் சிறப்பாக நடைபெறுகிறது. தடுப்பூசி தட்டுப்பாட்டையும் தாண்டி, கேரள அரசு தடுப்பூசி செலுத்தும் பணிகளைத் துரிதமாக மேற்கொண்டு வருகிறது. கேரளாவில் கொரோனா தடுப்பூசி பணிகள் எப்படி நடைபெறுகிறது என்பதற்குச் சான்றாக மற்றொரு சம்பவம் நடைபெற்றுள்ளது.
|
திடீரென வந்த ஃபோன் கால்
கேரளாவில் வசிக்கும் ஒருவரது தாயார் கடந்த மாதம் கொரோனா தடுப்பூசி முதல் டோஸை எடுத்துக் கொண்டார். இருப்பினும், தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக அவரால் 2ஆவது டோஸ் எடுத்துக் கொள்ள முடியவில்லை. இந்நிலையில், வார்டு கவுன்சிலர் அவரை தொலைப்பேசியில் அழைத்து, அரசு மருத்துவமனையில் தடுப்பூசி இருப்பதாகவும் அங்கு செல்லுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார். இதனை அவர் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இப்படி ஒட்டுமொத்த அரசு இயந்திரமே அங்குத் தடுப்பூசி பணிகளுக்கு முக்கியத்துவம் அளித்து செயல்படுகிறது. இதனாலேயே கேரளா கொரோனா பரவலைச் சிறப்பாகக் கையாண்டு வருகிறது.












Click it and Unblock the Notifications