18நாட்கள் கழித்து.. கேரள முதல்வராக மே 20இல் பதவியேற்கும் பினராயி விஜயன்..500 பேருக்கு மட்டுமே அனுமதி
திருவனந்தபுரம்: கேரள சட்டசபை தேர்தலில் 99 இடங்களில் வென்று இடதுசாரிகள் ஆட்சியைத் தக்க வைத்துள்ள நிலையில், வரும் 20ஆம் தேதி அம்மாநில முதல்வராக பினராயி விஜயன் பதவியேற்கிறார்.
தமிழ்நாடு, கேரளா, புதுவை ஆகிய மாநிலங்களுக்குக் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து மே 2ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியானது. அதில் கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் ஆளும் கட்சியே ஆட்சியை தக்க வைத்தது.

கேரள சட்டசபை தேர்தல்
குறிப்பாக கேரளாவில் சிபிஎம் தலைமையிலான இடதுசாரிகள் கூட்டணி மொத்தமுள்ள 140 தொகுதிகளில் 99 தொகுதிகளில் வென்றது. அதேபோல காங்கிரஸ் கூட்டணி 41 இடங்களைக் கைப்பற்றியது. கடந்த 2016இல் ஒரு இடத்தில் மட்டும் வெற்றி பெற்ற பாஜக இந்த முறை போட்டியிட்ட அத்தனை இடங்களிலும் தோல்வியடைந்தது.

20ஆம் தேதி பதவியேற்பு விழா
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு 2 வாரங்களைக் கடந்த நிலையிலும், இன்னும் கேரள முதல்வராக பினராயி விஜயன் மீண்டும் பதவியேற்கவில்லை. இந்நிலையில் இன்று திருவனந்தபுரத்தில் இடதுசாரிகள் கூட்டணி கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து கேரள முதலமைச்சராக பினராயி விஜயன் பதவியேற்கும் விழா வரும் 20ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவருடன் 21 அமைச்சர்களும் பதவியேற்கவுள்ளனர். கடந்த மே 2ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், பினராயி விஜயன் சுமார் 18 நாட்களுக்குப் பிறகு முதல்வராகப் பதவியேற்கிறார்.

500 பேருக்கு அனுமதி
கொரோனா பரவல் காரணமாகக் கேரளாவில் வரும் 23ஆம் தேதி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பதவியேற்கும் விழா எளிமையாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பினராயி விஜயன் கூறுகையில், கடந்த முறை பதவியேற்பு விழாவில் 40 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். ஆனால், இந்த முறை 140 சட்டமன்ற உறுப்பினர்கள், 20 எம்பிக்கள் உள்ளிட்ட 500 பேர் மட்டுமே பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள உள்ளனர் என்றார்.

இந்திய மருத்துவ சங்கம்
திருவனந்தபுரத்திலுள்ள சென்டரல் ஸ்டேடியத்தில் பதவியேற்பு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த ஸ்டேடியம் 1000 இருக்கைகளைக் கொண்டிருந்தாலும் கொரோனா நெறிமுறைகள் காரணமாக 500 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் எனக் கேரள அரசு தெரிவித்துள்ளது. முன்னதாக கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பதவியேற்பு விழாவை வீடியோ கான்பரன்ஸ் முறையில் நடத்துமாறு இந்திய மருத்துவ சங்கத்தின் கேரள பிரிவு கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications