உச்சக்கட்ட மோதல்.. ஆளுநரை திரும்பப் பெற குடியரசுத் தலைவரை அணுகுவோம் - கேரள முதல்வர் பினராயி அதிரடி
திருவனந்தபுரம்: கேரள ஆளுநர் ஆரிப் முகமது கானை திரும்பப் பெறுமாறு குடியரசுத் தலைவரை அணுகுவோம் என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் ஆளுநருக்கும், முதல்வருக்கும் இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதை அடுத்து, பினராயி விஜயன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும், தனக்கு இல்லாத அதிகாரங்களை எல்லாம் ஆளுநர் கற்பனை செய்துகொண்டு, ஆர்எஸ்எஸ் உத்தரவின்படி நடந்துகொள்வதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

ஆரம்பம் முதலே மோதல் போக்கு..
கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு பாஜக மூத்த தலைவரான ஆரிப் முகமது கானை ஆளுநராக மத்திய அரசு 2019-ம் ஆண்டு நியமித்தது. அவர் ஆளுநராக பொறுப்பேற்றது முதலாகவே கேரள அரசுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறார். கேரள அரசு அனுப்பும் முக்கிய கோப்புகளை திருப்பி அனுப்புவது, அரசு நிர்வாகத்தில் தலையிடுவது, பல்கலைக்கழக நியமன விவகாரங்களை விமர்சிப்பது என ஆளுநரின் அடுத்தடுத்த நடவடிக்கைகள் கேரள அரசை கோபப்படுத்தியது.

ராஜினாமா செய்ய உத்தரவு
இந்த சூழலில், கேரளாவில் உள்ள 9 பல்கலைக்கழகங்களின் வேந்தர்களை ராஜினாமா செய்யுமாறு ஆளுநர் ஆரிப் முகமது கான் இன்று அதிரடியாக உத்தரவிட்டார். பல்கலைக்கழகங்களின் வேந்தர் என்ற முறையில் இந்த உத்தரவை தாம் பிறப்பித்திருப்பதாகவும், கேரள உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இணங்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆளுநர் தெரிவித்துள்ளார். ஆளுநரின் இந்த உத்தரவு கேரள அரசை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. இதையடுத்து, கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆளுநருக்கு கடும் கண்டனங்களையும், குற்றச்சாட்டுகளையும் தெரிவித்துள்ளார்.

ஆர்எஸ்எஸ் கைப்பாவை..
இந்த விவகாரம் குறித்து பாலக்காடில் செய்தியாளர்களை சந்தித்து முதல்வர் பினராயி விஜயன் கூறியதாவது: ஆளுநருக்கான பணிகளை விட்டுவிட்டு மற்ற அனைத்து வேலைகளிலும் ஆளுநர் ஆரிப் முகமது கான் ஈடுபட்டு வருகிறார். தனக்கு இல்லாத அதிகாரங்களை எல்லாம் கற்பனை செய்து கொண்டு, ஒரு சர்வாதிகாரியை போல அவர் நடந்து வருகிறார். அவரது நடவடிக்கைகளை பார்க்கும் போது, கேரளாவில் குழப்பத்தை ஏற்படுத்தும் நோகக்கத்தில் அவர் செயல்படுவது அப்பட்டமாக தெரிகிறது. மேலும், பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் கைப்பாவையை போல அவர் இயங்கி வருகிறார்.

சாதாரண பொது அறிவு..
தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக ராஜஸ்ரீ நியமிக்கப்பட்டது செல்லாது என கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது முழுக்க முழுக்க அந்த தொழில்நுட்ப பல்கலைக்கழகம் சம்பந்தப்பட்ட உத்தரவு. சிறு குழந்தைக்கு கூட இந்த விஷயம் தெரியும். ஆனால், அந்த உத்தரவை பொதுவாக கருதி, 9 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை ராஜினாமா செய்யுமாறு ஆளுநர் ஆரிப் முகமது கான் உத்தரவிட்டுள்ளதை என்னவென்று சொல்வது? இது மிகவும் சாதாரண புரிதல். ஓரளவுக்கு பொது அறிவு இருந்தால் கூட இதை புரிந்துகொள்ள முடியும்.

ஆளுநரை திரும்பப் பெற..
கேரள அரசின் நிர்வாகத்துக்கும், மாணவர்களின் கல்விக்கும் தொடர்ந்து ஆளுநர் ஆரிப் முகமது கான் ஈடுபட்டு வருகிறார். எனவே, தேவைப்பட்டால் அவரை ஆளுநர் பதவியில் இருந்து திரும்பப் பெறுமாறு குடியரசுத் தலைவரிடம் கேரள அரசு வலியுறுத்தும். அதேபோல, பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுநரை நீக்குவது குறித்தும் ஆலோசித்து வருகிறோம். இவ்வாறு பினராயி விஜயன் கூறினார்.












Click it and Unblock the Notifications