அடிபொலி சாரே.. ஆன்லைனில் மதுபான புக்கிங்.. கூட்டத்தை தவிர்க்க, கேரளா அசத்தல்
திருவனந்தபுரம்: மதுக் கடைகளில் கூட்டம் சேர்வதை தடுப்பதற்காக, ஆன்லைன் மூலமாக டோக்கன் வழங்க கூடிய திட்டத்தை அறிமுகப்படுத்தி, மது விற்பனையைத் துவங்க உள்ளது கேரள அரசு.
தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும், மதுக் கடைகளின் முன்பாக நின்ற நீண்ட கூட்டத்தை பார்த்து விட்டு இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது பினராயி விஜயன் அரசு.
நேற்று, திருவனந்தபுரத்தில் நடைபெற்ற மாநில அமைச்சரவை கூட்டத்தில், மீண்டும் மதுக்கடைகளை திறப்பது என்ற முடிவு எட்டப்பட்டுள்ளது. நிதித்துறை அமைச்சர் தாமஸ் ஐசக் இதை நிருபர்களிடம் உறுதி செய்தார்.

வரி அதிகரிப்பு
அதேநேரம் செலவீனங்கள் அதிகரிப்பு காரணமாக மதுபானங்களின் விலையை உயர்த்துவது என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதிகபட்சம் 35 சதவீதம் வரை மதுபானங்களின் விலை உயரப் போகிறது. மதுபான விலை உயர்வும் மூலமாக கூடுதலாக 2,000 கோடி ரூபாய் அரசுக்கு வருமானம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

மதுபான விலை மாற்றம்
பகார்டி ரம் விலை உயர்வு ரூ .150 அளவுக்கு இருக்கும் (புதிய விலை - ரூ .1440, பழைய விலை ரூ .1290), சிக்னேச்சர் விஸ்கி ரூ .140 ஆக இருக்கும் (புதிய விலை ரூ .1410, பழைய விலை ரூ .1270), மேஜிக் மொமண்ட்ஸ் வோட்கா ரூ .100 (புதிய விலை ரூ. 1010, பழைய விலை ரூ .910), மேன்ஷன் ஹவுஸ் பிராந்தி ரூ .90 (புதிய விலை ரூ .910, பழைய விலை ரூ .820) மற்றும் ஜவான் ரம் (புதிய விலை ரூ .580, பழைய ரூ .500).

301 மதுபான கடைகள்
அரசு நடத்தக்கூடிய 301 மதுபான கடைகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ள போதிலும் அதற்கான தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. அதேநேரம் மதுபான கடைகளில் கூட்டம் கூடுவதை தவிர்ப்பதற்கு ஆன்லைன் மூலமாக புக்கிங் செய்து டோக்கன் பெற்று கொள்ள வேண்டுமாம்.

டோக்கன்
டோக்கன் பெற்ற பிறகு, குறிப்பிட்ட நேரத்திற்கு மதுபான கடைக்கு சென்று மது வாங்கி கொள்ளலாம். இதனால் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியம் குடிமகன்களுக்கு ஏற்படாது. கூட்டம் அதிகமாக சேருவதால், ஏற்படும் நோய் தொற்றுக்கான வாய்ப்பு குறையும். எனவே கேரள அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. தமிழக அரசு இதுபோன்ற நடைமுறையை பின்பற்றலாமே.












Click it and Unblock the Notifications