'இப்படிதான் செய்தேன்..' அப்பவே முடிஞ்சிருக்கும்.. ஷாரோனை கொல்ல முயன்றதை நடித்து காட்டிய க்ரீஷ்மா
திருவனந்தபுரம்: ஜூஸில் விஷம் கலந்து கொடுத்து காதலனை கொன்ற வழக்கில், தினந்தோறும் புதிய புதிய அதிர்ச்சி தகவல்கள் வந்து கொண்டே இருக்கின்றன.
அந்த வகையில், தற்போது காதலன் ஷாரோனை அவனது கல்லூரியில் வைத்தே தீர்த்துக்கட்ட முயற்சித்தை போலீஸாரிடம் நடித்துக் காட்டியுள்ளார் க்ரீஷ்மா. மேலும், அன்றைக்கு அது சரியாக நடந்திருந்தால் அவன் கதை எப்பவோ முடிந்திருக்கும் எனவும் க்ரீஷ்மா சிரித்தபடி போலீஸாரிடம் கூறியுள்ளார்.
க்ரீஷ்மாவின் இந்த வாக்குமூலத்தை பார்த்து போலீஸாரே சற்று ஆடிப் போயிருப்பதாக கூறப்படுகிறது. மேலும், பிறவியிலேயே கிரிமினல் மைண்ட் இருந்தால்தான் இந்த அளவுக்கு ஒரு குற்றத்தை செய்ய முடியும் எனவும் போலீஸார் தெரிவிக்கின்றனர்.
கிரிமினல் மைண்ட் காதலி..
கன்னியாகுமரியைச் சேர்ந்த க்ரீஷ்மா தனது காதலனை ஜூஸில் விஷம் வைத்துக் கொன்றதுதான் இன்று நாடு முழுவதும் பேசப்பட்டு வரும் முக்கிய 'க்ரைம்' செய்தியாக மாறியிருக்கிறது. தனக்கு வீட்டில் வசதியான மாப்பிள்ளையை பார்த்ததாலும், ஜாதகத்தின்படி முதல் கணவர் இறந்துவிடுவார் எனக் கூறியதாலும் தனது காதலன் ஷாரோனை ஒப்புக்கு திருமணம் செய்து, அவரை கொன்றிருக்கிறார் க்ரீஷ்மா. ஆனால், அவரை கொல்ல 'ஜூஸ் சேலஞ்ச்', 'கஷாயம் சேலஞ்ச்' என கிரிமினலாக ப்ளான் செய்து அவரை தீர்த்துக்கட்டியதுதான் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
கிடுக்கிப்பிடி விசாரணை
ஷாரோன் இறந்து போன செய்தி வந்ததும் நிம்மதி பெரு மூச்சுவிட்ட க்ரீஷ்மா, மெல்ல மெல்ல போலீஸார் தன்னை நெருங்குவதை அறிந்ததும் பயத்தில் உறைந்தார். பின்னர், உயிரை மாய்த்துக் கொள்ள தற்கொலை முயற்சியிலும் ஈடுபட்டார். ஆனால், போலீஸார் அவரை காப்பாற்றி தற்போது தங்கள் விசாரணை வளையத்துக்குள் அவரை கொண்டு வந்துள்ளனர். போலீஸாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில், ஷாரோனை கொல்ல என்னென்ன திட்டங்களை தீட்டினேன்; எப்படி கொலை செய்தேன் என க்ரீஷ்மா நடித்து காட்டி வருகிறார். மேலும், அவர் அளித்த வாக்குமூலங்கள் போலீஸாரையே அலற செய்வதாக உள்ளது.
கல்லூரியில் வைத்தே..
ஷாரோனை கொலை செய்ய ஜுஸில் கொஞ்சம் கொஞ்சமாக விஷம் கலந்து க்ரீஷ்மா கொடுத்ததை அவர் ஏற்கனவே போலீஸாரிடம் தெரிவித்தார். இதற்காக இன்ஸ்டாவில் 'ஜூஸ் சேலஞ்ச்' என்பது போல பதிவிட்டு, அப்பாவி காதலன் ஷாரோனுக்கு விஷம் கலந்த ஜூஸை க்ரீஷ்மா கொடுத்திருக்கிறார். அப்போதும் அவர் சாகாததால், அதன் பின்னர் 'கஷாயம் சேலஞ்ச்' என்ற பெயரில் கஷாயத்தில் விஷம் கலந்து கொடுத்து ஷாரோனை அவர் கொன்றிருக்கிறார். இந்த சூழலில், நேற்று அவரிடம் நடத்திய விசாரணையின் போது, கல்லூரியில் வைத்தே ஷாரோனை கொலை செய்ய முயன்றதை க்ரீஷ்மா ஒப்புக் கொண்டுள்ளார்.
'மிஸ் ஆயிட்டான்..' - சிரித்த க்ரீஷ்மா
இதுதொடர்பாக போலீஸாரிடம் அவர் கூறுகையில், "ஜூஸ் சேலஞ்ச் என்ற பெயரில் விஷம் கலந்த ஜூஸை ஷாரோனுக்கு கொடுத்தேன். ஆனால், வயிற்று வலியும், தலை வலியும் மட்டுமே அவனுக்கு ஏற்பட்டது. இதனால், ஷாரோனின் கல்லூரிக்கே சென்று அங்கு வைத்து ஜூஸ் சேலஞ்ச் நடத்தினேன். அப்போது அந்த ஜூஸில் 50-க்கும் மேற்பட்ட பாராசிட்டமல் மாத்திரியை கலந்திருந்தேன். ஆனால் உடல்நிலை சரியில்லாததால் சிறிது மட்டுமே அவன் குடித்தான். அன்றைக்கு அவன் முழு ஜூஸையும் குடித்திருந்தால் அன்றே இறந்திருப்பான். நானும் சிக்கியிருக்க மாட்டேன்" என போலீஸாரிடம் க்ரீஷ்மா வாக்குமூலம் அளித்தார். அவர் வாக்குமூலம் அளிக்கையில் எந்தக் குற்ற உணர்ச்சியும் இல்லாமல் சிரித்தபடியே பேசுவதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.