மீண்டும் கொரோனா அச்சத்தில் கடவுளின் தேசம்.. 273 பேருக்கு தொற்று உறுதி.. முகக்கவசம் கட்டாயம்
திருவனந்தபுரம்: 2019 ஆம் ஆண்டு முதல் சுமார் 3 ஆண்டுகளுக்கு கொரோனா பெருந்தொற்றால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். தற்போது மீண்டும் கொரோனா பரவல் தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் மத்தியில் கடும் அச்சம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளத்தில் 273 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டு முதல் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கி உலகம் முழுவதும் கடுமையாக பாதிக்கப்பட்டது. லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். கொரோனா, உருமாறிய கொரோனா என அடுத்தடுத்து மக்களை பீதிக்குள்ளாக்கியது. பொதுமக்கள் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பவே கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாகின.

இந்நிலையில், இந்தியாவில் தமிழகம், கேரளம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கொரோனா வைரஸ் மீண்டும் கடந்த சில நாள்களாகப் பரவி வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரள மாநிலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், பொதுமக்கள் மத்தியில் கடும் அச்சம் நிலவி வருகிறது.
கேரள மாநிலத்தில் இதுவரை 273 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநிலத்தின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. திருவனந்தபுரத்தில் 73 பேருக்கும், எர்ணாகுளத்தில் 49 பேருக்கும், பத்தனம்திட்டா பகுதியில் 30 பேருக்கும், திருச்சூரில் 26 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, கேரள சுகாதாரத் துறை அமைச்சர் கூறுகையில், மாவட்ட அளவில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் உத்தரவிடப்படுள்ளது. தொற்று தொடர்பான பாதிப்பு விவரங்களை மாவட்ட அதிகாரிகள் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. சளி, இருமல், தொண்டை வலி அல்லது சுவாசப் பிரச்னைகள் உள்ளவர்கள் முகக்கவசம் கட்டாயமாக அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முதியவர்கள், கர்ப்பிணிகள், நோயாளிகள் பொது இடங்களுக்குச் செல்லும்போது கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும். அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவுவது அவசியம். மருத்துவமனைகளுக்கு செல்லும்போது முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே கேரள மாநிலம், கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த 59 வயது ஆண் ஒருவர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அதேபோல, திருவனந்தபுரத்தைச் சேர்ந்த 64 வயது ஆண் ஒருவரும் பாதிக்கப்பட்டிருந்தார். இவர்கள் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு திருவனந்தபுரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
கேரள மாநிலத்தில் கொரோனா பெருந்தொற்றால் 2020 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 72 ஆயிரத்து 141 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கொரோனா குறித்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதேசமயம் பெரிய அளவில் கொரோனா பரவல் தீவிரமடையவில்லை என்றும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்று கேரள சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications