காதலிக்கும் போது உடலுறவு! பிறகு பிரேக் ஆப் ஆனால் அதை பலாத்காரமாக கருத முடியாது! கேரள ஐகோர்ட் கருத்து
திருவனந்தபுரம்: இருவரும் சம்மதத்துடன் ஏற்பட்ட உடலுறவு கொண்டு, பிறகு சில காரணங்களால் பிரேக் அப் ஏற்பட்டால் அதை மட்டும் காரணமாக வைத்து பாலியல் வன்புணர்வு எனக் கூறிவிட முடியாது என்று கேரள உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பெண் ஒருவர் அளித்த புகாரில் கேரள ஐகோர்ட் இந்தக் கருத்தைக் கூறியுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் 3 மற்றும் 4ம் தேதிகளில் தாமரைசேரி அருகே உள்ள ஒரு ஹோட்டலில் மூன்றாம் ஆண்டு மருத்துவ மாணவியை இளைஞர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ததாகப் புகார் அளிக்கப்பட்டது. இருப்பினும், இந்த வழக்கை விசாரித்த கேரள ஐகோர்ட் சில முக்கிய கருத்துகளைக் கூறியுள்ளது. இது குறித்து நாம் பார்க்கலாம்.

பின்னணி
புகார் அளித்த அந்த மாணவிக்கு 2023ம் பிப்ரவரி 16ம் தேதி வேறு ஒருவருடன் திருமணம் நடந்துள்ளது. இருப்பினும், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிய முடிவு செய்துள்ளனர். இது தொடர்பான விவாகரத்து நடைமுறை நடந்து வருகிறது. இதற்கிடையில் அந்தப் பெண்ணுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இளைஞருடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இருவரும் பின்னர் ஸ்னாப்சாட் தளத்தில் தொடர்ந்து சாட் செய்துள்ளனர்.
கல்லூரியில் இருந்த அந்த மாணவி ஸ்டெடி லீவ்விற்காக வீட்டிற்குச் செல்வதாகக் கூறிவிட்டு ரயில் மூலம் கோழிக்கோட்டிற்குச் சென்றார். அந்த இளைஞர் கோழிக்கோட்டில் பெண்ணை அழைத்துச் சென்றிருக்கிறார். இருவரும் வயநாட்டுக்குச் சென்றனர். வழியில் அவர்கள் தாமரைசேரி அருகே உள்ள ஒரு ஹோட்டலில் அறை எடுத்துத் தங்கி உள்ளனர். மறுநாள், அவர்கள் திரூர் சென்று மற்றொரு ஹோட்டலில் தங்கியுள்ளனர். பின்னர் அடுத்த நாள் அந்தப் பெண் திருவனந்தபுரம் திரும்பினார்.
பலாத்காரம்
இந்த டிரிப்பின் போது தாமரைசேரி அருகே உள்ள ஹோட்டலில் இளைஞர் தன்னை பலாத்காரம் செய்ததாக அந்தப் பெண் புகாரில் குறிப்பிட்டிருந்தார். இருப்பினும், அந்த இளைஞர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்றும், இருவரின் சம்மதத்துடனேயே உறவு வைத்துக் கொண்டதாகத் தெரிவித்தார். பிறகு ரிலேஷன்ஷிப் மோசமானதால் பிரேக் அப் செய்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். எந்த அடிப்படையும் இல்லாமல் இது பாலியல் வன்புணர்வு வழக்காக மாற்றப்பட்டுள்ளது என்றும் வாதிட்டார்.
சம்மதத்தோடு உடலுறவு
வழக்கறிஞரின் வாதத்தைக் கேட்ட நீதிபதி, "திருமணமான ஒரு பெண், தனது சொந்த விருப்பத்தின் பேரில், திருவனந்தபுரத்திலிருந்து கோழிக்கோடு வரை வந்து, மனுதாரருடன் வெவ்வேறு ஹோட்டல்களில் இரண்டு நாட்கள் தங்கியிருக்கிறார். எனவே, அவர்களுக்கு இடையேயான உடலுறவு அவரது சம்மதம் இல்லாமல் நடந்தது என்று கருத முடியாது.
பலாத்காரமாகக் கருத முடியாது
பாலியல் வன்புணர்வு என்பது ஒரு கொடிய குற்றம்.. அத்தகைய குற்றச்சாட்டு ஒரு இளைஞனின் வாழ்க்கையை என்றென்றும் கெடுத்துவிடும்.. இத்தகைய குற்றச்சாட்டுகளில் அவர் குற்றம் செய்யவில்லை எனத் தெரிந்து பின்னர் விடுவிக்கப்பட்டாலும் பழிச்சொல் இளைஞர் மீது தொடரும்.. இளைஞருக்கு ஜாமீன் மனுவை பரிசீலிக்கும்போது, மாறிவரும் சமூகச் சூழலை நீதிமன்றங்கள் கவனத்தில் கொள்ளாமல் இருக்க முடியாது" என்று கூறினார்.
சம்மதத்துடன் ஏற்பட்ட உறவு பின்னர் கசந்து போனால், அதைப் பாலியல் வன்புணர்வாகக் கருத முடியாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், புகார்தாரர் ஏற்கனவே திருமணமானவராக இருப்பதால், திருமணம் செய்து கொள்வதாகப் பொய்யான வாக்குறுதி கொடுத்து சம்மதம் பெற்றதாகக் குற்றம் சாட்ட முடியாது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications