கதை கேட்க வந்த பெண் மீது பாலியல் வன்கொடுமை.. மாளிகப்புரம் நடிகர் மீது புகார்.. கேரள ஹைகோர்ட் அதிரடி
திருவனந்தபுரம்: மலையாள நடிகர் உன்னி முகுந்தன் மீது இளம்பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார். கதை கேட்க வந்த பெண்ணிடம் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது.
மலையாள நடிகர் உன்னி முகுந்தன். இவர் தனுஷ் நடித்து வெளியான சீடன் படத்தில் நடித்திருந்தார். அது போல் மாளிகப்புரம் என்ற படத்திலும் முகுந்தன் நடித்திருந்தார். அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இவர் மீது கேரள மாநில கோட்டயத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்த புகாரில் கடந்த 2018ஆம் ஆண்டு தன்னை படத்தில் நடிக்க வைப்பதாகவும் கதையை கேட்க தனது வீட்டுக்கு வருமாறு அழைத்தார்.
அதன் பேரில் சென்ற தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளித்துள்ளார். இதுகுறித்து நடிகர் உன்னி முகுந்தன் சார்பில் குற்றவியல் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் தனக்கு ரூ 25 லட்சம் பணம் கொடுத்தால் உங்கள் மீது கொடுத்த புகாரை வாபஸ் பெறுகிறேன் என அந்த பெண் கட்டாயப்படுத்தியதாகவும் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் மனுவில் கூறியிருந்தது.
இதையடுத்து முகுந்தனுக்கு எதிரான வழக்கு விசாரணையை நீதிமன்றம் தடை விதித்தது. உன்னி முகுந்தன் ஜாமீனில் வெளியே உள்ளார். இந்த நிலையில் இளம் பெண்ணிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் கண்டு விட்டதாகவும் முகுந்தனின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்து வழக்கு விசாரணைக்கு தடை செய்யக் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார்.

ஆனால் அந்த பெண்ணோ முகுந்தன் வழக்கறிஞர் கூறுவது போல் சமரசம் ஏதும் ஏற்படவில்லை. உன்னி முகுந்தன் தன்னை தொடர்ந்து அவமானப்படுத்தி வருவதாக ஹைகோர்ட்டில் தெரிவித்திருந்தார். இதுகுறித்து விசாரணை நடத்திய உயர்நீதிமன்றம் நடிகர் உன்னி முகுந்தன் கொடுத்த மனுவைத் தள்ளுபடி செய்து அவருக்கு எதிரான வழக்கு விசாரணை தொடர்ந்து நடக்கும் என தெரிவித்துள்ளது. இந்த வழக்கு விசாரணையை 3 மாதங்களுக்குள் முடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
உன்னி முகுந்தன் நடிகை சமந்தாவின் யசோதா படத்திலும் நடித்திருந்தார். அது போல் அனுஷ்கா நடித்த பாகமதி படத்திலும் நடித்திருந்தார். இவருக்கு அண்மையில் கேரளாவுக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications