"முடியாதுனு சொல்ல தைரியம் இருக்கா".. வயநாடு நிலச்சரிவு.. மத்திய அரசை விளாசிய கேரளா நீதிமன்றம்
கொச்சி: வயநாடு நிலச்சரிவு சம்பவம் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட மக்களின் வங்கிக் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு அதற்கு வாய்ப்பு இல்லை என்று நழுவ, கேரள உயர் நீதிமன்றம் சரமாரி கேள்விகளால் மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளது.
2024 ஜூலை 30 ஆம் தேதி இந்தியாவின் கறுப்பு நாள். கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. முண்டக்கை, சூரல்மலை, வெள்ளரிமலை பகுதிகளில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோரின் உடல் கூட கிடைக்கவில்லை. அந்தப் பகுதியில் இருந்த சுமார் 1,000 வீடுகள் தரை மட்டமாகின.

உறவுகளையும், உடைமைகளையும் நிற்கதியாக தவித்த அந்த மக்களின் சோக ரணம் இன்னும் ஆறவில்லை. அதற்குள்ளாகவே அவர்களுக்கு மேலும்.. மேலும் வலியை கொடுக்கும் வகையிலான சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களின் வங்கிக் கடன் தள்ளுபடி விவகாரத்தில் மத்திய அரசு கூறியுள்ள கருத்து கேரள மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களின் வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை எழுந்து வருகிறது. சம்பவம் நடைபெற்று கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகியும் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. இதுதொடர்பாக கேரளா முதல்வர் பினராயி விஜயன், பிரதமர் நரேந்திர மோடிக்கு நேற்று கூட கடிதம் எழுதியுள்ளார்.
மறுபக்கம் மக்களின் முக்கிய பிரச்னையாக கருத்தில் கொண்டு, கேரளா உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரணை நடத்தி வருகிறது. அதன்படி இந்த வழக்கு நீதிபதிகள் ஜெயசங்கரன் நம்பியார், மனோஜ் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. இதுதொடர்பாக ஏற்கனவே மத்திய அரசிடம் விளக்கம் கேட்கப்பட்டிருந்தது.
இதையடுத்து மத்திய அரசு விரிவான பிரமாண பத்திரம் ஒன்றை தாக்கல் செய்திருந்தது. அதில், "பேரிடர் மேலாண்மை சட்டம் பிரிவு 13 இன் கீழ் மத்திய அரசால் வங்கிக் கடனை தள்ளுபடி செய்ய இயலாது. பேரிடர் மேலாண்மை சட்டத் திருத்தத்தில் பிரிவு 13 நீக்கப்பட்டுள்ளது." என்று கூறியுள்ளனர். இந்த பதிலை ஏற்க முடியாது என்று சொல்லி நீதிபதிகள், மத்திய அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியது.
இதுகுறித்து நீதிபதிகள், "இங்கு மத்திய அரசின் அதிகாரம் குறித்துதான் பேசுகிறோம். மற்ற எதைப்பற்றியும் பேச வேண்டிய அவசியம் இல்லை. அரசியலமைப்புப் பிரிவு 73 இன்னும் உங்கள் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. அதில் மத்திய அரசின் அதிகாரம் பற்றி தெளிவாக உள்ளது. எனவே மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை என்றெல்லாம் சொல்ல வேண்டாம்.
உங்களால் செய்ய முடியவில்லை என்றால் அதை சொல்ல தைரியம் வேண்டும். இப்படி சட்டப் பிரிவுகளை காரணம் காட்டி அதன் பின்னால் மறைந்து கொள்ளக் கூடாது." என்று கூறினார்கள். மேலும், கடன் தள்ளுபடி செய்ய முடியுமா என்று தெரிவிக்க மத்திய அரசுக்கு 3 வார கால அவகாசம் வழங்கி, வழக்கை தள்ளி வைத்தனர்.












Click it and Unblock the Notifications