Kerala Liquor shops: ஆன்லைனில் பேமெண்ட் ப்ளஸ் டோக்கன்...சரக்கு கடைகளை திறக்க ஜோராக தயாராகிறது கேரளா
திருவனந்தபுரம்: நாட்டின் பிற மாநிலங்களைப் போல கேரளாவிலும் மதுபான கடைகளை அம்மாநில அரசு திறக்க தயாராகி வருகிறது. அதேநேரத்தில் பிற மாநிலங்களைப் போல சிக்கல் எதுவுமில்லாமல் சுமூகமாக மதுபான விற்பனை நடப்பதற்கான அத்தனை ஜரூர் ஏற்பாடுகளையும் கேரளா அரசு மேற்கொண்டு வருகிறது.
3-வது கட்ட லாக்டவுன் பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் அமல்படுத்தப்பட்டது. இதனால் பல மாநிலங்களில் மதுபான கடைகள் திறக்கப்பட்டன.
டெல்லி, தெலுங்கானா உள்ளிட்ட பல மாநிலங்களில் மதுபானங்கள் விலை மிக மிக அதிகமாக உயர்த்தப்பட்டன. ஆனாலும் மதுபான கடைகளில் விற்பனை கொடிகட்டிப் பறந்தது.

சர்ச்சைக்குரிய மதுகடைகள்
தமிழகத்திலும் மே 7-ந் தேதி மதுபான கடைகள் திறக்கப்பட்டன. இத்தனைக்கும் சென்னை உயர்நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளை விதித்துதான் மதுபான கடைகளை தமிழகத்தில் திறப்பதற்கே அனுமதித்தது. இருப்பினும் 45 நாட்களுக்குப் பின் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதால் கூட்டம் அலைமோதியது. சமூக இடைவெளி எனப்படும் தனிநபர் இடைவெளிகள் கடைபிடிக்கப்படவும் இல்லை. இது மிகப் பெரும் சர்ச்சையானது.

மதுபான கடைகள்
இதனால் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசுக்கு எதிராக மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளை மூடுவதற்கு உத்தரவிட்டது. இதனால் 2 நாட்களிலேயே திறக்கப்பட்ட அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகளும் மூடப்பட்டன. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு மனுவைத் தாக்கல் செய்தது. தங்களையும் கேட்காமல் இந்த வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என தமிழக அரசியல் கட்சிகளும் உச்சநீதிமன்றத்துக்கு சென்றன.

கடைகளை திறக்க உத்தரவிட்ட சுப்ரீம்கோர்ட்
பின்னர் உச்சநீதிமன்றம் தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளை திறக்க அனுமதி அளித்தது. இதனையடுத்து தமிழகத்தி டாஸ்மாக் மதுபான கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன. ஒவ்வொரு நாளும் ஒரு கலர் டோக்கன் வழங்கபட்டு மதுவிற்பனை நடைபெற்று வருகிறது. கேரளாவில் இதுவரை மதுபான கடைகள் திறக்கப்படவில்லை. ஆனால் அண்மையில் கள்ளுகடைகள் திறக்கப்பட்டன. இருப்பினும் போதுமான சரக்குகள் இல்லாததால் கள்ளுக் கடைகள் மூடப்பட்டன.

கேரளா கடைகள் திறப்பு?
இந்த நிலையில் கேரளாவில் மதுபான கடைகள் திறக்கப்படும் தேதியை அம்மாநில அரசு அறிவிக்க இருக்கிறது. அப்படி அறிவிக்கும் போது எந்த ஒரு சர்ச்சைக்கும் இடம் இல்லாமல் கடைகளை திறக்க வேண்டும் என்பதில் கேரளா அரசு தீவிரமாக உள்ளது. ஆன்லைனில் பணத்தை கட்டி டோக்கன் பெற்று அதை வைத்து கடைகளில் மதுபானங்களை வாங்கும் முறையை கேரளா அமல்படுத்த உள்ளதாம். இதற்கான தனியான ஆப்களும் கேரளாவில் உருவாக்கப்பட்டிருக்கிறதாம். கள்ளுக்கடைகளை எதிர்பார்த்து காய்ந்து போன குடிமகன்களுக்கு கேரளா அரசின் இந்த நடவடிக்கை ஆறுதல் தருவதாக இருக்கலாம்.












Click it and Unblock the Notifications