Kerala Lottery: கடவுள் கண்ணை திறந்துட்டார்! சூப்பர் மார்க்கெட் ஊழியருக்கு 10 கோடி.. கோயிலுக்கு போனவருக்கு அதிர்ஷ்டம்
திருவனந்தபுரம்: கேரளாவில் சம்மர் பம்பர் லாட்டரி டிக்கெட்டில் முதல் பரிசான ரூ.10 கோடி சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்து வரும் பத்மநாபன் என்பவருக்கு அடித்துள்ளது. SB 517026 என்ற லாட்டரி சீட்டை வாங்கிய அவருக்கு வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தி இருக்கிறது. மலப்புரத்தை சேர்ந்த பத்மநாபன் லாட்டரி வாங்கும் பழக்கம் இல்லாதவராம்.
பாலக்காடில் உள்ள கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்ற பத்மநாபன் வரும் வழியில் சம்மர் பம்பர் லாட்டரியில் ஒரு டிக்கெட்டை வாங்கியிருக்கிறார். இந்த டிக்கெட்டுக்கு தான் தற்போது ரூ.10 கோடி பரிசாக அடித்துள்ளது. இதனால் அவர் எல்லையில்லா மகிழ்ச்சியில் திகைத்துள்ளாராம்.

கேரள சம்மர் பம்பர் லாட்டரி
கேரளாவில் லாட்டரி விற்பனையை அரசே நடத்தி வருகிறது. அங்கு தினமும் ரூ.1 கோடி முதல் பரிசு கொண்ட லாட்டரி டிக்கெட்டுகளும், ஆண்டுக்கு சீசனுக்கு ஏற்றார் போல 6 பம்பர் லாட்டரி டிக்கெட்டுகளும் விற்பனை செய்யப்படுகின்றன. இதில் பம்பர் லாட்டரி டிக்கெட்டுகளுக்கு பல கோடி பரிசுகள் கிடைக்கும் என்பதால் லாட்டரி பிரியர்கள் மத்தியில் பம்பர் லாட்டரி சீட்டுகளுக்கு தனி வரவேற்பு இருக்கும்.
அந்த வகையில் தற்போது சம்மர் சீசனை ஒட்டி, கேரளாவில் சம்மர் பம்பர் லாட்டரி டிக்கெட் விற்பனை கடந்த மாதம் தொடங்கியது. ரூ.10 கோடி முதல் பரிசு கொண்ட இந்த லாட்டரி டிக்கெட்டின் விலை ரூ.250 ஆகும். திடீரென நமக்கு பரிசு அடித்துவிடாதா? அடித்தால் வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடலாம் என்ற கனவுடன் கேரளாவை சேர்ந்த லாட்டரி பிரியர்கள் டிக்கெட்டுகளை வாங்கி குவித்து வந்தனர்.
சூப்பர் மார்க்கெட் ஊழியருக்கு ரூ.10 கோடி
இதேபோல் தமிழகத்தை சேர்ந்தவர்களும் நமக்கும் பரிசு அடித்துவிடாதா என்ற ஆசையில் டிக்கெட்டை வாங்கி வந்தனர். டிக்கெட் விற்பனையில் எப்போதும் போலவே பாலக்காடில் அதிக டிக்கெட்டுகள் விற்பனை ஆகின. இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை குலுக்கல் நடந்தது. இதில் முதல் பரிசு ரூ.10 கோடி பாலக்காடில் விற்கப்பட்ட டிக்கெட்டுக்கு தான் விழுந்து இருந்தது தெரியவந்தது.
இதனால் யாருக்கு பரிசு அடித்து இருக்கும் என லாட்டரி பிரியர்கள் எதிர்பார்த்து இருந்தனர். தமிழகத்தின் எல்லை மாவட்டம் என்பதால் தமிழர்கள் யாருக்கேனும் பரிசு அடித்து இருக்குமோ என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் தான் கேரளாவின் மலப்புரத்தை சேர்ந்த பதம்நாபன் என்பவருக்கு இந்த பரிசு அடித்து உள்ளது. கடந்த 8 ஆண்டுகளாக சூப்பர் மார்க்கெட்டில் பணிபுரிந்து வரும் பத்மநாபன் தற்போது இதற்கான பரிசுத் தொகையை கோரியிருக்கிறார்.
கோயிலுக்கு சென்று விட்டு திரும்பிய போது
ஒரே ஒரு டிக்கெட்டில் அவர் தற்போது 10 கோடிக்கு சொந்தக்காரர் ஆகியிருக்கிறார். இதற்கிடையில் அவருக்கு லாட்டரி வாங்கும் பழக்கம் ஏதும் கிடையாதாம்.. பாலக்காடில் உள்ள கோயிலுக்கு சென்று இருந்த பத்மநாபன் வீட்டுக்கு திரும்பும் போது பம்பர் லாட்டரி ஒன்று வாங்குவோம் என வாங்கினாராம். அந்த டிக்கெட்டுக்கு தான் தற்போது ரூ.10 கோடி பரிசு அடித்து இருக்கிறது.
கோழிச்சேனை சூப்பர் மார்க்கெட்டில் 8 ஆண்டுகளாக பணிபுரியும் இவருக்கு, மனைவி ஸ்மிதா மற்றும் பத்தாம் வகுப்பு படிக்கும் ஸ்ரீஹரி என்ற மகனும், ஏழாம் வகுப்பு படிக்கும் பார்வனா என்ற மகளும் உள்ளனர். பரிசு தனக்கு தான் அடித்து இருப்பதை அறிந்ததும் ஒரு நிமிடம் அப்படியே உறைந்து போனாராம். தற்போது அவர்கள் குடும்பத்தினரே எல்லையில்லா மகிழ்சியில் உள்ளனராம். பரிசு டிக்கெட்டை அவர் பரப்பனங்காடியில் உள்ள எஸ்பிஐ வங்கி மேலாளரிடம் ஒப்படைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications