Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி
திருவனந்தபுரம்: கேரளாவில் நேற்று முன் தினம் நடந்த விஷு பம்பர் லாட்டரி சீட்டு (Kerala Lottery) குலுக்கலில், முதல் பரிசு ரூ.12 கோடி கொல்லத்தை சேர்ந்த 75 வயது முதியவர் பொன்னன் என்பவருக்கு அடித்துள்ளது. ஏழையாக இருந்து ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆகியுள்ள பொன்னன், தனக்கு அடித்த லாட்டரி பணத்தை வைத்து கடனை கட்ட முடியாததால் ஜப்தியான வீட்டை மீட்க உள்ளதாக கூறியுள்ளார். மேலும் ஏழ்மை காரணமாக தன் மகனுக்கு திருமணம் செய்து வைக்க முடியாமல் இருந்ததாகவும் தற்போது மகனுக்கு திருமணம் செய்து வைக்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.
கேரள விஷு பம்பரில் முதல் பரிசாக ரூ.12 கோடியை கொல்லத்தை சேர்ந்த பொன்னன் என்பவர் வென்றுள்ளார். 75 வயதான இவர் தனது மனைவி மற்றும் மகனுடன் வசித்து வருகிறார். மகன் வினோத் குமாருக்கு 39 வயது ஆகிறது. சிறிய அளவில் லாட்டரி கடையை நடத்தி இந்த குடும்பம் பிழைத்து வந்துள்ள நிலையில், கடையில் விற்காத ஒரு லாட்டரிக்கு முதல் பரிசு அடித்து வாழ்க்கையே புரட்டி போட்டுள்ளது.

கண்ணை திறந்த லாட்டரி
வறுமையில் தவித்ததால் மகனுக்கு எந்த வரனும் கிடைக்கவில்லை என வேதனையில் இருந்த பொன்னனுக்கு கடவுள் கண் திறந்தது போல லாட்டரியில் பரிசு மழையானது கொட்டியுள்ளது. கடன் வாங்கி சிறிய அளவில் வீடு ஒன்றை பொன்னன் கட்டியுள்ளார். அந்த கடனையும் அடைக்க முடியாமல் தெரிந்தவர்களிடம் அவ்வப்போது கைமாற்று வாங்கி கடனை அடைத்து வந்து இருக்கிறார் பொன்னன். தற்போது அந்த வீடு ஜப்தி செய்யப்பட்டுள்ளது.
வீண் போகாத எதிர்பார்ப்பு
அவரது மனைவி ராதாமனியம்மா (வயது 65) மற்றும் மகன் வினோத் குமார் (39) அனைவருமே லாட்டரி விற்பனை செய்து வந்துள்ளனர். கொரோனா காலத்தில் வேலை போனதால் லாட்டரி விற்க தொடங்கியிருக்கிறார்கள். வீட்டிற்கு பக்கத்திலேயே ஒரு ஸ்டால் அமைத்து ராதாமணியம்மா லாட்டரி விற்பனை செய்து இருக்கிறார். வினோத் நடந்து சென்று லாட்டரி விற்று வந்துள்ளார்.
விஷு பம்பர் லாட்டரியை வாங்கி விற்று வந்த நிலையில், சில டிக்கெட்டுகள் மட்டும் விற்காமல் இருந்துள்ளது. அதில் உள்ள ஒரு லக்கி நம்பர் பார்த்து தனக்காக எடுத்துள்ளார் பொன்னன். அவரது எதிர்பார்ப்பு வீண் போகாமல் அந்த டிக்கெட்டிற்கே பரிசு மழை கொட்டியுள்ளது. 12 கோடி பரிசு அடித்துள்ள நிலையில், அந்த பணத்தை வைத்து தனக்கு உள்ள கடனை அடைக்க திட்டமிட்டுள்ளதாக பொன்னன் கூறியுள்ளார்.
மகனுக்கு திருமணம் செய்து வைப்பேன்
குறிப்பாக ஜப்தியில் உள்ள வீட்டை மீட்டெடுக்க உள்ளதாகவும், மீதமுள்ள பணத்தை வைத்து தனது மகனுக்கு திருமணம் செய்து வைக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். வறுமையின் காரணமாக மகனுக்கு பெண் கூட பார்த்து வைக்க முடியாமல் கஷ்டப்பட்டு வந்துள்ள நிலையில் தான் இந்த பரிசு தனக்கு அடித்தாக அவர் கூறினார். மேலும், தண்ணீர் தேங்கி கிடக்கும் வயலில் மண் நிரப்ப வேண்டும். கடன்களை அடைக்க வேண்டும். மீதமுள்ள பணத்தை வங்கியில் வைத்து அதன் வட்டியை வைத்து வாழ வேண்டும்," என்று பொன்னன் தெரிவித்தார்.














Click it and Unblock the Notifications