"ராட்சசன்".. சாலையில் நின்றிருந்த 8 வயது சிறுமி.. தூக்கி தரையில் அடித்த சைக்கோ.. கேரளாவில் பயங்கரம்
திருவனந்தபுரம்: கேரளாவில் சாலையில் நின்றுக் கொண்டிருந்த சிறுமியை ஒரு நபர் எந்தக் காரணமும் இல்லாமல் தரையில் தூக்கி அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வைரலானதை அடுத்து, அந்த நபரை போலீஸார் கைது செய்துள்ளனர். காயமடைந்த அந்த அப்பாவி சிறுமி தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எந்த நோக்கமும் இல்லாமல் சிறுமியை இப்படி கொடூரமாக தாக்கியவன் ஒரு சைக்கோவாக தான் இருக்க வேண்டும் என்றும், அவர் சிறையில் இருந்து வெளிவர முடியாத அளவுக்கு வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
பிரியாவுக்கு தவறான சிகிச்சை..சாட்சிகளை கலைக்க மாட்டோம்.. மருத்துவர்கள் முன் ஜாமீன் மனு தாக்கல்
அதிகரிக்கும் மனிதனின் குரூரம்..
இன்றைய காலக்கட்டத்தில் மனிதர்களின் மனம் மிக குரூரமாக மாறி வருவது கண்கூடாகவே தெரிகிறது. ஏதும் அறியா குழந்தையை, என்றைக்கு மனிதனால் காம இச்சையோடு பார்க்க முடிந்ததோ, அன்றைக்கே இந்த உலகம் பேரழிவை நோக்கி செல்வது உறுதியாகிவிட்டது. இந்த மனிதப் போர்வையில் சுற்றும் கொடூர மிருகங்களால், குழந்தைகளை குறிப்பாக பெண் குழந்தைகளை வீட்டை விட்டு வெளியே அனுப்புவதற்கே பெற்றோர்கள் அஞ்சும் சூழ்நிலை உருவாகியுள்ளது. அவ்வளவு ஏன்..வீட்டு வாசலில் விளையாடிய குழந்தைகளை கூட தூக்கிச் சென்று சிதைக்கும் சம்பவங்கள் எத்தனையோ நடந்திருக்கின்றன. அப்படியொரு மனித மிருகம் செய்த செயலைதான் இப்போது பார்க்க போகிறோம்.
அழுது கொண்டிருந்த சிறுமி..
கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள மஞ்சேஷ்வர் பகுதியில் இஸ்லாமியர்களின் மதரஸா பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இங்கு பயிலும் 8 வயது சிறுமி ஒருவர் நேற்று மாலை பள்ளிக்கு வெளியே உட்கார்ந்து கொண்டு அழுதுக் கொண்டிருந்தார். இந்நிலையில், வழக்கமாக அவரை அழைத்துச் செல்வதற்காக சிறுமியின் மாமா அங்கு வந்திருக்கிறார். ஆசிரியர்கள் ஏதோ திட்டியிருப்பார்கள் என நினைத்த அவர், சிறுமியை தூக்கி நிற்க வைத்துள்ளார். அப்போது சிறுமி வலியில் துடித்துள்ளார்.
தூக்கி அடித்த ராட்சஷன்..
இதைக் கண்டு பதறிய சிறுமியின் மாமா, அவரிடம் என்ன நடந்தது என விசாரித்துள்ளார். அப்போது சிறுமி கூறியது அவரை குலைநடுங்கச் செய்தது. சாலையில் நின்றுக் கொண்டிருந்த போது திடீரென வந்த ஒருவர் தன்னை அடித்ததாக சிறுமி கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் மாமா, பள்ளிக்கு வெளியே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை பார்த்துள்ளார். அப்போது, சிறுமி வெளியே நின்று கொண்டிருக்கையில், உடல் பருமனாகவும் உயரமாகவும் வந்த நபர் ஒருவர், சிறுமிக்கு அருகே சென்று சத்தமாக கத்திவிட்டு, அவரை கழுத்தை பிடித்து தூக்கி 'டமார்' என தரையில் அடிக்கிறார். பிறகு ஏதும் நடக்காது போல அங்கிருந்து நடந்து செல்கிறார். இதில் அந்த சிறுமிக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
கைது நடவடிக்கை..
இதை பார்த்து அதிர்ந்த சிறுமியின் மாமா இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில், சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போலீஸார், இந்த இரக்கமற்ற செயலில் ஈடுபட்டது அதே பகுதியைச் சேர்ந்த அபுபக்கர் சித்திக் (40) என்பதை கண்டுபிடித்தனர். பின்னர் அபு பக்கரை கைது செய்த போலீஸார், அவர் மீது கொலை முயற்சி, போக்சோ ஆகிய பிரிவுகளின் கீழ் ஜாமீனில் வெளிவர முடியாதபடி வழக்கு பதிவு செய்தனர். இந்த சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.