இனி கல்லூரியில் கட்டணம் கிடையாது.. கேரளாவில் பட்டப்படிப்பு வரை இலவசம்.. பட்ஜெட்டில் அறிவிப்பு
திருவனந்தபுரம்: கேரளாவில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் கலை மற்றும் அறிவியல் பிரிவுகளுக்கான இளநிலை பட்டப்படிப்பு பயிலும் மாணவர்கள் இனி கல்வி கட்டணம் செலுத்த தேவையில்லை. மாநிலத்தில் மாணவ-மாணவிகள் இளநிலை பட்டப்படிப்பு வரை இலவசமாக கற்கலாம் என்று நேற்று தாக்கல் செய்யப்பட்ட மாநில பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனால் மாணவ-மாணவிகள் ஹேப்பியாகி உள்ளனர்.
அண்டை மாநிலமான கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பினராயி விஜயன் முதல்வராக செயல்பட்டு வருகிறார். தமிழகத்தை போல் விரைவில் கேரளாவிலும் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில் தான் தற்போதைய கேரளா அரசின் கடைசி பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. கேரளா நிதித்துறை அமைச்சர் கேஎன் பாலகோபால் தாக்கல் செய்தார். அந்த பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.
அதில் கவனம் ஈர்த்த ஒரு அறிவிப்பு தான் கேரளாவில் பட்டப்படிப்பு வரை இலவசமாக பயிலலாம் என்பது. தற்போது அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகள். தனியார் கல்லூரிகளில் கலை மற்றும் அறிவியல் பாடங்களை பட்டப்படிப்பு படிக்கும் மாணவ-மாணவிகள் கட்டணம் செலுத்த வேண்டி உள்ளது. தற்போதைய அறிவிப்பின்படி கேரளாவில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவ-மாணவிகள் கட்டணம் இன்றி இளநிலை பட்டப்படிப்பை படிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் பட்டப்படிப்பு வரை இலவச கல்வி திட்டத்தை அறிவித்த முதல் மாநிலம் என்ற பெருமையை கேரளா பெற்றுள்ளது. மேலும் 1 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு விபத்து காப்பீடு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிஎச்டி பயில்வோருக்கு உதவித்தொகை வழங்க ரூ.38.76 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பல்கலைக்கழகங்களின் செயல்பாட்டை வலுப்படுத்த ரூ.259 கோடி பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications