அவர் கேட்டார், அவங்க பதில் சொன்னாங்க.. பொன். ராதாகிருஷ்ணனை தடுத்ததில் தப்பில்லை.. பினராயி
கேரள போலீசார் மீது தவறில்லை என பினராயி விஜயன் கூறியுள்ளார்.
திருவனந்தபுரம்: "அவர் கேட்டார்.. அதற்கு பதில் சொன்னாங்க.. கடைசியில வாக்குவாதமா போயிடுச்சு. தடுத்து நிறுத்திய போலீஸார் மீது ஒரு தப்பும் இல்லை" என்று பொன்.ராதாகிருஷ்ணனை கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றஞ்சாட்டி உள்ளார்.
ஐயப்பனை வழிபட சபரிமலைக்கு மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சென்றிருந்தார். அவருடன் கட்சிக்காரர்கள் சிலரும் கூட சென்றிருக்கிறார்கள்.
அப்போது சாமி தரிசனம் செய்ய காரில் வந்து கொண்டிருந்தவரை போலீசார் தடுத்து நிறுத்தினர். அமைச்சரை மட்டும்தான் செல்ல அனுமதிப்போம், கூட வந்திருப்பவர்களை அனுமதிக்க மாட்டோம் என்று சொல்லவே வாக்குவாதம் நடந்திருக்கிறது.

முழு அடைப்பு
ஒரு மத்திய இணை அமைச்சரின் காரை நிறுத்தி சோதனை செய்து, வாக்குவாதம் நடத்தியது மிகுந்த அவமானத்துக்குரிய ஒன்றாக பேசப்பட்டது. பாஜக தலைவர்களிடையே கடும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. பலர் கண்டனங்களை பதிவிட்டார்கள். கேரள போலீசாரை கண்டித்து குமரியில் நேற்று பாஜக சார்பில் முழு அடைப்பு போராட்டமும் நடத்தப்பட்டது.

போலீசார் நடவடிக்கை
இதற்கெல்லாம் தற்போது அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் விளக்கம் அளித்துள்ளார். இதுபற்றி அவர் சொன்னதாவது: "சபரிமலையில் உள்ள பாதுகாப்பு போலீசார் சரியான முறையில்தான் நடந்து வருகிறார்கள். யாரெல்லாம் வன்முறையில் ஈடுபடுகிறார்களோ, அவர்கள் மீது போலீஸ் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

அவமரியாதை இல்லை
சபரிமலை சென்ற மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனிடம் காவல்துறை அதிகாரி யதீஷ் சந்திரா அவமரியாதையாக நடக்கவில்லை. தன்னுடன் வந்த எல்லா வாகனங்களையும் பம்பைக்கு அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் கேட்டிருக்கிறார். அப்போது அவருடன் பாதுகாப்பு போலீசார் வாக்குவாதம் செய்யக்கூடிய நிலைமை ஏற்பட்டுவிட்டது. இதில் என்ன தவறு இருக்கிறது? ஆனால் மத்திய அமைச்சரை யாரும் அவமரியாதையாக நடத்தவில்லை.

ஐகோர்ட்டில் அறிக்கை
சபரிமலை செல்லும் உண்மையான பக்தர்களுக்கு காவல்துறையினர் எந்த தடையும் விதிக்கவில்லை என்று ஐ.ஜி கேரள உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். இதை உயர் நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டுள்ளது.

போராட்ட பூமியா?
கேரளாவில் உள்ள போலீஸ் அதிகாரிகள் பெரும்பாலும் வெளி மாநிலங்களிலிருந்து வந்து பணியாற்றுபவர்கள். ஆனால் அவர்கள் குடும்பத்தினர் வீடுகள் மீது தாக்குதல் நடத்த ஆர்எஸ்எஸ் திட்டமிட்டுள்ளதாக எனக்கு தகவல் வந்துள்ளது. சபரிமலை பிரச்னையை மையமாக வைத்து கேரளாவை போராட்ட பூமியாக்க யார் நினைத்தாலும் அது நடக்காது என்றார்.












Click it and Unblock the Notifications