கேரள மக்களிடம் எடுபடாத தங்கக்கடத்தல் குற்றச்சாட்டு... வெற்றிமுகத்தில் இடதுசாரி ஜனநாயக முன்னணி..!
திருவனந்தபுரம்: கேரளாவில் ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசு மீது சபரிமலை விவகாரம் தொடங்கி தங்கக்கடத்தல் வரை எதிர்க்கட்சிகள் பல்வேறு புகார்களை முன்வைத்தும் அது மக்கள் மத்தியில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதை உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் பிரதிபலிக்கின்றன.
கேரளாவில் மொத்தம் உள்ள 941 கிராம பஞ்சாயத்துக்களில் 450-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றிபெற்று மக்கள் செல்வாக்கை தக்கவைத்துள்ளார் பினராயி விஜயன்.
Recommended Video

இது இன்னும் 4 மாதங்களில் நடைபெறவுள்ள கேரள சட்டமன்றத் தேர்தலில் எதிரொலிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

யு.டி.எஃப். கூட்டணி
கேரளாவை பொறுத்தவரை கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளடங்கிய இடதுசாரி ஜனநாயக கூட்டணிக்கும் - காங்கிரஸ், முஸ்லீம் லீக் உள்ளடங்கிய ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும் இடையே தான் போட்டி. இந்தப் போட்டியில் யு.டி.எஃப்.கூட்டணியைக் காட்டிலும் எல்.டி.எஃப். கூட்டணி அதிக முறை கேரளாவில் வெற்றி பெற்றிருக்கிறது.

உள்ளாட்சித் தேர்தல்
இந்நிலையில் இப்போது நடைபெற்ற கேரள உள்ளாட்சித் தேர்தலிலும் ஆளும் இடதுசாரி ஜனநாயக கூட்டணி அதிக இடங்களில் வென்றுள்ளது. சபரிமலை விவகாரம் தொடங்கி தங்கக்கடத்தல் வழக்கு வரை பினராயி அரசு மீது எதிர்க்கட்சிகள் பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்தினர். இருப்பினும் அந்த குற்றச்சாட்டுகள் எதுவும் மக்கள் மத்தியில் எடுபடவில்லை என்பதை இன்று வெளியாகியுள்ள கேரள உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் உணர்த்தியுள்ளன.

கிளை வாரியாக
இடதுசாரி ஜனநாயக முன்னணியின் இந்த வெற்றிக்கு காரணமாக பார்க்கப்படுவது அடிமட்டம் வரை அந்தக் கூட்டணிக்கு உள்ள கட்டமைப்பும் மக்கள் அணுகுமுறையும் தான். அதற்கு உதாரணமாக கூறவேண்டும் என்றால், எல்.டி.எஃப். அரசாங்கத்தில் உள்ள ஒரு அமைச்சரை யாரும் எப்போதும் சந்திக்கலாம், எதைப்பற்றியும் முறையிடலாம். இதே காங்கிரஸ், முஸ்லீம் லீக் உள்ளடங்கிய ஐக்கிய ஜனநாயக கூட்டணி அரசாங்கத்தின் அமைச்சரை சந்திக்க வேண்டும் என்றால் அதற்கு ஏராளான கட்டுப்பாடுகளும் வழிமுறைகளும் இருக்கும்.

இன்னும் 4 மாதம்
கேரள உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து பார்க்கப்படுகிறது என்றால், அங்கு இன்னும் 4 மாதத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் இந்த முடிவுகள் எதிரொலிக்கக் கூடும் என்பதால் தான். இதனிடையே நண்பகல் 12 மணி நிலவரப்படி கேரளாவில் உள்ள 6 மாநகராட்சிகளில் எல்.டி.எஃப் மூன்றிலும், யு.டி.எஃப். மூன்றிலும் சரிசமமாக வெற்றிமுகத்தில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications