வைகாசி மாத பூஜைகளுக்காக மே 14ல் சபரிமலை கோவில் நடை திறப்பு - பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வைகாசி மாத பூஜைகளுக்காக வரும் 14ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. கொரோனா லாக்டவுன் அமலில் உள்ளதால் பக்தர்கள் கோவிலுக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம் : வைகாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வரும் 14ம் தேதி திறக்கப்படுகிறது. 5 நாட்கள் பூஜை நடைபெறும் எனவும் பக்தர்கள் யாரும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என திருவிதாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.

பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த ஆண்டு கொரோனா காலமாக பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டது. ஐப்பசி மாதம் தொடங்கி கடந்த மாதம் வரை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர்.
ஆன்லைனில் முன்பதிவு செய்யும் 5,000 பக்தர்கள் தினசரி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். பக்தர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கேரளாவில் கொரோனாவின் தீவிரம் அதிகரித்ததை தொடர்ந்து, இன்று முதல் வரும் 16ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இந்த 9 நாட்களும் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பக்தர்கள் அனுமதி இல்லை அரசு அறிவித்துள்ளது.
இந்த நிலையில் வைகாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வரும் 14ஆம் தேதி திறக்கப்படுகிறது. 19ம் தேதி வரை கோயில் நடை திறந்து பூஜைகள் நடக்கும். ஆனால் இந்த நாட்களில் பக்தர்கள் யாரும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என திருவிதாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications