வெறும் 60 மணி நேரத்தில் 2870 கிமீ.. நெகிழ வைத்த ஆம்புலன்ஸ் டிரைவர்.. ரியல் "அயோத்தி" சம்பவம்
திருவனந்தபுரம்: அயோத்தி படத்தில் வருவது போல் ரியலாக ஒரு சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது. உயிருக்கு போராடிய மூதாட்டி கடைசி ஆசையாக சொந்த ஊரான மேற்கு வங்கத்தில் வாழ விரும்பினார். அவரது ஆசையை நிறைவேற்ற கேரளாவில் இருந்து மேற்கு வங்கத்திற்கு 60 மணி நேரத்தில் ஆம்புலன்சை ஓட்டியிருக்கிறார் டிரைவர்.
வட இந்தியாவைச் சேர்ந்த பலர் தமிழ்நாடு, கேரளா, கர்நாடாகாவில் கூலி வேலை செய்து வாழ்ந்து வருகிறார்கள். இவர்களுக்கு சொந்த ஊர் செல்வது என்பது வருடத்தில் ஒருமுறை அல்லது இருமுறை தான் சாத்தியம். மாதம் 8000 கூட சம்பாதிக்க முடியாத அளவிற்கு வறுமையில் உள்ள மக்கள், மாதம் 15000 முதல் 20000 சம்பளம் கிடைக்கும் என்பதால் தான் கேரளா மற்றும் தமிழ்நாட்டிற்கு வருகிறார்கள். இங்கு அவர்கள் நன்கு சம்பாதித்த போதிலும், சொந்த ஊரில் போய் வாழ முடியாத ஏக்கம் அதிகமாகவே இருக்கிறது.

அப்படி ஒரு பெண் தான் 70 வயாகும் போதினி பஹான்.. இவர் மேற்கு வங்காள மாநிலம் ராய்கஞ்ச் பகுதியை சேர்ந்தவர்.. பஞ்சம் பிழைக்க கேரள மாநிலம் கொல்லம் கருநாகப்பள்ளி கிராமத்திற்கு வந்தவர்.. அங்கேயே தனது மகன் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்த நிலையில் மூதாட்டி போதினி பஹான் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டார். இதனால் படுத்த படுக்கையான அவருக்கு சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்று ஆசை ஏற்பட்டது.
எல்லோருக்கும் அவரவர் கடைசி காலக்கட்டத்தில் எங்கு இருந்தாலும் சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை இருக்கும். அந்த ஆசைதான் போதினி பஹானுக்கும் இருந்தது. அவரது கடைசி ஆசையாகவும் இருந்தது. இதனை பார்த்த அவரது மகன் சவுதீ, தனது தாய் போதினி பஹானை சொந்த ஊருக்கு எப்படியாவது அழைத்துச் சென்று விட வேண்டும் என்று விரும்பினார்.
ஆனால் படுத்த படுக்கையாக உள்ள தனது தாயை விமானத்தில் அழைத்து செல்ல வேண்டும் என்றால் நிறைய பணம் செலவாகும்.. இதனால் தனது அம்மாவை தாயை மேற்கு வங்கத்தில் ஆம்புலன்சில் அழைத்துச் செல்ல முடிவு செய்தார். இதற்காக அவர் கொல்லம் கருநாகப்பள்ளியில் உள்ள ஆம்புலன்சு நிறுவனத்தை தொடர்பு கொண்டு கேட்டார்.
மூதாட்டியை சொந்த ஊருக்கு அழைத்துச் செல்ல திருவனந்தபுரத்தை சேர்ந்த 28 வயதாகும் ஆம்புலன்ஸ் டிரைவர் அருண்குமாரிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவர்களது பயணம் கடந்த மாதம் 21- ந் தேதி காலை 7 மணிக்கு கேரளாவில் கொல்லத்தில் இருந்து தொடங்கியது.
அருண்குமார் ஓட்டிய ஆம்புலன்சில் மூதாட்டி போதினி பஹான், அவரது மருமகள் மற்றும் பேரக்குழந்தைகளும் இருந்தனர். அருண்குமார் மட்டுமே ஆம்புலன்சை ஓட்டினார்கள். மூதாட்டி பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டவர் என்பதால் அவரது உடல் நிலைக்கு ஏற்றாற்போல் ஆம்புலன்சை அருண் குமார் இயக்கினார். 23-ந் தேதி மாலை 4.30 மணிக்கு ராய்கஞ்சுக்கு ஆம்புலன்ஸ் சென்றடைந்தது.
கொல்லத்தில் இருந்து ராய்கஞ்சுக்கு இடையேயான 2 ஆயிரத்து 870 கிலோமீட்டர் தொலைவை 60 மணி நேரத்தில் ஓட்டி சென்றடைந்தார் ஆம்புலன்ஸ் டிரைவர் அருண் குமார். அவர் கேரளாவில் இருந்து தமிழ்நாடு வழியாக ஆந்திரா சென்று, அதன்பின்னர் தெலுங்கானா, ஒடிசா ஆகிய மாநிலங்களை கடந்து மேற்கு வங்கத்தை 60 மணி நேரத்தில் அடைந்தார்.
சாலையில் மிக கவனமாக ஓட்டிச் சென்று, சேர வேண்டிய இடத்துக்கு ஆம்புலன்சில் மூதாட்டியை அழைத்துச் சென்ற அருண்குமாரை பலரும் பாராட்டி உள்ளார்கள். படுத்த படுக்கையாக இருந்த மூதாட்டியின் இறுதி ஆசையை நிறைவேற்றி ஆம்புலன்சு டிரைவர் அருண் குமாருக்கு பாராட்டுக்கள் சமூக வலைதளங்களில் குவிந்து வருகிறது.












Click it and Unblock the Notifications