ஈரக்குலை உதறுது.. சுவரை இடித்து, கதவை உடைத்து.. கண் முன்னாடி ஒரு உசுரு.. "ரேடியோ காலர்" கேரளா வயநாடு
திருவனந்தபுரம்: இன்று காலையில் வயநாட்டில் நடந்த சம்பவம் ஒன்று மக்களை அதிர செய்து வருகிறது.. இது தொடர்பான வீடியோவும் இணையவாசிகளை கதிகலங்க செய்துவருகிறது.
கேரள மாநிலம், வயநாட்டில் அமைந்துள்ளது முத்தங்கா வனவிலங்குகள் சரணாலயம். யானை மற்றும் புலிகளின் முக்கிய வாழ்விடங்களில் ஒன்றாக இந்த சரணாலயம் அமைந்திருக்கிறது.. இங்கு கடந்த சில நாட்களாகவே, காட்டு யானைகள், புலிகள், சிறுத்தைகள் உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுடிகிறது..

வனவிலங்குகள்: உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக வனவிலங்குகள் சாலையைக் கடக்க வேண்டிய சூழல் வருகிறது.. அப்படி சாலையைக்கடக்கும் வனவிலங்குகள், சில சமயங்களில் வாகனங்களில் அடிபட்டு இறக்கும் பரிதாப நிலை ஏற்படுகிறது. சில சமயங்களில், இந்த விலங்குகள் தாக்கி பொதுமக்கள் தாக்கப்படுவதும் அதிகரித்து வருகிறது.
இப்படித்தான், வயநாட்டில் 2 மாதத்துக்கு முன்பு விவசாயி மீது புலி ஒன்று பாய்ந்துவிட்டது.. அவர் மீது பாய்ந்து கடித்து குதறி, அவரது உடலை பாதி தின்றுவிட்டு, தப்பி ஓடிவிட்டது..
மக்னா யானை: சில நாட்களுக்கு முன்புகூட, கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில், மக்னா யானை ஒன்று அட்டகாசம் செய்துள்ளது.. அங்கிருக்கும் குடியிருப்பு பகுதிகளிலேயே சுற்றி சுற்றி திரியவும், வனத்துறையினர் அந்த மக்னா யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். அந்த யானைக்கு ரேடியோ காலர் பொருத்தப்பட்டு, மறுபடியும் பந்திப்பூர் காட்டுப்பகுதியில் கொண்டுவந்து விடுவித்தனர்.. எனினும், அதன் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்தனர்..
ஆனால், 4 நாட்களுக்கு முன்பு அந்த மக்னா யானை, கர்நாடகாவிலிருந்து கேரளாவுக்கு வந்துவிட்டது. வயநாட்டு பகுதியில் சுற்றி திரிய ஆரம்பித்தது. இதையும் வனத்துறையினர் கண்காணித்தபடியே இருந்தனர்.
பொதுமக்கள்: இந்நிலையில், இன்று காலை திடீரென வயநாடு அருகிலுள்ள மணந்தவாடி குடியிருப்பு பகுதிக்குள் இந்த யானை நுழைந்துவிட்டது.. விடிகாலையில், ரோட்டில் நடந்து கொண்டிருந்த யானையை பார்த்ததுமே, பொதுமக்கள் அலறியடித்து கொண்டு ஓடினார்கள்.. அந்த யானை எல்லா தெருக்களுக்கும் சென்றது..
ஒரு தெருவுக்குள் நுழைந்தபோது, அஜி என்ற நபர் உட்பட 10-க்கும் மேற்பட்டோர் அங்கிருந்தனர்.. திடீர்னு யானையை பார்த்ததுமே அதிர்ச்சி அடைந்துவிட்டனர். அதனால், அங்கிருந்த ஒரு வீட்டின் காம்பவுண்ட் ஏறி உள்ளே குதித்து தப்பிக்க முயன்றார்கள்.
அஜி பரிதாபம்: ஆனால், அதற்குள் யானை, அந்த வீட்டின் இரும்பு கேட்டையே உடைத்து கொண்டு, வீட்டிற்குள் ஆவேசமாக புகுந்தது.. உயிரை கையில் பிடித்து கொண்டு ஓட முயன்ற அஜியை கடுமையாக தாக்கியது. அஜி அங்கேயே சுருண்டு விழுந்து இறந்தார். அந்த யானை இத்துடன் விடவில்லை.. அங்கிருந்த பகுதிகளில் தாறுமாறாக ஓடியதுடன், அதே பகுதியில் இருந்த இன்னொரு வீட்டையும் இடித்து நாசமாக்கியது.. இந்த வீடியோதான் இணையத்தில் வெளியாகி பதற செய்துள்ளது.

உயிரிழந்த அஜி என்பவருக்கு 42 வயதாகிறது.. இவர் ஒரு டிராக்டர் டிரைவர் என்பது தெரியவந்துள்ளது. இந்த தகவலறிந்து வனத்துறையினர் விரைந்து வந்து பாதுகாப்பை பலப்படுத்தியிருக்கிறார்கள்.. அந்த பகுதி முழுவதுமே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது..
ஆவேசம்: ஆனால் பொதுமக்கள் கடுங்கோபத்தில் இருக்கிறார்கள்.. இந்த மக்னா யானைக்கு ரேடியோ காலர் பொருத்தப்பட்டிருந்தும்கூட, வனத்துறையினர் எப்படி அசால்ட்டாக விட்டுவிட்டார்கள்? முறையாக கண்காணிக்க தவறிவிட்டார்களே? என்று பொதுமக்கள் ஆவேசமாக குற்றம்சாட்டுகிறார்கள்.. காம்பவுண்ட் சுவரை உடைத்து, இரும்புக்கேட்டையும் தகர்த்து, ஒரு உசுரையும் அநியாயமாக மிதித்தே கொன்றுவிட்டது இந்த மக்னா...!!












Click it and Unblock the Notifications