பச்சை சிக்னல்.. ஒரே ரூமில் 10 வருடங்கள்.. பகீரை கிளப்பிய ரகசிய ஜோடி.. முறைப்படி நடந்த திருமணம்
10 வருடமாக பூட்டி வைத்த காதலியை திருமணம் செய்துள்ளார் காதலன்
திருவனந்தபுரம்: 10 வருடங்களாக, தன்னுடைய பெற்றோருக்கே தெரியாமல் தன்னுடைய வீட்டிற்குள் காதலியை மறைத்து வைத்து வாழ்க்கை நடத்திய காதலன் குறித்த புதுதகவல் வெளியாகி உள்ளது.. இந்த காதல் ஜோடிக்கு முறைப்படி திருமணம் நடந்துள்ளது.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அயிலூர் கிராமத்தை சேர்ந்தவர் ரஹ்மான்... 34 வயதாகிறது.. இவர் வீட்டு பக்கத்திலேயே வசித்து வரும் பெண் சாஜிதா.. 28 வயதாகிறது..
கடந்த 10 வருடங்களுக்கு முன் சாஜிதா திடீரென மாயமாகிவிட்டார்.. அப்போது அவருக்கு வயது 18... இதனால் பதறிப்போன சாஜிதாவின் பெற்றோர் 2010-ல் நெம்மாரா ஸ்டேஷனில் புகார் தந்தனர்..

விசாரணை
போலீசாரும் புகாரின்பேரில், அருகில் வசித்து வந்த ரஹ்மான் உள்பட அவரது குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.. ஆனால், சாஜிதா பற்றி தங்களுக்கு எதுவும் தெரியாது என்று சொல்லிவிட்டனர். இந்தநிலையில்தான், 2 மாதத்துக்கு முன்பு, சாஜிதாவை ரஹ்மான் தன் வீட்டிலேயே மறைத்து வைத்திருந்த விஷயம் வெளியே தெரியவந்தது..

சாஜிதா
கடந்த 10 வருடங்களாகவே அந்த பெண்ணை மறைத்து வைத்துள்ளார்.. தங்கள் காதலுக்கு சாஜிதா வீட்டில் எதிர்ப்பு தெரிவிக்கவும், வேறு வழியில்லாமல் தன்னுடைய சிறிய வீட்டிலேயே, அதுவும் தன்னுடைய பெற்றோருக்கே தெரியாமல் மறைத்து வைத்து வந்துள்ளார் ரஹ்மான்.. அந்த ரூமில்தான் சாஜிதாவுக்கு சாப்பாடு தந்துள்ளார்.. ஆனால் அந்த குட்டி ரூமில் ஒரே ஒரு ஜன்னல் மட்டுமே இருந்துள்ளது.. தேவைப்படும்போது அந்த கம்பிகளை அகற்றி வெளியே வரலாம்..

பாத்ரூம்
மற்றபடி சஜிதா கழிப்பறையை பயன்படுத்த இரவில் மட்டுமே வெளியே சென்றுவந்துள்ளார்.. அதேபோல அந்த கம்பிகளை அகற்றிவிட்டு, ஜன்னலுக்கு வெளியே குதித்து வீட்டிற்கு வெளியே இருக்கும் குளியலறைக்கு செல்வாராம்.. ஒருவேளை சாஜிதாவுக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டால், ரஹ்மான் மருந்துகளை மட்டும் வாங்கி வந்து தருவார்.. ரூமில் ஒரே ஒரு சின்ன டிவி இருந்துள்ளது.

ரகசிய அறை
சிறிய அறைக்குள் இப்படி ஒரு பாதுகாப்பை ரஹ்மான் செய்ய காரணம், அவர் ஒரு எலக்ட்ரீசியன்.. அந்த ரூமுக்காக தனி பூட்டு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார்.. சில கரண்ட் கம்பிகளை கதவுக்கு வெளியே வைத்து, அவரது குடும்ப உறுப்பினர்களை தொடக்கூடாது என்றும் சொல்லி வந்துள்ளார்.. அவரது குடும்பத்தினருக்கு ரஹ்மான் நடவடிக்கை தொடர்பாக சந்தேகம் வந்துள்ளது.. ஆனாலும் மனநல பிரச்சனை இருக்கும் என்று நினைத்துவிட்டனர்.

கிராமம்
இதனிடையே, லாக்டவுன் வந்துவிடவும், ரஹ்மானால் குடும்பம் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.. அதனால், மார்ச் மாதம் இந்த ஜோடி, வீட்டை விட்டு வெளியேறி, பாலக்காட்டில் உள்ள விதானசேரி கிராமத்தில் வாடகை வீட்டிற்கு சென்றுள்ளது.. அப்போதுதான், மகனை காணோம் என்று ரஹ்மான் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர்.

கோர்ட்
போலீசாரும் ரஹ்மானை தேடி வந்த நிலையில்தான், ஜுன் 8 ம் தேதி, ரஹ்மானின் சகோதரர் அவரை வழியில் பார்த்துவிட்டு, போலீசுக்கும் தகவல் சொல்லி உள்ளார்.. போலீசார் ரஹ்மான் தங்கியிருந்த வீட்டை சுற்றி வளைத்தபோதுதான், இந்த ஜோடியின் விசித்திர கதை வெளியே தெரிந்தது. இதையடுத்து, 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.. ஒன்றாக வாழ விருப்பம் என்று கோர்ட்டில் செல்லவும், ரஹ்மானுடன் செல்ல சாஜிதா அனுமதிக்கப்பட்டார்... இதையடுத்து தங்கள் மகளை ரஹ்மானுக்கே திருமணம் செய்து வைக்க சாஜிதா பெற்றோர் பச்சை கொடி காட்டிவிட்டனர்.. தங்கள் மகளுக்கு முறைப்படி திருமணமும் செய்து வைத்துள்ளனர்..

பதிவு திருமணம்
உள்ளூரில் உள்ள சப்-ரிஜிஸ்திரார் அலுவலகத்தில், சிறப்பு திருமண சட்டத்தின்படி பதிவு திருமணம் செய்துள்ளனர். தங்களின் திருமணத்துக்கு வந்திருந்தவர்களுக்கு ரஹ்மான் இனிப்புகளை வழங்கி வரவேற்றார்.. இந்த திருமணம் குறித்து அவர் கூறும்போது, "இனி நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ போகிறேன்" என்றார்... ஆனால் ரஹ்மான் தரப்பில் பெற்றோர் உட்பட யாருமே இந்த திருமணத்தில் கலந்து கொள்ளவில்லையாம்.












Click it and Unblock the Notifications