கேரளாவில் யூடியூப் பார்த்து ஒயின் தயாரித்த மாணவன்; சக மாணவனுக்கு வாந்தி பேதி.. தூக்கிய போலீஸ்!
திருவனந்தபுரம்: கேரளாவில் அரசுப்பள்ளியில் படித்து வரும் 12 வயது மாணவன் யூடியூப் பார்த்து ஒயின் தயாரித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போதைய நவீன உலகில் எதற்கெடுத்தாலும் மொபைல் என்று சொல்லும் அளவிற்கு டெக்னாலஜி உயர்ந்துவிட்டது.
ஒருவருக்கு பணம் அனுப்ப வேண்டும் என்றால் கூட நெட்பேங்கிங்க், கூகுள்பே,போன்பே என பல ஆப் வசதிகளுடன் பேங்க் வாசலை மிதிக்காமல் சில நொடிகளில் அனுப்பி விடுகிறோம்.

யூடியூப் தளம்
இதேபோல மொபைலில் மிக முக்கிய இடத்தை வகிக்கிறது யூடியூப். சிறு குழந்தைகள் பாட்டு கேட்பதற்கும், பெண்களுக்கு சமையல் சொல்லி கொடுக்கவும் என பல வழிகளில் மக்கள் யூடியூப் பயன்படுத்தி வருகின்றனர். பாடல்கள், திரைப்படங்கள், டிரெண்டிங் வீடியோக்கள், சமையல் நிகழ்ச்சிகள் என பல சுவாரசியமான வீடியோக்களும் இதில் இருக்கின்றன. இதில் யூடியூப் பார்த்து சமையல் செய்வது, டான்ஸ் கற்றுக்கொள்வது போன்றவற்றுக்கு மட்டுமல்லாமல் சில தேவையில்லாத தயாரிப்புகளை மேற்கொள்ளும் விதமான வீடியோக்களையும் இதில் பதிவிடுகின்றனர்.

யூடியூப் பார்த்து ஒயின் தயாரித்த மாணவன்
குறிப்பாக யூடியூப் பார்த்து பிரசவம் பார்ப்பது, நாட்டு வெடிகுண்டுகள் தயாரிப்பது போன்ற தவறான விஷயங்களையும் இதில் பார்த்து ஒருசிலர் கற்று வருகின்றனர். இதில் அண்மையில் கூட யூடியூப் வீடியோ பார்த்து மனைவிக்கு பிரசவம் பார்த்ததில் அவரது குழந்தை பரிதாபமாக இறந்தது நினைவுகூரதக்கது. தற்போது இந்த சம்பவத்தை நினைவுப்படுத்தும் வகையில், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அரசுப்பள்ளியில் படிக்கும் ஒரு 12 வயது மாணவன் யூடியூப் மூலம் வீடியோ பார்த்து ஒயின் தயாரித்துள்ளார். மேலும் அதை பள்ளி நண்பர் ஒருவருக்கு குடிக்க கொடுத்த நிலையில், அந்த மாணவனுக்கு வாந்தி பேதி ஏற்பட்டதாலும், அவனுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாலும் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

நண்பர்களுக்கு வழங்கினான்
திருவனந்தபுரம் அருகே உள்ள பள்ளியில் படித்து வரும் 12 வயது மாணவன் யூடியூப் பார்த்து திராட்சையினால் தயாரிக்கப்படும் ஒயின் தயாரித்துள்ளார். வீடியோவில் குறிப்பிட்டப்படி வீட்டில் இருந்த திராட்சை பழங்களை வைத்து அவர் இந்த ஒயின் தயாரித்துள்ளார். பின்னர் அதோடு விடாமல் அந்த ஒயினை பள்ளிக்கு எடுத்து சென்று தன சக மாணவருக்கு அருந்த கொடுத்துள்ளார். அந்த மாணவனும் ஒயினை குடித்துள்ளார். இந்த நிலையில் சிறிது நேரத்தில் அவனுக்கு வாந்தி பேதி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பதறிப்போன அவனது பெற்றோர் மாணவனை ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

சட்டப்படி நடவடிக்கை
இதையடுத்து இந்த விவகாரம் அங்குள்ள போலீசாருக்கு தெரியவர, மாணவனது வீட்டில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். மேலும் அவரது நண்பர்களுக்கு கொடுத்த ஒயினின் மாதிரியை பரிசோதனைக்காக எடுத்து சென்றனர். பள்ளி மாணவன் கூறுகையில், 'திராட்சை பழத்தை வைத்தே ஒயின் தயாரித்ததாகவும் போதைக்காக வேறு ஏதும் சேர்க்கவில்லை' என்றும் தெரிவித்தார். போலீசார் கூறுகையில், ''ஆய்வுக்கு பின்னர் தான் இதில் என்னென்ன கலக்கப்பட்டது என்று தெரியவரும். மாணவன் சட்டவிரோத செயலில் ஈடுபட்டது தெரியவந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று கூறினார். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த மாணவன் தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications