“அரிதினும் அரிதான கேஸ்.. நம்பிக்கை துரோகம்” கிரீஷ்மாவுக்கு தூக்கு தண்டனை விதிக்க காரணமான இறுதி வாதம்
திருவனந்தபுரம்: நாட்டையே உலுக்கிய ஷாரோன் ராஜ் என்ற இளைஞரை காதலி கிரீஷ்மா ஜூஸ் மற்றும் கஷாயத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்த விவகாரத்தில் கிரிஷ்மாவிற்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தூக்கு தண்டனை விதிக்கப்பட, அரசு தரப்பின் இறுதி வாதம் முக்கிய காரணமாக கருதப்படுகிறது.
தமிழக எல்லையான கன்னியாகுமரியை ஒட்டி உள்ள கேரள மாநிலம் பாறசாலையை சேர்ந்தவர் ஷாரோன் ராஜ். இவர் கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்தார். களியக்காவிளையை சேர்ந்த கிரீஷ்மா என்ற கல்லூரி மாணவியை காதலித்து வந்தார்.

உலுக்கிய ஷாரோன் கொலை வழக்கு
இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து ஷாரோன் ராஜ் திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தனது மகன் மரணத்தில் அவரது காதலி கிரீஷ்மா மீது சந்தேகம் தெரிவித்து ஷாரோன் ராஜின் பெற்றோர் பாறசாலை போலீசில் புகார் செய்தனர். குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில், ஷாரோன் ராஜுக்கு, அவரது காதலி கிரீஷ்மா கஷாயத்தில் விஷம் கலந்து கொடுத்தது தெரியவந்தது.
காதலியே கொன்றது அம்பலம்
நெல்லையைச் சேர்ந்த ஒரு ராணுவ வீரரை திருமணம் செய்து கொள்ள திட்டமிட்ட கிரீஷ்மா, அதற்கு ஷாரோன் ராஜ் இடையூறாக இருப்பார் எனக் கருதி அவரை, 2022 அக்டோபர் 14 ஆம் தேதி தன்னுடைய வீட்டுக்கு வரவழைத்து கஷாயத்தில் விஷம் கலந்து கொடுத்தது விசாரணையில் உறுதியானது.
கிரீஷ்மாவுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுவிட்டதால், ஷாரோன் ராஜ் அந்த திருமணத்தை நிறுத்த அவருடன் ஊர் சுற்றிய போட்டோக்கள், வீடியோக்களை புது மாப்பிள்ளையிடம் காட்டிவிடுவாரோ என்ற அச்சத்தில் திட்டமிட்டு அவரை கொலை செய்ததாக வாக்குமூலத்தில் தெரிவித்தார்.
காதலி கிரீஷ்மா குற்றவாளி
இதையடுத்து கிரீஷ்மா, உடந்தையாக இருந்த அவரது தாய் சிந்து மற்றும் மாமா நிர்மலகுமாரன் நாயர் ஆகியோரை போலீசார் கைது செய்து திருவனந்தபுரம் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு திருவனந்தபுரம் மாவட்டம் நெய்யாற்றின்கரை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
கடந்த 3 வருடங்களாக நடைபெற்று வந்த இந்த வழக்கில், நீதிபதி பஷீர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று, கிரீஷ்மா மற்றும் அவரது தாய் மாமா நிர்மல குமாரன் நாயர் ஆகியோர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தார். போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி தாய் சிந்துவை நீதிமன்றம் விடுதலை செய்தது.
இறுதி வாதம் - மன்னிப்பு கேட்ட கிரீஷ்மா
இந்த நிலையில் சனிக்கிழமை அன்று காலை கிரீஷ்மா மற்றும் நிர்மல குமாரன் நாயர் ஆகியோர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, தண்டனை விதிப்பது தொடர்பாக இறுதி வாதம் நடைபெற்றது. அப்போது கிரீஷ்மா எழுத்துப்பூர்வமாக மனு தாக்கல் செய்தார்.
எனக்கு 24 வயதுதான் ஆகிறது. எம்ஏ இலக்கியத்தில் நல்ல மதிப்பெண்ணுடன் வெற்றி பெற்றுள்ளேன். பெற்றோருக்கு நான் ஒரே மகள். எனவே தண்டனையில் தளர்வுகள் வழங்க வேண்டும், அதிகபட்ச மன்னிப்பு வழங்க வேண்டும் என கிரீஷ்மா கேட்டுக்கொண்டார்.
மரண தண்டனை விதிக்க வேண்டும் என வாதம்
ஷரோன் கொலை வழக்கு மரண தண்டனை அளிக்கும் தண்டனைக்குரிய அரிதினும் அரிதான வழக்குகளில் ஒன்றாகும் என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டது. கிரீஷ்மா ஒரு இளைஞனை கொலை செய்த சாதாரண வழக்கு அல்ல இது, அன்பான ஒருவரின் நம்பிக்கைக்கு துரோகம் இழைத்து, அவரைக் கொன்றது கொடூரமான செயல் என அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
கிரீஷ்மா, ஷாரோன் ராஜை பொய்யான காரணம் சொல்லி தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். முதல் முயற்சியில் ஜூஸில் மாத்திரை கலந்து கொடுத்து ஷாரோனை கொல்ல திட்டமிட்டு, அது தோல்வியடைந்த பிறகு, அடுத்த முயற்சியில் கொலையை கவனமாகத் திட்டமிட்டு செயல்படுத்தி உள்ளார்.
இளைஞனின் கனவை நிர்மூலமாக்கி
ஷாரோன் இறப்பதற்கு முன்பாக 11 நாட்கள் மிகக் கடுமையான உடல் கோளாறுகளைச் சந்தித்ததை மருத்துவர்களின் அறிக்கைகள் தெளிவுபடுத்தி உள்ளன. ஷாரோனை விஷம் கொடுத்து கொன்று, அந்த இளைஞனின் எதிர்காலத்தையும், கனவையும் சிதைத்து நிர்மூலமாக்கிய கிரீஷ்மா எந்த வருத்தமும் இன்றி அவரிடம் நாடகமாடியுள்ளார், எனவே கிரீஷ்மாவுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
தூக்கு தண்டனை
இந்த நிலையில், காதலனுக்கு கசாயத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்த வழக்கில் காதலி கிரிஷ்மாவுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படுவதாக கேரள நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கிரீஷ்மாவுக்கு உடந்தையாக இருந்த அவரது தாய் மாமன் நிர்மலகுமாரன் நாயருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications