மொத்த கேரளாவே வேண்டிய நொடி.. ரூ.10 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட சிறுமி.. 20 மணி நேரத்தில் மீட்ட போலீஸ்
திருவனந்தபுரம்: கேரளாவில் டியூஷன் சென்ற 6 வயது சிறுமி கடத்தப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை உருவாக்கியிருந்த நிலையில், தற்போது அந்த சிறுமி மீட்கப்பட்டிருக்கிறார்.
6 வயதான சிறுமி ரெஜினா தனது பெற்றோருடன் கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தின் ஓயூர் பகுதியில் வசித்து வந்திருக்கிறார். இந்நிலையில், நேற்று இவர் தனது 8 வயது சகோதரனுடன் டியூஷன் சென்றுக்கொண்டிருக்கையில் காரில் கடத்தப்பட்டிருக்கிறார். இவர்கள் இருவரும் சென்றுக்கொண்டிருக்கையில் வெள்ளை நிற சொகுசு கார் ஒன்று இவர்கள் பக்கத்தில் வந்து நின்றிருக்கிறது. காரிலிருந்தவர்கள் சிறுமியிடம் ஏதோ பேசியிருக்கிறார்கள். பின்னர் கண்ணிமைக்கும் நொடியில் சிறுமி கடத்தப்பட்டிருக்கிறார்.

தனது தங்கையை யாரோ கடத்தி செல்வதை உணர்ந்த சகோதரன் காரை துரத்த முயன்றிருக்கிறார். ஆனால் முடியவில்லை. எனவே உடனடியாக வீட்டிற்கு ஓடி வந்து பெற்றோரை தேடியிருக்கிறான். அவர் வேலைக்கு சென்றிருக்கிறார்கள். வீட்டிலிருந்த பாட்டி, சிறுவனின் கால் முட்டியில் இருந்த காயத்தையும், மூச்சிரைக்க ஓடி வந்ததையும் பார்த்து பதறி விஷயத்தை கேட்டிருக்கிறார். தனது பேத்தி கடத்தப்பட்டிருப்பதை கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
உடனடியாக சிறுவனும், பாட்டியும் சென்று காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கின்றனர். புகாரின் அடிப்படையில் தேடுதல் வேட்டையை தொடங்கியது காவல்துறை. முதலில் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமிராக்களை பதிசோதித்தபோது சிறுமி கடத்தப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர் மாநிலம் முழுவதும் வாகன சோதனை குறித்து அலர்ட் செய்யப்பட்டது. ஆனால் இவர்கள் தேடிய வாகனம் கிடைக்கவில்லை. மட்டுமல்லாது சிறுமி குறித்த எந்த தகவலும் தெரியவில்லை.
மறுபுறம் சிறுமியின் பெற்றோரின் செல்போனுக்கு மர்ம நபர்கள் அழைத்து, "உங்கள் குழந்தை வேண்டும் எனில் ரூ.10 லட்சத்தை ரெடியாக எடுத்து வையுங்கள். இல்லையெனில் குழந்தையை பார்க்க முடியாது" என மிரட்டியுள்ளனர். அழைப்பு வந்த எண்ணை ஆய்வு செய்த போலீசார், அது எங்கிருந்து பேசப்பட்டிருக்கிறது என்பதை கண்டுபிடித்தனர். அதாவது ஒரு கடையிலிருந்து அழைப்பு வந்திருக்கிறது. இது குறித்து கடைக்காரரிடம் விசாரித்ததில் மர்ம நபர் குறித்த அடையாளங்கள் சேகரிக்கப்பட்டன.
இந்த அடையாளங்களை கொண்டு மர்ம நபரின் உத்தேசமான புகைப்படம் வடிவமைக்கப்பட்டு, அது அனைத்து காவல் நிலையங்களுக்கும், பொதுமக்கள் பார்வைக்கும் வெளியிடப்பட்டது. அதேபோல சிறுமி குறித்து தகவல் தெரிந்தால் 112 எனும் எண்ணுக்கு தொடர்புகொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. நேரம் வேகமாக நகர்ந்துக்கொண்டிருக்க, குழந்தையை கடத்தியவர்கள் மீண்டும் போன் செய்து ரூ.10 கொடுத்தால்தான் குழந்தை ஒப்படைக்கப்படும் என மிரட்டல் விடுத்தனர்.
இதனையடுத்து காவல்துறையினர் செய்தியாளர்கள் சந்திப்பில் கடத்தல்காரர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். ஒருபுறம் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட, மறுபுறம் குற்றவாளிகள் தப்பிப்பதில் தீவிரமாக செயல்பட்டிருக்கின்றனர். நீண்ட நேரத்திற்கு பின்னர் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் அடையாளம் காணப்பட்டது. ஆனால் அதில் பதிவாகியிருந்த எண்கள் போலியானவை என்றும் தெரிய வந்தது.
இப்படி இருக்கையில் கொல்லம் ஆசிரமம் அருகே கடத்தப்பட்ட சிறுமி மீட்கப்பட்டிருக்கிறார். அதாவது சிறுமியை கடத்தியவர்கள், பயந்து விட்டுவிட்டு சென்றிருக்கலாம் என சொல்லப்படுகிறது. மீட்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைகளுக்கு பிறகு குடும்பத்தினருடன் சேர்க்கப்படுவார் என காவல்துறை கூறியிருக்கிறது. 6 வயது சிறுமி ஒருவர் கடத்தப்பட்ட சம்பவம் கேரளாவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications