24 பேர் பலி: குவைத் புறப்பட்டார் கேரளா அமைச்சர் வீணா ஜார்ஜ்! நிவாரண உதவி அறிவித்த முதல்வர் பினராயி!
திருவனந்தபுரம்: குவைத் தீ விபத்தில் கேரளாவைச் சேர்ந்த 24 பேர் பலியானது உறுதியாகி உள்ளது. இதனையடுத்து கேரளா அமைச்சர் வீணா ஜார்ஜ், குவைத் புறப்பட்டுச் சென்றார்.
குவைத்தின் மன்கஃப் நகரில் 6 மாடி அடுக்கு மாடிக் கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 43 இந்தியர்கள் உயிரிழந்தனர். இவர்களில் 24 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள்; 5 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.

கேரளாவைச் சேர்ந்த 24 பேரில் 17 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. தமிழ்நாட்டைச் சேர்ந்த 5 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இந்த நிலையில் குவைத் தீ விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ5 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். மேலும் குவைத் தீ விபத்தில் படுகாயமடைந்தோருக்கு தலா ரூ1 லட்சம் வழங்கப்படும் எனவும் முதல்வர் பினராயி விஜயன் அறிவித்திருக்கிறார்.
இதனிடையே கேரளாவைச் சேர்ந்தவர்கள் அதிக எண்ணிக்கையில் பலியான நிலையில் அம்மாநில அமைச்சர் வீணா ஜார்ஜ், குவைத் புறப்பட்டுச் சென்றார். முன்னதாக மத்திய இணை அமைச்சர் கேவி சிங் குவைத் சென்றடைந்துள்ளார்.
குவைத்தில் 50-க்கும் மேற்பட்டோரை பலி கொண்ட இந்த கொடிய தீ விபத்து நிகழ்ந்த கட்டிடத்தின் உரிமையாளர் கேரளாவைச் சேர்ந்தவர். கேரளாவை சேர்ந்த ஆபிரகாம்தான் இக்கட்டிட உரிமையாளர். கட்டிட உரிமையாளர் ஆபிரகாமை உடனே கைது செய்ய குவைத் அரசு உத்தரவிட்டிருந்தது.
குவைத் தீ விபத்தில் பலியான தமிழர்கள் குறித்த விவரம் தற்போதுதான் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. குவைத் தமிழ்ச் சங்கங்கள் உதவியால் இந்த தகவல்களைத் தமிழ்நாடு அரசு பெற்று வருகிறது. ஏற்கனவே தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலத் துறை அவசர உதவி எண்களையும் அறிவித்திருந்தது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினும் அமைச்சர் செஞ்சி மஸ்தானுடன் இது தொடர்பாக ஆலோசனை நடத்தி உரிய நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications