கேரளாவில் இடதுசாரி கூட்டணி 83 இடங்கள் பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும்.. டைம்ஸ் நவ் சர்வே
திருவனந்தபுரம்: கேரளாவில் ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி (எல்டிஎப்) கூட்டணி 71 முதல் 83 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் என்று டைம்ஸ்நவ் சி வோட்டர் நடத்திய கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
கேரள முதல்வர் பினராயி விஜயன் மீண்டும் முதல்வராக 39.3% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
கேரள மாநிலத்தில் 140 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. அங்கு ஆளும் கட்சியான இடதுசாரி ஜனநாயக முன்னணி (எல்டிஎப்) கூட்டணி மற்றும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎப்) கூட்டணிக்கும் இடையே நேரடி மோதல் நிலவுகிறது. ஏதாவது அதிசயம் நிகழத்த வேண்டும் என்ற முனைப்பில் பாஜக களமிறங்கி உள்ளது.
இந்த நிலையில் கேரளாவில் ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி (எல்டிஎப்) கூட்டணி 71 முதல் 83 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் என்று டைம்ஸ்நவ் சி வோட்டர் நடத்திய கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎப்) கூட்டணி 56 முதல் 68 இடங்களை கைப்பற்றும் என்றும் கூறப்பட்டுள்ளது.
கடந்த 2016 தேர்தலை விட இடதுசாரி ஜனநாயக முன்னணி (எல்டிஎப்) 16 தொகுதிகளை இழக்கிறது என்றும் கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது. இடதுசாரி ஜனநாயக முன்னணி 42.4% வாக்குகளை பெறும் என்றும், காங்கிரஸ் கூட்டணி 38.6% வாக்குகள் பெறும் என்றும் கூறப்பட்டுள்ளது. பாஜகவுக்கு 16% சதவீத வாக்குகள் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
கேரள முதல்வர் பினராயி விஜயன் மீண்டும் முதல்வராக 39.3% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். காங்கிரசின் உம்மன் சாண்டி முதல்வராக 26.5% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். மாநில அரசின் செயல்பாடு மிகவும் திருப்திகரமாக இருக்கிறது என்று 41.64% பேர் கருத்து தெரிவித்துள்ளனர். திருப்தி இல்லை என்று 20.82% பேர் கருத்து கூறியுள்ளனர்.