பாஜகவின் ஒரே ஒரு முஸ்லிம் வேட்பாளர்.. மோடியின் கேரளா ரோடு ஷோவில் புறக்கணிக்கப்பட்டதாக சர்ச்சை!
திருவனந்தபுரம்: பிரதமர் மோடியின் லோக்சபா தேர்தலுக்கான கேரளா ரோடு ஷோ நிகழ்ச்சியில் பாஜகவின் ஒரே ஒரு முஸ்லிம் வேட்பாளரான அப்துல் சலாம் புறக்கணிக்கப்பட்டதால் புதிய சர்ச்சை வெடித்துள்ளது.
லோக்சபா, சட்டசபை தேர்தல்களில் பாஜகவின் வேட்பாளர்கள் பட்டியலில் இஸ்லாமியர்கள் இடம் பெறுவது இல்லை. தற்போதைய லோக்சபா தேர்தலுக்கான பாஜகவின் ஒரே ஒரு இஸ்லாமியர் வேட்பாளர் அப்துல் சலாம். கேரளா மாநிலம் மலப்புரம் லோக்சபா தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிடுகிறார் அப்துல் சலாம்.

கேரளாவின் மலப்புரம் தொகுதியில் 70% வாக்காளர்கள் முஸ்லிம்கள். 2019-ம் ஆண்டு பாஜகவில் இணைந்தார் கல்வியாளர் அப்துல் சலாம். உயிரியல் அறிவியல் துறையில் 153 ஆராய்ச்சி கட்டுரைகளையும் 13 புத்தகங்களையும் எழுதியிருப்பவர் அப்துல் சலாம். கேரளாவின் திரூரைச் சேர்ந்தவர். 2011-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை Calicut பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக பணியாற்றினார். 2021-ம் ஆண்டு கேரளா சட்டசபை தேர்தலில் திரூர் தொகுதியில் பாஜக வேட்பாளராக களமிறங்கினார். அத்தேர்தலில் முஸ்லிம் லீக் வேட்பாளர் குருக்கோலி மொய்தீன் 82,314 வாக்குகள் அதாவது 48.21% வாக்குகள் பெற்றார். இடதுசாரிகள் கூட்டணி வேட்பாளர் 75,100 வாக்குகளை (43.98%) பெற்றார். பாஜகவின் அப்துல் சலாம் வெறும் 9,097 வாக்குகள் அதாவது 5.33% வாக்குகளையே பெற்று படு தோல்வியைத் தழுவி இருந்தார். தற்போது மலப்புரம் லோக்சபா தொகுதி பாஜகவின் வேட்பாளராக அப்துல் சலாம் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் கேரளாவில் பிரதமர் மோடி, லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக ரோடு ஷோ நிகழ்ச்சியை நடத்தினார். பிரதமர் மோடியின் வாகனத்தில் பாலக்காடு, மலப்புரம் மாவட்டத்தின் பொன்னானி லோக்சபா தொகுதி வேட்பாளர்களுக்கு இடம் கொடுக்கப்பட்டது. ஆனால் மலப்புரம் தொகுதி பாஜக வேட்பாளரான இஸ்லாமியரான அப்துல் சலாம், மோடியின் ரோடு ஷோ வாகனத்தில் ஏற்றப்படாமல் புறக்கணிக்கப்பட்டுவிட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.

இது தொடர்பாக சிபிஎம் கட்சியின் மூத்த தலைவர் ஏகே பாலன் கூறுகையில், பிரதமர் மோடியின் நிகழ்ச்சியில் இஸ்லாமியர் வேட்பாளரான அப்துல் சலாம் திட்டமிட்டே புறக்கணிக்கப்பட்டுள்ளார். இதுதான் சிறுபான்மையினர் குறித்த பாஜகவின் அணுகுமுறை என விமர்சித்துள்ளார்.
ஆனால் பாஜக வேட்பாளரான அப்துல் சலாமோ, தாம் திட்டமிட்டு புறக்கணிக்கப்படவில்லை. பொன்னானி லோக்சபா தொகுதிக்குள் பாலக்காடு மாவட்டத்தின் சட்டசபை தொகுதி திரிதலாவும் வருகிறது. அதனால் மலப்புரம் மாவட்டத்தின் பொன்னானி வேட்பாளர் நிவேதிதா சுப்ரமணியன், மோடியின் ரோடு ஷோ வாகனத்தில் பங்கேற்றார். பிரதமர் மோடியை பாலக்காட்டில் சந்தித்து பேசினேன். மலப்புரம் தொகுதிக்கு வந்து பிரசாரம் செய்யவும் அழைப்பு விடுத்துள்ளேன் என்றார்.












Click it and Unblock the Notifications