கொரோனா அறிகுறி.. கேரளாவிலிருந்து எஸ் ஆன மதுரைக்காரர்.. வளைத்துப் பிடிக்க அதிகாரிகள் தீவிரம்!
திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனா அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டிருந்த மதுரையை சேர்ந்த இளைஞர் திடீரென நேற்று தலைமறைவாகி விட்டதால் சுகாதாரத்துறையினர் அவரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கேரள மாநிலம் பத்தினம்திட்டாவில் கொரோனா அறிகுறி உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மதுரை சேர்ந்த இளைஞர் ஒருவர் கேரளாவில் பணியாற்றி வந்த நிலையில் அவருக்கு கொரோனா அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் பத்தினம்திட்டா அரசு மருத்துவமனையில் உள்ள தனிவார்டில் அனுமதிக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டதுடன் சிகிச்சையும் தரப்பட்டது. அப்போது தனக்கு கொரோனா எதுவும் இல்லை என்றும், சாதாரண காய்ச்சல் தான் எனவும் அந்த இளைஞர் கேரள சுகாதாரத்துறையினரிடம் வாதிட்டுள்ளார்.

இருப்பினும் அவரை வெளியே அனுமதித்தால் கொரோனா பாதிப்பு அதிகமாககூடும் என அஞ்சிய கேரள சுகாதாரத்துறை அதிகாரிகள் தனிவார்டிலேயே தங்கவைத்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் நேற்று அங்கிருந்து அந்த இளைஞர் தலைமறைவாகிவிட்டதால் அவருக்கு சிகிச்சை அளித்து வந்த செவிலியர்கள் அதிர்ச்சி அடைந்து சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரியப்படுத்தியுள்ளனர். இதனிடையே சொந்த ஊரான மதுரைக்கு அந்த இளைஞர் சென்றிருக்கக்கூடும் எனக் கருதிய அவர்கள் தமிழக சுகாதாரத்துறை உயரதிகாரிகளை தொடர்புகொண்டு விவரத்தை எடுத்துக்கூறியுள்ளனர்.
கேரளாவில் இருந்து மதுரைக்கு தப்பிவந்த இளைஞரை அடையாளம் காண்பது மிகவும் சிரமமானது என்றாலும், கொரோனா அறிகுறி உடைய அந்த நபரை கண்டுபிடிக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் தங்களால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் முன்னெடுத்துள்ளனர். மேலும், சமூக பொறுப்பை உணர்ந்து ஆரம்பக்கட்டத்திலேயே அரசு மருத்துவமனையை நாடி சிகிச்சை பெற்று குணமடைய வேண்டும் என கொரோனா சிறப்பு மருத்துவ பிரிவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேலும், தங்கள் பகுதியிலோ அல்லது சுற்றத்திலோ கேரளாவுக்கு பணி நிமித்தமாக சென்று வந்தவர்கள் காய்ச்சலுடன் இருந்தால் அவர்களை பற்றிய தகவலை மதுரை அரசு மருத்துவமனையில் தெரிவிக்கலாம் என மதுரை மக்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications