சபரிமலைக்கு புல்மேடு வழியாக செல்லும் ஐயப்ப பக்தர்கள்.. பம்பை, பெருவழி, புல்மேடு எந்த வழி பெஸ்ட்?
திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலையில் மகரவிளக்கு, மண்டலகால பூஜை சீசன் தொடங்கியுள்ளது. ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு சென்று வருகின்றனர். கடந்த ஆண்டைவிட பக்தர்கள் வருகை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், சத்திரம், புல்மேடு வழியாக சபரிமலைக்கு வருவதற்கு ஏராளமான பக்தர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
பொதுவாக சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் பெரும்பாலும் பம்மை வழிப்பாதை மற்றும் பெருவழிப் பாதையை தேர்ந்தெடுப்பது வழக்கம். ஆனால், இவை இரண்டையும் விட புல்மேடு பாதை வழியாகச் சென்றால் நேரடியாக சபரிமலை சன்னிதானத்திற்கே எளிதில் செல்லலாம். இது பம்பை, பெருவழியை விட மிக எளிமையான பாதையாகும். தற்போது புல்மேடு வழியாகச் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயில் உலக அளவில் மிகவும் புகழ்பெற்ற கோயிலாகும். ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை, மார்கழி மாதங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்குச் செல்வது வழக்கம். மகரவிளக்கு, மண்டலபூஜை சீசன்களில் ஐயப்பனை தரிசனம் செய்ய கார்த்திகை மாதம் முதல் நாளில் பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்குவர்.
ஐயப்பனை தரிசிப்பதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் கூட பக்தர்கள் கடுமையான விரதங்களை மேற்கொண்டு சபரிமலைக்கு வந்து வழிபடுவது வழக்கம். சபரிமலைக்கு செல்வதற்கு 3 பாதைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பக்தர்கள் பெரும்பாலும் பம்பையில் இருந்து சுமார் 7 கிலோமீட்டர் தூரம் மலையேறி ஐயப்பனை தரிசிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இது பாரம்பரிய பாதையாகும்.
எரிமேலியில் இருந்து பெருவழிப் பாதை வழியாகச் செல்வது மிகவும் கடினமாகும். இருப்பினும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பெருவழிப் பாதை எனும் மலைப்பாதையில் எருமேலி தொடங்கி சபரிமலை வரை நடந்தே சென்று ஐயப்பனை தரிசனம் செய்வதும் வழக்கம்.
இந்த இரண்டு பாதையைத் தவிர சபரிமலைக்குச் செல்ல மேலும் இரண்டு பாதைகள் உள்ளன. இடுக்கி மாவட்டம், வண்டிப்பெரியார் அருகே சத்திரம், புல்மேடு ஆகிய இரம்டு பாதைகள் உள்ளன. இவை மிகவும் எளிதான பாதையாகும். சபரிமலை சீசனையொட்டி இந்த இரண்டு பாதைகளும் திறந்துவிடப்பட்டுள்ளன.
சத்திரம் பாதை வழியாக காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே சபரிமலைக்கு பாதயாத்திரை செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல, புல்மேடு வழியாக காலை 7 மணி முதல் மதியம் 2.30 மணி வரை மட்டுமே செல்ல அனுமதி வழங்கப்படும். சபரிமலையில் இருந்து சத்திரம் வழியாக திரும்பி வரும் பக்தர்கள் காலை 8 மணி முதல் 11 மணி வரை மட்டுமே நடந்து வர அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பாதைகளில் வருவோர் அடர்ந்த காட்டுப் பகுதி வழியாக நடந்து வர வேண்டும். ஆனால், பாதை மிகவும் எளிமையானதாக இருக்கும். நேரடியாக சபரிமலை சன்னிதானத்தையே பக்தர்கள் அடையலாம். இதனால், நடப்பு ஆண்டில் சத்திரம், புல்மேடு வழியாக சபரிமலைக்கு வருவதற்கு பெரும்பாலான பக்தர்கள் ஆர்வம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது.
காட்டுப் பாதையில் நடந்து செல்லும் பக்தர்களுக்கு உதவும் வகையில் பாண்டித்தாவளத்தில் காவல் உதவி மையமும் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதல் நாளில் மட்டும் இந்தப் பாதை வழியாக 412 பக்தர்கள் நடந்து சென்றுள்ளனர்.
பக்தர்களின் நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில், ஆன்லைன் மூலம் அதிகபட்சமாக 70 ஆயிரம் பேரும், ஸ்பாட் புக்கிங் மூலம் 10 ஆயிரம் பேரும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். பதினெட்டாம் படி வழியே நிமிடத்துக்கு 80 பக்தர்கள் ஏறிச் செல்கின்றனர். பக்தர்களின் பாதுகாப்புக்காக போலீஸார் சுழற்சி முறையில் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
முதியோர் மற்றும் குழந்தைகள் விரைவாகவும், சிரமம் இல்லாமலும் ஐயப்பனை தரிசிக்கும் வகையில் சிறப்பு வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, பதினெட்டாம் படி ஏறியதும் சுற்றுப் பாதையில் செல்லாமல் நேரடியாக ஐயப்பனை தரிசிக்கலாம். முதியோர், குழந்தைகளுக்கு உதவும் வகையில் கூடுதலாக ஒருவர் அவர்களுடன் செல்லலாம் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications