தேசிய விருது பெற்ற பிரபல காமெடி நடிகர் சலீம் குமார் திடீர் மரணம்.. சோகத்தில் மூழ்கிய மலையாள திரையுலகம்!
திருவனந்தபுரம்: மலையாள திரையுலகின் பிரபல நடிகரும், தேசிய விருது பெற்ற கலைஞருமான சலீம் குமார் (56) காலமானார். கல்லீரல் தொடர்பான உடல்நலக் குறைவு காரணமாக கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், திடீர் மாரடைப்பால் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மிமிக்கிரி ஆர்டிஸ்டாக இருந்து சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகம் ஆகி தேசிய விருதுவரை வென்று இருக்கிறார் சலீம் குமார். மூன்று தசாப்தங்களாக அவர் சினிமாவில் பணியாற்றியுள்ளார். 300-க்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்துள்ளார்.

சலீம் குமார் திரையுலக பயணம்
1969 ஆம் ஆண்டு அக்டோபர் 9-ம் தேதி கேரளாவின் நார்த் பரவூர் அருகே உள்ள சிட்டாட்டுகராவில் பிறந்த சலீம் குமார், முதலில் மிமிக்ரி கலைஞராக தனது பயணத்தை தொடங்கினார். பின்னர் கோச்சின் கலாபவன் குழுவில் இணைந்து பல மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். 1996-ல் வெளியான இஷ்டமானு நூறு வட்டம் திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
ஆனால், 2000-ம் ஆண்டு வெளியான தென்காசிப்பட்டணம் திரைப்படம் அவரை மலையாள ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாக்கியது. மலையாள மக்களின் அடையாளமாக அவர் மாறினார். கல்யாணராமன், சிஐடி மூசா உள்ளிட்ட படங்களில் நடித்தார். மீஷா மாதவன், புலிவால் கல்யாணம், தோம்மனும் மக்களும், பாண்டிப்பட, மாயாவி, திலக்கம் உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.
விருதுகளும் அங்கீகாரமும்
இவரது நகைச்சுவை வசனங்கள் இணையத்தில் இப்போதும் வைரலாக பரவி வருவதை பார்க்க முடியும். நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல், குணச்சித்திர நடிகராகவும் தனது திறமையை நிரூபித்தார். அச்சன் உறங்காத வீடு திரைப்படத்திற்காக 2005-ம் ஆண்டு கேரள மாநில அரசின் இரண்டாவது சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றார். இதே போல் 'ஆதாமிண்டே மகன் அபு' படம் அவருக்குப் புகழைத் தந்தது. 2013-ல் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான மாநில விருதையும் வென்றார். 2005-ல் சிறந்த நடிகருக்கான மாநில விருது வென்றார்.
திரைப்பட இயக்குநராகவும் அவர் தடம் பதித்தார். 'கம்பார்ட்மென்ட்', 'கருத்த ஜூன்' ஆகிய படங்களை இயக்கினார். சிறந்த கதைகளம் கொண்ட படத்திற்காக அவர் விருது பெற்றார். இதில் கருத்த ஜூன் படத்திற்காக சிறந்த கதைக்கான கேரள மாநில விருதையும் பெற்றார்.
அரசியல் ஈடுபாடு
சினிமாவைத் தாண்டியும் பொதுவாழ்வில் ஆர்வம் கொண்டிருந்த அவர், சமீபத்திய கேரள சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு (UDF) ஆதரவாக பிரசாரம் செய்தார். உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தபோதும் பல தேர்தல் பிரசார நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. வட பரவூர் தொகுதியில் அவர் தீவிரமாக பிரசாரம் செய்தார். வி.டி.சதீசனுக்கு ஆதரவாகவும் அவர் வாக்கு சேகரித்தார்.
மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக 300-க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ள சலீம் குமாரின் மறைவு, மலையாள திரையுலகிற்கும் ரசிகர்களுக்கும் பெரும் இழப்பாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications