பயப்படும் நடிகைகள்.. மலையாள திரையுலகை புரட்டிப் போட்ட ஹேமா கமிட்டி அறிக்கை! ஆனா.. இப்போ நடந்ததே வேற!
திருவனந்தபுரம்: மலையாளத் திரை உலகில் இயக்குனர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள், நடிகைகளுக்கு பாலியல் புகார் கொடுத்த விவகாரம் தொடர்பாக ஹேமா கமிட்டி அறிக்கையின் அடிப்படையில் தொடரப்பாட்ட 35 வழக்குகளில், 34 வழக்குகள் தற்போது முடிவுக்கு வந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புகார்கள் தொடர்பாக சாட்சியங்கள் அளிக்க சாட்சிகள் தயங்குவதாக வெளியாகி உள்ள தகவல் பெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
மலையாள திரை உலகில் ஒரு 'பவர் குரூப்' ஒட்டுமொத்த திரையுலகை கட்டி ஆள்வதாகவும், நடிகைகள், பெண் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு பாலியல் தொல்லை அளிப்பதாகவும் நீண்ட காலமாகவே புகார் இருக்கிறது.
இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஓடும் காரில் பிரபல நடிகை ஒருவர் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு வீடியோவும் எடுக்கப்பட்ட சம்பவம் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

பாலியல் புகார்
இது தொடர்பாக பிரபல நடிகர் ஒருவர் கைது செய்யப்பட்டார். மேலும் இவ்வழக்கில் கைது செயப்பட்ட சிலர் இன்னும் சிறையில் உள்ளனர். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட அந்த நடிகையின் புகாரினை தொடர்ந்து ஹேமா கமிட்டி அமைத்து அரசு உத்தரவிட்டது.
மலையாள சினிமா
பல ஆண்டுகளுக்கு முன்பே அந்த கமிட்டி தனது அறிக்கையை தாக்கல் செய்த நிலையில் அது வெளியிடப்படாமல் இருந்தது. இந்த நிலையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பப்பட்டு அந்த அறிக்கை வெளியான பிறகு மலையாளத் திரையுலகம் புரட்டிப் போட்டது போல ஆகிவிட்டது. பல நடிகைகளுக்கு, நடிகர்களும், இயக்குனர்களும் பாலியல் தொல்லை தந்தது வெளிச்சத்திற்கு வந்தது. நடிகைகள், பெண் கலைஞர்கள் தொடர்ந்து பிரபல நடிகர்கள், இயக்குனர்கள் மீது குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர்.
ஹேமா கமிட்டி அறிக்கை
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது, இந்த விவகாரத்தில் ஏற்கனவே நடிகர் சித்திக், முகேஷ், ஜெயசூர்யா, மணியண்ணன் பிள்ளை, எடவேல பாபு, இயக்குனர் ரஞ்சித் உள்ளிட்ட பலர் மீது பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இது மட்டுமல்லாமல் சிறப்பு புலனாய்வு குழுவும் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பெரும் அதிர்ச்சி
இந்த நிலையில் தற்போது ஹேமா கமிட்டி அறிக்கை அடிப்படையில் தொடரப்பட்ட வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தரும் தகவல் தற்போது வெளியாகி உள்ளது. சிறப்பு புலனாய்வு குழு முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளித்தவர்கள், வழக்கு தொடர்வதற்கும், தொடரப்பட்ட வழக்குகளில் சாட்சியம் அளிப்பதற்கும் பலர் தயங்குவதால் 35 வழக்குகள் தொடரப்பட்ட நிலையில் 34 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளதாக சிறப்பு புலனாய்வு குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
கேரள உயர்நீதிமன்றம்
ஒரே ஒரு வழக்கில் மட்டும் அறிக்கை அளித்தவர்கள் அதே நிலைப்பாட்டில் இருப்பதால் அந்த வழக்கும் இந்த மாதம் முடிவுக்கு வரும் என கேரள உயர்நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வு குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. மொத்தமாக பதிவு செய்யப்பட்ட 35 வழக்குகளில் ஒரு வழக்கைத் தவிர மற்ற வழக்குகளில் சாட்சிகள் ஒத்துழைப்பு தரவில்லை எனவும், நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்க தயங்குவதால் முடித்து வைக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ளது.
வழக்குகள் முடித்து வைப்பு
35 எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்ட நிலையில் முதற்கட்ட விசாரணையில் தகவல் அளித்தவர்கள் தற்போது மறுக்கின்றனர். 10 முதல் 12 பேர் மட்டுமே தற்போது எங்களுடன் தொடர்பில் இருக்கிறார்கள். மற்றவர்கள் பேசவே பயப்படுகின்றனர். பலமுறை சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு அவர்கள் வரவில்லை. பல ஆண்டுகளுக்கு முன்னர் பிரச்சினை நடந்ததால் சாட்சியங்களை தேடுவதும் கடினமாக இருக்கிறது. சாட்சிகள் கிடைத்தாலும் அவர்கள் பேசத் தயங்குகின்றனர். பாதிக்கப்பட்டவர்கள் கூட தற்போது அமைதியாக இருப்பதால் மீண்டும் வெளி உலகுக்கு தங்களை குறித்து தெரிய வேண்டாம் என கூறுகின்றனர். மேலும் எதிர்கால திரைத்துறை வாழ்க்கையும் பாதிக்கப்படும், வாய்ப்பு மறுக்கப்படும் என்பதால் சாட்சிகள் தயங்குவதாக போலீசார் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications