நான் கட்சியில உறுப்பினர்கூட இல்லை.. நான் வேட்பாளரா? தேர்தலில் போட்டியிட மறுக்கும் பாஜக வேட்பாளர்
திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் மனன்தாவடி என்ற தொகுதியில் பாஜகவில் உறுப்பினராகக்கூட இல்லாத ஒருவரை அக்கட்சி வேட்பாளராக அறிவித்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலத்தில் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. 140 இடங்களைக் கொண்ட கேரளாவை கைப்பற்ற தற்போது மூன்று முனை போட்டி நிலவுகிறது.
தற்போது கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரிகள் ஆட்சி நடைபெறுகிறது. அவர்களை எதிர்த்து காங்கிரஸ் வலுவான கூட்டணியை அமைத்து இந்த முறை தேர்தலை எதிர்கொள்கிறது.

பாஜக திட்டம்
இந்தத் தேர்தலில் கேரளாவில் மூன்றாவது அணியாக உருவெடுக்க பாஜக கடும் முயற்சி எடுத்து வருகிறது. அதிமுக, பாரத் தர்ம ஜனசேனா உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து 140 இடங்களிலும் பாஜக போட்டியிடுகிறது. மேலும், வாக்காளர்களைக் கவர மெட்ரோமேன் ஸ்ரீதரனையும் பாஜக தனது கட்சியில் இணைத்துள்ளது.

மனன்தாவடி வேட்பாளர்
இந்நிலையில், வரும் சட்டசபை தேர்தலில் கேரளாவில் போட்டியிடும் 115 பேரைக் கொண்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜக நேற்று வெளியிட்டது. அதில் ராகுல் காந்தி தற்போது எம்பியாக உள்ள வயநாடு மாவட்டத்தில் உள்ள மனன்தாவடி என்ற தொகுதியின் பாஜக வேட்பாளராக மணிகுட்டன் எனப்படும் மணிகண்டன் அறிவிக்கப்பட்டிருந்தார். மனன்தாவடி பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ள தனித் தொகுதியாகும்.

எனக்கு தெரியாது
இந்த் தொகுதியில் போட்டியிடப் பனியா சமூகத்தைச் சேர்ந்த மணிகண்டனை பாஜக வேட்பாளராக அறிவித்துள்ளது. பனியா சமூகத்தில் முதல் பட்டதாரி என்ற சிறப்பை பெற்றவர் என்பதால் தேர்தலில் மணிகண்டன் எளிதில் வெல்வார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், தன்னிடம் கேட்காமல் தனக்குத் தெரியாமலேயே பாஜக தன்னை வேட்பாளராக அறிவித்துள்ளதாக மணிகண்டன் தெரிவித்துள்ளார்.

பெரும் அதிர்ச்சி
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "பாஜகவைச் சேர்ந்த சிலர் தேர்தலில் போட்டியிட எனக்கு விருப்பம் இருக்கிறதா என்று என்னிடம் கேட்டனர். அப்போதே தேர்தலில் போட்டியிட எனக்கு ஆர்வம் இல்லை என்று அவர்களிடம் தெளிவாகக் கூறியிருந்தேன். ஆனாலும்கூட பாஜக வேட்பாளர் பட்டியலில் எனது பெயர் இடம் பெற்றிருந்தது. இது எனக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது" என்றார்.

பாஜக உறுப்பினர்கூட இல்லை
மேலும், நான் பாஜக உள்ளிட்ட எந்தக் கட்சியிலும் இல்லை. அவ்வளவு ஏன் நான் பாஜக ஆதரவாளர்கூட இல்லை என்று அவர் தெரிவித்தார். மேலும் தேர்தலில் போட்டியிட தனக்கு விருப்பம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். தற்போது கல்லூரியில் உதவி பேராசியிராக உள்ளதாகவும் தொடர்ந்து அப்பணியிலேயே இருக்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார். பாஜகவில் உறுப்பினராகக்கூட இல்லாத ஒருவரை அக்கட்சி வேட்பாளராக அறிவித்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications