டாக்டர் கணவனால் பலாத்காரம் செய்யப்பட்ட மனைவி.. விவாகரத்து வழங்கி நீதியை நிலைநாட்டிய கேரள ஹைகோர்ட்
திருவனந்தபுரம்: திருமணம் ஆகியிருந்தாலும் சரி.. மனைவியின் சம்மதம் இல்லாமல் கணவன் பாலுறவு கொண்டால் அதை பலாத்காரமாகவே கருதப்பட்டு விவாகரத்து பெற முடியும் என்று கேரள உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
மனைவியின் உடலை தனது சொத்து போல கணவன் நினைத்துக்கொண்டு தன்னிச்சையாக பாலியல் செயல்களில் ஈடுபடுவது பலாத்காரம் என்று கேரள உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தி இருக்கிறது.
கேரளாவை சேர்ந்த ஒரு பெண் தனது கணவர் பாலியல் ரீதியாக தன்னை தொல்லை செய்வதாக கூறி விவாகரத்து கேட்டு குடும்ப நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதை விசாரித்த நீதிமன்றம் விவாகரத்து வழங்கி உத்தரவிட்டது.

டாக்டர் மீது குற்றச்சாட்டு
இதை எதிர்த்து அந்த கணவர் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். நீதிபதி ஏ முகமது முஸ்தாக் மற்றும் நீதிபதி கவுசர் எடப்பாக்கத் ஆகியோர் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. குறிப்பிட்ட இந்த தம்பதிகள் 1995ம் ஆண்டு திருமணம் செய்துள்ளனர் . இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கணவர் ஒரு மருத்துவர் ஆகும் .

அடேங்கப்பா வரதட்சணை லிஸ்ட்
திருமணத்தின் போது பெண் வீட்டிலிருந்து 501 பவுன் சவரன் தங்க நகைகளை வரதட்சணையாக பெற்றுள்ளார். அது மட்டும் கிடையாது, ஒரு ப்ளாட் மற்றும் கார் ஆகியவற்றையும் வரதட்சணையாக பெற்றுள்ளார். ஆனால் செக்ஸ் மற்றும் பணத் தேவைக்காக இந்தப் பெண்ணை அந்த கணவன் தொடர்ந்து பயன்படுத்தி வந்துள்ளார் . அவரை சக மனுஷியாக மதிக்கவில்லை என்பது குற்றச்சாட்டாகும். அந்த மனைவி தனது கணவன் செய்த பாலியல் அத்துமீறல்கள் பற்றி அடுக்கடுக்காக குற்றம்சாட்டியிருந்தார்.

புகாரில் குமுறிய மனைவி
எனக்கு உடல் நலம் குறைவாக இருந்த சமயத்தில் கூட எனது கணவன் உடலுறவு செய்ய வலியுறுத்தினார். கணவனின் தாய் உயிரிழந்த தினத்தன்று கூட வீட்டில் அனைவரும் துக்கத்தில் இருக்கும்போதும் என்னை உடலுறவு கொள்ள வற்புறுத்தினார். நான் மறுத்த போதிலும் கூட கட்டாயப்படுத்தி உறவு வைத்துக் கொண்டார். இயற்கை வழக்கத்துக்கு மாறான வகையில் செக்ஸ் உறவு வைத்துக் கொள்ளவும் என்னை வற்புறுத்தி அதைச் செய்தார். மேலும் எங்களது, மைனர் குழந்தை பார்க்கும்போது கூட, குழந்தையின் முன்பாக, என்னுடன் உடலுறவு வைத்துக் கொண்டார். இவ்வாறு தனது மனுவில் அந்தப்பெண் தெரிவித்திருந்தார்.

விவாகரத்து கேட்கலாம்
இந்த வழக்கில் கேரள உயர் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பு முக்கியமாக பார்க்கப்படுகிறது. இதோ உயர்நீதிமன்றம் கூறிய கருத்துக்கள்: கணவனால் மனைவி "பலாத்காரம் " செய்யப்படுவது என்பது சட்டரீதியாக அங்கீகரிக்கப்படவில்லை என்பதால் மட்டும் அவ்வாறு செய்யும் செயல்களை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த செயல்பாடுகளை துன்புறுத்தல் என்ற பிரிவின் கீழ் கருத்தில்கொண்டு விவாகரத்து வழங்க முடியும். எனவே திருமணத்துக்கு பிந்தைய மனைவி மீதான கணவனின் பாலியல் அத்துமீறல்களை அடிப்படையாகக் கொண்டு விவாகரத்து பெறுவதற்கு அந்தப் பெண்ணுக்கு உரிமை இருக்கிறது என்று தெரிவிக்கிறோம்.

கணவனுக்கு மனைவி உடம்பு சொந்தம் இல்லை
மனைவியின் உடலை தனக்கு சொந்தமானது என்று நினைத்துக்கொண்டு அவரது விருப்பம் இல்லாமல் கட்டாயப்படுத்தி பாலியல் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வது திருமணத்துக்கு பிந்தைய பலாத்காரமாக கருதப்படும். பெண்ணின் மனது மற்றும் உடல் ஆகியவற்றிற்கு மதிப்பு கொடுக்க வேண்டும். நவீனகால இந்த சமுதாயத்தில் மனைவியை கணவன் சமமான கூட்டாளி போலத்தான் நடத்த வேண்டும். அவர் மீது ஆதிக்கம் செலுத்தக் கூடாது . இந்த வழக்கில் கணவரின் செக்ஸ் தேவைகள் மற்றும் பணத்தேவைகள் போன்றவை விவாகரத்து கேட்க மனைவியை தூண்டியுள்ளது. இது மனைவியை கொடுமைப்படுத்தும் செயல் என்பதால் விவாகரத்து கொடுப்பதில் தவறு கிடையாது.

மனசாட்சியை உலுக்குகிறது
இந்த பெண் 12 வருடங்களாக விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் கண்ணீர் விட்டு வருகிறார் . இறுதி தீர்ப்பு எப்போது கிடைக்கும் என்று ஏக்கத்தோடு இருக்கிறார். அவரது கண்ணீருக்கு நாமும் ஒரு பொறுப்பு என்பதை மறுக்க முடியாது. இது ஏதோ தனிப்பட்ட ஒரு சம்பவம் கிடையாது. தினசரி வாழ்க்கையில் இந்த பெண்ணைப் போல, பலரும் பாதிக்கப்பட்டிருப்பதை நாம் பார்த்திருக்கிறோம். இவரது சம்பவம் நமது மனசாட்சியை உலுக்கியுள்ளது. இவ்வாறு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications