"புது வேரியண்ட்.." இந்தியாவில் திடீரென கொரோனா அதிகரிக்க காரணமே வேற.. உயிரிழப்புகளை ஏற்படுத்துமா
திருவனந்தபுரம்: இந்தியாவில் இப்போது கொரோனா பாதிப்பு திடீரென அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், இது தொடர்பாக ஆய்வாளர்கள் முக்கிய விளக்கத்தைக் கொடுத்துள்ளது.
கடந்த 2019 இறுதியில் பரவ தொடங்கிய கொரோனா பாதிப்பு மிக மோசமான ஒரு பாதிப்பை ஏற்படுத்தியது. அமெரிக்கா தொடங்கி உலகின் டாப் நாடுகள் அனைத்தும் கொரோனாவால் மொத்தமாக முடங்கிப் போனது.

கொரோனா வேக்சின், வழிகாட்டுதல்கள் என பல்வேறு நடவடிக்கைகளுக்குப் பிறகு கொரோனா பாதிப்பு இப்போது தான் கட்டுக்குள் வந்துள்ளது. இதற்கிடையே பல மாதங்கள் கழித்து இந்தியாவில் இப்போது கொரோனா பாதிப்பு திடீரென அதிகரிக்கத் தொடங்கியுள்ளது..
திடீரென அதிகரிக்கும் கொரோனா: இந்தியாவில் கொரோனா எகிறக் கேரளாவில் கொரோனா அதிகரிப்பதே இதற்குக் காரணமாகும். கேரளாவில் கடந்த மாதம் ஒட்டுமொத்தமாக 479 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது. அதேநேரம் இந்த மாதம் முதல் எட்டு நாட்களில் மட்டும் 825 புதிய கேஸ்கள் பதிவாகியுள்ளன.
நமது நாட்டில் இப்போது ஏற்படும் கொரோனா பாதிப்பில் கிட்டத்தட்ட 90%க்கும் அதிகமான கேரளாவில் தான் பதிவாகியுள்ளது. பெரும்பாலும் இப்போது கொரோனா ஏற்பட்டால் அது இரண்டு மாதங்கள் வரை இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதிக நேரம் இருந்தாலும் கூட இது சீரியஸான கொரோனா பாதிப்பாக இருக்காது. உயிரிழப்புகள் மிக மிக அரிதாகவே இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
புது வேரியண்ட்: கேரளாவில் JN.1 என்ற புது வகை கொரோனா வேரியண்ட் கண்டறியப்பட்டது. இது Pirola அல்லது BA.2.86 வகை கொரோனாவை போலவே இருந்தாலும் அது சற்று வித்தியாசமானதாக இருக்கிறது.. இந்தியாவில் புது கொரோனா வேரியண்ட்களை கண்டுபிடிக்க மரபணு பகுபாய் சோதனை தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், அதிலும் கூட தப்பாமல் இந்த JN.1 பல காலம் மறைந்துள்ளது. இதன் காரணமாக வரும் காலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிக்குமோ என்றும் அஞ்சப்படுகிறது.
கேரளாவில் இந்த புது வகை கொரோனா இருப்பதை மத்திய அரசின் கண்காணிப்புக் குழு உறுதி செய்துள்ளது. இது குறித்து தேசிய இந்திய மருத்துவ சங்கத்தின் இணைத் தலைவர் டாக்டர் ராஜீவ் ஜெயதேவன் கூறுகையில், "இந்தியாவில், குறிப்பாகக் கேரளாவில் கொரோனா கேஸ்கள் அதிகரிக்க ஜே.என்.1 வேரியண்ட் காரணமாக இருக்கலாம். இப்போது இந்தியாவில் ஆக்டிவாக இருக்கும் கொரோனா கேஸ்கள் 938 ஆக அதிகரித்துள்ளது. கேரளாவில் அதிகபட்சமாக 768 நோயாளிகள் உள்ளனர்" என்றார்.
அச்சம் வேண்டாம்: INSACOG அமைப்பின் இணைத் தலைவர் என் கே அரோரா இது குறித்துக் கூறுகையில், "இந்தியாவில் இப்போது கொரோனா கேஸ்கள் குறைவாக உள்ளன, நாங்கள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். இதன் காரணமாகவே புதிய கொரோனா வேரியண்டுகள் பரவ தொடங்கினால் அதைக் கண்டுபிடிக்க முடிகிறது. தற்போதைய நிலவரப்படி இந்த துணை வேரியண்ட் காரணமாக இந்தியாவுக்கு ஆபத்து இல்லை.
ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க நாடுகளில் கொரோனா அதிகரிக்கவும் இந்தியாவில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பிற்கும் மிகப் பெரிய வித்தியாசம் இருக்கிறது. இந்தியாவில் பொதுவாகவே குளிர்காலத்தில் சுவாச வைரஸ்கள் அதிகம் பரவும். இப்போது கொரோனா கேஸ்கள் அதிகரிக்க இதுவும் ஒரு முக்கிய காரணமாகும்" என்றார்.
ஓமிக்ரான் துணை: ஜேஎன்.1 என்பது ஓமிக்ரான் துணை வகை BA.2.86இல் இருந்து பிரிந்தது ஆகும். இதை ஓமிக்ரான் வேரியண்டின் குறிப்பிடத்தக்க ஒரு துணை பிரிவாக உலக சுகாதார அமைப்பு பட்டியலிட்டுள்ளது. அதாவது இந்த கொரோனா வேரியண்ட் வேகமாகப் பரவலாம் என்றும் நோயெதிர்ப்பு சக்தியைக் குலைக்கும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஏற்கனவே அமெரிக்கா, இங்கிலாந்து, ஐஸ்லாந்து, போர்ச்சுகல், ஸ்பெயின், நெதர்லாந்து உள்ளிட்ட பல நாடுகளில் இந்த பிரோலா கொரோனா வேகமாகப் பரவி வருகிறது. இதுவரை 38 நாடுகளில் இந்த வகை கொரோனா கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications