தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியாவுடன் தொடர்பு: கேரளாவில் 56 இடங்களில் என்.ஐ.ஏ. ரெய்டு!
திருவனந்தபுரம்: கேரளாவில் தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியாவுடன் தொடர்புடைய 56 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். மத்திய அரசால் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு தடை செய்யப்பட்டிருக்கிறது.
பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு 2006-ம் ஆண்டு கேரளாவில் தொடங்கப்பட்டது. இதன் அரசியல் கட்சியாக எஸ்டிபிஐ 2009-ல் உருவாக்கப்பட்டது. தமிழகத்தில் இந்துத்துவா கொள்கையாளர்கள் ராமலிங்கம், சசிகுமார் உள்ளிட்டோர் படுகொலையில் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகளுக்கு தொடர்புடைய என்பது குற்றச்சாட்டு. இத்தகைய படுகொலைகள், பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதால் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா கடந்த செப்டம்பர் மாதம் மத்திய அரசால் தடை செய்யப்பட்டது.

இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டிருந்த செய்திக் குறிப்பில், பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா (பிஎஃப்ஐ) மற்றும் அதனுடன் தொடர்புடைய அல்லது இணைந்த அமைப்புகள் அல்லது முன்னணிகள் நாட்டின் ஒருமைப்பாடு, பாதுகாப்பு, இறையாண்மை ஆகியவற்றை சீர்குலைக்கும் விதத்தில் பயங்கரவாத செயலில் ஈடுபடுதல், அதற்கு நிதியளித்தல், கொடூரமாக கொலைகள் செய்தல் உள்பட நாட்டின் அரசியல் சட்ட அமைப்பை மதிக்காமல் பொது ஒழுங்கை சீர்குலைக்கும் தொடர் குற்றங்களில் ஈடுபடுவது கண்டறியப்பட்டுள்ளது.
எனவே இந்த அமைப்பின் கொடிய செயல்களை கட்டுப்படுத்துவது அவசியம் என மத்திய உள்துறை அமைச்சகம் கண்டறிந்து, பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா (பிஎஃப்ஐ) மற்றும் அதனுடன் தொடர்புடைய அல்லது இணைந்த அமைப்புகள், ரெஹாப் இந்தியா ஃபவுண்டேஷன் (ஆர்ஐஎஃப்), கேம்பஸ் ஃபிரண்ட் ஆப் இந்தியா (சிஎஃப்ஐ), அகில இந்திய இமாம்கள் கவுன்சில் (ஏஐஐசி), மனித உரிமை அமைப்புகளின் தேசிய கூட்டமைப்பு (என்சிஎச்ஆர்ஓ), தேசிய மகளிர் முன்னணி, ஜூனியர் முன்னணி, எம்பவர் இந்தியா ஃபவுண்டேஷன், கேரளாவில் உள்ள ரெஹாப் ஃபவுண்டேஷன் உள்ளிட்ட முன்னணிகளை சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் 1967 பிரிவுகளின் கீழ் "சட்டவிரோத அமைப்புகளாக" அறிவித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு பயங்கரவாத செயல்கள், மதமோதல்களில் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியாவின் 2-ம் நிலை தலைவர்களை குறிவைத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கேரளாவில் இன்று மொத்தம் 56 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் காலை முதல் அதிரடி சோதனை நடத்தினர்.
கேரளாவின் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, எர்ணாகுளம், ஆழப்புழா, கோட்டயம், வயநாடு, மலப்புரம் மாவட்டங்களில் இந்த சோதனைகள் நடத்தப்பட்டன. எர்ணாகுளத்தில் 8, ஆழப்புழா, மலப்புரத்தில் தலா 4 இடங்களிலும் திருவனந்தபுரத்தில் 3 இடங்களிலும் இந்த சோதனைகள் நடத்தப்பட்டன. திருவனந்தபுரதிதில் நெடுமங்காடு, தொன்னக்கல், பல்லிசால் ஆகிய இடங்களிலும் கோழிக்கோட்டில் நடபுரத்திலும் தேடுதல் வேட்டை மேற்கொள்ளப்பட்டது. ஆழப்புழாவில் சிந்தூர், வந்தனம், வீயாபுரம், எர்ணாகுளத்தில் எடவநாடு, ஆலுவா ஆகிய இடங்களிலும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
பி.எப்.ஐ.முன்னாள் மாநில கமிட்டி உறுப்பினர் நிசார் வீட்டில் சோதனைகள் நடத்தப்பட்டன. அங்கிருந்து பல செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஒரு பையில் எடுத்துச் செல்லப்பட்டன. பி.எப்.ஐ. முன்னாள் தேசிய தலைவர் ஓமா சலாமின் சகோதரர் வீட்டிலும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

கேரளாவின் பத்தனம்திட்டாவில் என்.ஐ.ஏ. ரெய்டு தகவல்கள் முன்கூட்டியே லீக் ஆனதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் கிடைத்தவுடன் பி.எப்.ஐ. முன்னாள் மண்டல செயலாளர் முகமது ரஷீத் தமது வீட்டில் இருந்து தப்பிவிட்டதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications