கேரளாவை மீண்டும் அச்சுறுத்தும் நிபா வைரஸ்..! அறிகுறிகள் என்ன.. வேக்சின் உள்ளதா? A to Z தகவல்கள்
திருவனந்தபுரம்: கேரளா மாநிலத்தில் 12 வயது சிறுவன் ஒருவர் நிபா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நிபா வைரஸ் பாதிப்பு, அறிகுறிகள், சிகிச்சை முறை ஆகியவை குறித்துப் பார்க்கலாம்.
Recommended Video
கேரளா மாநிலத்திற்கு இப்போது அடுத்தடுத்து பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. பக்ரீத் மற்றும் ஓணம் பண்டிகைகளுக்குப் பின்னர், அங்கு கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியது.
கடந்த சில நாட்களாகவே 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அங்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதைச் சமாளிக்கவே அம்மாநில அரசு பெரும் போராட்டம் நடத்தி வருகிறது.

கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ்
இந்தச் சூழலில் தற்போது நிபா வைரஸ் பாதிப்பும் அங்குக் கண்டறியப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோழிக்கோடு அருகே 12 வயது சிறுவன் நிபா வைரஸ் அறிகுறிகளுடன் நேற்றிரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். நிபா வைரஸ் சோதனை முடிவுகள் இன்று காலை தான் கிடைத்துள்ளது. ஆனால் அதற்குள் அச்சிறுவனின் உடல்நிலை மோசமாகி, அவர் உயிரிழந்துள்ளார். இதையடுத்து தேசிய நோய்க் கட்டுப்பாட்டு மையத்தின் குழு ஒன்று இப்போது கேரளா மாநிலத்திற்கு விரைந்துள்ளது.

முதலில் எங்கே
கடந்த 1998ஆம் ஆண்டு, மலேரியாவில் முதல் முறையாக நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. பன்றிகளில் இருந்து பரவிய நிபா வைரசால் மலேசியாவில் சுமார் 100 பேர் நிபா வைரசால் பலியாகினர். இந்தியாவில் முதலில் கடந்த 2001இல் மேற்கு வங்கத்தில் நிபா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. பழம் திண்ணி வௌவால்கள் மூலமே நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 2018இல் 18 பேருக்கு நிபா வைரஸ் உறுதி செய்யப்பட்டதில், 17 பேர் உயிரிழந்தனர்.

நிபா வைரஸ் பாதிப்பு எப்படி ஏற்படுகிறது
நிபா வைரசால் பாதிக்கப்பட்ட பன்றிகள் அல்லது மற்ற விலங்குகளிடம் இருந்து இது மனிதர்களுக்குப் பரவும். அதேபோல வௌவால்களால் பாதி சாப்பிட்ட பழங்களை மனிதர்கள் சாப்பிடும்போதும், நிபா வைரஸ் பாதிப்பு ஏற்படுகிறது. அதேபோல நிபா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள நபருடன் தொடர்பில் இருக்கும் மற்றவர்களுக்கும் வைரஸ் பாதிப்பு ஏற்படுகிறது. இப்படி ஒரு மனிதரிடம் இருந்து மற்றவர்களுக்கு நிபா வைரஸ் பரவுவது கணிசமாக அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

நிபா வைரஸ் அறிகுறிகள்
பொதுவாக ஒருவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட 5 முதல் 14 நாட்களில் அறிகுறிகள் தென்படத் தொடங்கும். அதன் பிறகு அறிகுறிகள் தீவிரமாகும். காய்ச்சல், தலைவலி, மயக்கம் மற்றும் குமட்டல் ஆகியவை முக்கிய அறிகுறிகள். சிலருக்கு மூச்சுத் திணறல், வயிற்று வலி, வாந்தி, சோர்வு மற்றும் பார்வை மங்குவது ஆகிவையும் ஏற்படும். சில சமயங்களில் நோயாளிகள் கோமாவுக்கு செல்லவும், மூளைக்காய்ச்சல் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
பழந்திண்ணி வௌவால்களால் உண்ணும் பழங்களை மனிதர்கள் உண்ணக் கூடாது. அதன் எச்சங்கள் இருந்த பழங்களையும் சாப்பிடக் கூடாது. அதேபோல நிபா வைரசால் பாதிக்கப்பட்ட ஒருவருடன் யாரும் தொடர்பு கொண்டு இருக்கக் கூடாது. நிபா வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்குத் தனியாக உணவு, பாத்திரங்கள், கழிப்பிடம் ஆகியவை தர வேண்டும். அவற்றை முறையாகச் சுத்தப்படுத்த வேண்டும். கைகளை சோப் அல்லது சானிடைசர் பயன்படுத்திச் சுத்தப்படுத்த வேண்டும்.

எச்சரிக்கை தேவை
நிபா வைரசால் பாதிக்கப்பட்ட நபர்கள் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் சிறப்பு வார்டுகளில் அனுமதிக்கப்படுவார்கள். சிறப்பு வார்டுகளில் இரு படுக்கைகளுக்கு இடையே குறைந்தது ஒரு மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். கொரோனா வைரசை போலவே நிபா வைரஸ் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் கண்டிப்பாக N-95 மாஸ்க்குகளை அணிந்திருக்க வேண்டும். அதேபோல நோயாளிகள் அணிந்துள்ள மாஸ்க்குளையும், அவர்களது துணிகளையும் மிக மிக எச்சரிக்கையுடன் கையாள வேண்டும்.

வேக்சின் உள்ளதா
நிபா வைரசுக்கு இதுவரை தடுப்பூசிகள் கண்டறியப்படவில்லை. கைகளைக் கழுவுவது, மாஸ்க் அணிவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் நிபா வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்தலாம். நிபா வைரஸ் மிக வேகமாகப் பரவாது என்பதால் வேக்சின்களுக்கு பதிலாக இதுபோன்ற நடவடிக்கைகள் மூலமே அதை எளிதாகக் கட்டுப்படுத்தலாம் என்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications