கேரளாவை மிரட்டும் உக்கிரமான நிபா வைரஸ்.. தடுப்பு நடவடிக்கை குறித்து மத்திய அரசு அவசர ஆலோசனை!
திருவனந்தபுரம்: கேரளாவில் உயிரைக்கொள்ளும் நிபா வைரஸ் தாக்கம் இருப்பதி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இதனை தடுப்பது குறித்து மத்திய அரசு அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.
கேரள மாநிலத்தை மீண்டும் தாக்கியுள்ளது நிபா வைரஸ். கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த கல்லுாரி மாணவர் 'நிபா' வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. அவரது ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக புனேவில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டது.
இந்த பரிசோதனையில், மாணவருக்கு 'நிபா' வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. இதனை அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கேகே சைலஜா உறுதிபடுத்தியுள்ளார். இதையடுத்து எர்ணாகுளம் மருத்துவமனையில் நிபா வைரஸ் காய்ச்சலுக்கு என தனி வார்டு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
கேரளாவை உலுக்கும் நிபா வைரஸ்.. அறிகுறிகள் என்ன? தடுக்கும் முறை எப்படி?
கடந்த ஆண்டு 13 பேர் பலி
கடந்த ஆண்டு மே மாதம் நிபா வைரஸ் தாக்கியது. இதில் கோழிக்கோடு மாவட்டத்தில் மட்டும் 13 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து தடுப்பு நடவடிக்கைகளை மாநில அரசு முடுக்கிவிட்டதை தொடர்ந்து உயிரிழப்பு கட்டுப்படுத்தப்பட்டது.
கேரளாவை அச்சுறுத்தும் நிபா
இந்நிலையில் தற்போது மீண்டும் கேரளாவை அச்சுறுத்தி வருகிறது நிபா வைரஸ். நிபா வைரஸ் வவ்வால்களால் பரவும் ஒரு வகை காய்ச்சல். மிகவும் உக்கிரமான இந்த வைரஸ் உயிரிழப்பை ஏற்படுத்தும் ஆபத்தான வைரஸ் என கூறப்படுகிறது.
அவசர ஆலோசனை
இந்நிலையில் கேரளாவில் நிபா வைரஸ் தாக்குதலை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளன. நிபா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
உதவிகளை செய்ய தயார்
மேலும் கேரள அரசுடன் மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது நிபா வைரஸ் தொடர்பாக கேரள அரசுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய தயார் என்று மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் உறுதியளித்தார்.
கேரளாவுக்கு குழுவை அனுப்புகிறது
மேலும் நிபா வைரஸ் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய 6 பேர் கொண்ட குழுவை மத்திய அரசு கேரள மாநிலத்திற்கு அனுப்புகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் பருவமழை தொடங்கவுள்ளதால் நிபா வைரஸ் தாக்குதலை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசும் கேரள அரசும் இணைந்து செயல்பட்டு வருகிறது.
அணில், வவ்வால் கடித்த பழங்கள்
இதனிடையே நிபா வைரஸ் அணில் மற்றும் வவ்வால்கள் மூலம் பரவும் என்பதால் அணில்கள் மற்றும் வவ்வால்கள் கடித்த பழங்களை சாப்பிட வேண்டாம் என கேரள அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. காய்ச்சல் அறிகுறிகள் இருந்தாலே மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெறவேண்டும் என்றும் கேரள அரசு வேண்டுகோள்விடுத்துள்ளது.