கேரளாவில் களைகட்டும் ஓணம்- கவனம் ஈர்க்கும் பூணூல் இல்லாத திராவிடர் நிற மகாபலி சக்கரவர்த்தி!
திருவனந்தபுரம்: கேரளாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஒட்டப்பட்ட சுவரொட்டிகளில் பூணூல் தவிர்க்கப்பட்ட திராவிடர் நிறமான கறுப்பு நிற மகாபலி சக்கரவர்த்தி காட்சி தருவது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
கேரளாவை ஆண்ட திராவிடர் மரபின மன்னர்களில் ஒருவர் மகாபலி அல்லது மாபலி. விழாக்கள், மன்னர்களின் சிறப்புகளில் ஏதோ ஒரு புராணத்தை இணைத்துவிடுவது என்பது இந்துத்துவ மரபு.

ஓணம் பண்டிகை
கேரளாவை ஆண்ட மகாபலி மன்னனுக்கும் கடவுளரான மகா விஷ்ணுவுக்கும் ஒரு இணைப்பை உருவாக்கும் புராணக் கதைதான் வாமன அவதாரம். மகாவிஷ்ணுவின் அனுமதியுடன் ஆண்டுக்கு ஒருமுறை தம் மக்களை காண மகாபலி சக்கரவர்த்தி வலம் வருகிறார். அத்தகைய நன்னாளையே ஓணம் பண்டிகையாக கேரளா மக்கள் கொண்டாடுகின்றனர். அதாவது தங்களை காண வரும் மகாபலி சக்கரவர்த்தையை மக்கள் வரவேற்கும் திருவிழாதான் ஓணம் பண்டிகை. இந்த ஆண்டு ஓணம் பண்டிகை நாளை மறுநாள் செப்டம்பர் 8-ந் தேதி கொண்டாடப்படுகிறது.

பொதுவான மகாபலி உருவம்
பொதுவாக மகாபலி சக்கரவர்த்தி, அசுரர் குலத்தவர்; அரக்கர் இனத்தவர் என இந்துத்துவா பார்வையில் சொல்லப்பட்டது; அத்துடன் நிற்காமல் புராணங்களில் வலம் வரும் மன்னர் கதாபாத்திரங்கள் போல மகாபலி சக்கரவர்த்திக்கும் பூணூல் அணிவித்து பருமனான உடல் கொண்டவராகவே சித்தரித்து வந்தனர். இத்தகைய மகாபலி உருவங்களைத்தான் நாம் பார்த்திருக்கிறோம்.

திராவிடர் மகாபலி
ஆனால் கேரளாவில் இந்த முறை மகாபலி சக்கரவர்த்தியின் உருவமே மாறி இருக்கிறது. அதாவது மக்களோடு மக்களாக வாழ்ந்து மடிந்த மாபெரும் சக்கரவர்த்தி என்பதால், திராவிடர் மரபினத்துக்கு உரித்தான கறுமை நிறத்துடன்; கேரளா மக்களின் பண்பாட்டுக்கே உரித்தான குடையுடன் பூணூல் அல்லாத வேட்டி கட்டிய, உடலில் நீல நிற துண்டுடன் இம்முறை கேரளாவில் மகாபலி சக்கரவர்த்தியின் உருவம் இடம்பெற்றுள்ளது. சுருக்கமாக
சொன்னால் ஒரிஜனல் திராவிடர் மகாபலி மன்னர் உருவங்கள்தான் இம்முறை கேரளா சுவரொட்டிகளில் இடம்பெற்றுள்ளன.

கேரளா கல்லூரிகளில்...
கேரளாவில் இடதுசாரி மாணவர் சங்கங்கள் வலிமையாக இருக்கும் கல்லூரிகளில் திராவிடர் மகாபலி சக்கரவர்த்தி உருவங்கள்தான் ஒட்டப்பட்டுள்ளன. ஒடுக்கப்பட்ட மக்களின் மாபெரும் மன்னன் என்பதாலேயே மகாபலி சக்கரவர்த்தியின் இந்த மாறுபட்ட உருவத்தை பயன்படுத்துகிறோம் என்கின்றனர் மாணவர் அமைப்பினர். ஆனாலும் மாணவர்கள் தன்னிச்சையாகவே ஒருமித்த எண்ணமாகவே திராவிடர் மகாபலி உருவத்தை பயன்படுத்துகின்றனர் எனவும் மாணவர் சங்கத் தலைவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.












Click it and Unblock the Notifications