கேரளாவில் ஓணம் பண்டிகை.. உற்சாக நடனம் போட்ட ஹிஜாப் அணிந்த மாணவிகள்.. கவனத்தை ஈர்த்த வீடியோ!
திருவனந்தபுரம்: ஓணம் பண்டிகையையொட்டி கேரள மாநிலம் மலப்புரம் அருகே உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் நடந்த நிகழ்ச்சியில் முஸ்லீம் மாணவிகள் சிலர் ஹிஜாப் அணிந்துகொண்டு நடனம் ஆடும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. பலரும் இதற்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
கேரளாவில் ஓணம் பண்டிகை கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 8 தேதி வரை கொண்டாடப்பட்டு வருகிறது.
பல்வேறு கலாசாரங்கள், மொழிகள் என வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட நாடாக உள்ள இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு பண்டிகை மிகவும் பிரசித்தி பெற்றதாக உள்ளது.

10 நாட்கள்
தமிழ்நாட்டில் அறுவடை திருநாளன பொங்கல் தமிழர் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இதேபோல், கேரளாவில் ஓணம் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்படும். 10 நாட்கள் கொண்டாடப்படும் இந்த பண்டிகை கேரளாவில் மலையாளம் மொழி பேசும் மக்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில், புத்தாடை அணிந்து, விதவிதமான உணவு பொருட்களை சமைத்து உற்றார் உறவினர்களுக்கு கொடுத்து மகிழ்கின்றனர்.

ஓணம் பண்டிகை
அதன்படி, கேரளாவில் இந்த வருடத்திற்கான ஓணம் பண்டிகை ஆகஸ்ட் 30 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 8 தேதி வரை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஓணம் பண்டிகையில் அத்தப்பூ கோலம் இடும் பெண்கள் கேரளாவின் பாரம்பரிய சேலையும் அணிந்து உற்சாகமாக வலம் வருவார்கள். கேரளா மட்டும் அல்லாது வெளியிடங்களில் வசிக்கும் மலையாள மக்களும் ஓணம் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுகின்றனர்.

காங்கிரஸ் எம்.பி சசி தரூர்
இந்த நிலையில் கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு மேல் நிலை பள்ளியில் ஹிஜாப் அணிந்த மாணவிகள், ஓணம் பண்டிகையை உற்சாகமாக நடனம் ஆடி கொண்டாடுவது மனதை கவரும் வகையில் அமைந்துள்ளது. முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் எம்.பியுமான சசி தரூர் தனது ட்விட்டரில் இந்த பதிவை லைக் செய்துள்ளார். சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ டிரெண்ட் ஆகி வருகிறது.

நடனம் ஆடிய மாணவிகள்
மலப்புரம் மாவட்டம் வண்டூர் நகரத்தில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஓணம் பண்டிகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஒணம் பண்டிகை கொண்டாட்டத்தின் போது பள்ளியில் பயிலும் மாணவிகள் அங்கு ஒலிபரப்பப்படும் இசைக்கு நடனம் ஆடுகின்றனர். இதில் ஹிஜாப் அணிந்த மாணவிகளும் உற்சாகமாக நடனம் ஆடுவது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ஹிஜாப் அணிந்த மாணவிகளுக்கு..
மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக ஓணம் பண்டிகை கொண்டாடும் முஸ்லிம் மாணவிகளுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோ பதிவுக்கு நெட்டிசன் ஒருவர் கூறியிருக்கும் கருத்தில், 'ஹிஜாப் அணிந்த மாணவிகளுக்கு கல்வி நிலையத்தில் அனுமதி மறுத்த நமது அண்டை மாநிலத்திற்கும், ஓணம் இந்துக்களின் பண்டிகை என கூறும் தரம் தாழ்ந்தவர்களுக்கு இந்த வீடியோவை அர்ப்பணிக்கிறேன்' என்று பதிவிட்டு இருக்கிறார். இந்த பதிவை சசி தரூர் உள்பட பல நெட்டிசன்கள் லைக் செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications