சி.எம் ஏரியாவுக்கே இந்த கதியா? இருளில் நீலாங்கரை! விஜய் வீட்டு தெருவில் போராட்டத்தில் குதித்த மக்கள்
சென்னை: தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்ற சில நாட்களிலேயே, புதிய தவெக அரசுக்கு மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது தற்போதைய மின்வெட்டுப் பிரச்சனை. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில தினங்களாகத் தொடரும் கடுமையான அறிவிக்கப்படாத மின்வெட்டைக் கண்டித்து, பொதுமக்கள் வீதிகளில் இறங்கிப் போராடத் தொடங்கியுள்ளனர்.
இதன் உச்சகட்டமாக, நேற்று நள்ளிரவு சென்னை நீலாங்கரையிலுள்ள முதலமைச்சர் விஜய்யின் இல்லம் அமைந்துள்ள பகுதிக்கு அருகே பொதுமக்கள் திரண்டு திடீர் சாலை மறியல் மற்றும் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நள்ளிரவில் நீலாங்கரையில் வெடித்த போராட்டம்
முதலமைச்சர் விஜய் வீடு உள்ள சோழிங்கநல்லூர் தொகுதி எல்லைக்குட்பட்ட இசிஆர் (ECR) மற்றும் நீலாங்கரைப் பகுதிகள் கடந்த சில நாட்களாகவே கடுமையான மின்வெட்டைச் சந்தித்து வருகின்றன. நேற்று இரவு பல மணி நேரமாகியும் மின்சாரம் வராததாலும், மின்வாரிய அலுவலகத்தைத் தொடர்பு கொண்டும் முறையான பதில் கிடைக்காததாலும் ஆத்திரமடைந்த நீலாங்கரைப் பகுதி பொதுமக்கள், நள்ளிரவில் தங்கள் குழந்தைகளுடன் வீதிக்கு வந்தனர்.
முதலமைச்சர் வசிக்கும் தெருவின் முக்கியச் சந்திப்பில் ஒன்றுதிரண்ட நூற்றுக்கணக்கான பொதுமக்கள், தவெக அரசுக்கு எதிராகவும் மின்வாரியத்தைக் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர். "முதலமைச்சர் வசிக்கும் பகுதிக்கே இந்த நிலைமை என்றால், சாமானிய மக்களின் நிலை என்ன?" எனக் கேள்வி எழுப்பி, இசிஆர் சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நீலாங்கரை காவல்துறையினர் மற்றும் மின்வாரிய அதிகாரிகள், பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். "புதிய மின்மாற்றி (Transformer) பழுது மற்றும் அதிகப்படியான பளு (Load issue) காரணமாகவே மின்விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது, விரைவில் சரிசெய்யப்படும்" என அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து, நள்ளிரவு 2 மணி அளவில் மக்கள் கலைந்து சென்றனர்.
மக்கள் கொந்தளிப்பும் எதிர்க்கட்சிகளின் விமர்சனமும்
கோடை வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருக்கும் இந்த மே மாதத்தில், நள்ளிரவு நேரங்களில் ஏற்படும் தொடர் மின்வெட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை முற்றிலும் முடக்கியுள்ளது. தூக்கமில்லாமல் தவிக்கும் முதியவர்கள் மற்றும் குழந்தைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். "ஆட்சிப் பொறுப்பேற்ற உடனேயே நிர்வாகச் சீர்குலைவு ஏற்பட்டுள்ளது" என சமூக வலைத்தளங்களிலும் மக்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இவ்விவகாரத்தைக் கையில் எடுத்துள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி மற்றும் எதிர்க்கட்சிகள், தவெக அரசின் நிர்வாகத் திறமையின்மையே இந்த மின் நெருக்கடிக்குக் காரணம் எனக் கடுமையாகச் சாடியுள்ளனர். தேர்தல் வாக்குறுதிகளில் தடையற்ற மின்சாரம் தருவோம் எனக் கூறிவிட்டு, ஆட்சிக்கு வந்த சில நாட்களிலேயே தலைநகரையே இருளில் மூழ்கடித்துள்ளதாக அவர்கள் விமர்சித்துள்ளனர்.
நாள் 26 மே , நேரம் இரவு 3:00 am இரவு நேர போராட்டம் முதல்வர் வீட்டின் எதிரே , சிக்கு புக்கு சிக்கு புக்கு பிக்பாஸ்
— சிங்கம் (@SadistXOX) May 25, 2026
வாழ்த்துக்கள் மாற்ற விரும்பிகளே pic.twitter.com/Vy8KPr33gT
மின்சாரத் துறையின் விளக்கம்
மறுபுறம், மின்சாரத் துறை அமைச்சர் ஆர். நிர்மல்குமார் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். மாநிலத்தில் மின் பற்றாக்குறை (Power deficit) எதுவும் இல்லை என்றும், கோடைகால உச்சகட்டத் தேவையால் உள்ளூர் விநியோகக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள பளு மற்றும் மின்மாற்றிகளில் ஏற்படும் தொழில்நுட்பக் கோளாறுகளே (Overload & Technical faults) இதற்குக் காரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். போர்க்கால அடிப்படையில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் உறுதி அளித்துள்ளார்.
இருப்பினும், முதலமைச்சரின் வீட்டின் அருகிலேயே மக்கள் திரண்டு போராட்டம் நடத்திய சம்பவம், புதிய அரசுக்கு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள ஆரம்பக்கட்ட அதிருப்தியைக் காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.












Click it and Unblock the Notifications