பாழுங்கிணத்துக்குள் சத்தம்.. ரத்தத்தை உறைய வைத்த ஒத்த கை கோவிந்தன்! மொத்தி எடுத்த மக்கள்! என்னாச்சு?
திருவனந்தபுரம்: கேரளாவையே பெரும் பரபரப்புக்கு உள்ளாக்கிய சௌமியா கொலை வழக்கில் சிறையில் இருந்த 'ஒத்த கை' கோவிந்தசாமி தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பாழுங் கிணற்றுக்குள் பதுங்கி இருந்தவரை கைது செய்து இருக்கின்றனர் போலீசார். கிணற்றுக்குள் இருந்தவரை தலைமுடியை பிடித்து இழுத்த மக்கள், தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
கடந்த 2011 ஆம் ஆண்டு இந்தியா முழுமைக்கும் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது கேரளாவை சேர்ந்த சௌமியா பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம். பாலக்காடு அருகே மஞ்சகல் பகுதியைச் சேர்ந்த 21 வயதான இளம் பெண் சௌமியா, 2011 ஆம் ஆண்டு பிப்ரவரி ஒன்றாம் தேதி எர்ணாகுளத்தில் இருந்து சேரனுர் நோக்கி ரயில் பயணம் மேற்கொண்டார்.
அப்போது அந்த பெட்டியில் அவர் மட்டுமே பயணம் செய்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்தப் பெட்டியில் திடீரென ஏறிய தமிழகத்தின் கடலூர் மாவட்டம் சேர்ந்த சார்லி தாமஸ் என்ற கோவிந்தசாமி அந்த பெண்ணை கொடூரமாக தாக்கி இருக்கிறார். அவருக்கு ஒரே ஒரு கை மட்டுமே இருக்கும் நிலையில் 'ஒத்த கை' கோவிந்தசாமி என அப்பகுதி மக்கள் அழைப்பார்களாம்.

இந்த ரயிலில் ஏறிய கோவிந்தசாமி அந்த பெண்ணை தாக்கி ரயிலில் இருந்து கீழே தள்ளி இருக்கிறார். தொடர்ந்து தானும் கீழே குதித்து படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய சௌமியாவை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். தொடர்ந்து அவரது நகை, பணம், செல்போன் ஆகியவற்றை திருடிவிட்டு கோவிந்தசாமி தப்பினார். இதற்கிடையே தண்டவாளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சௌமியாவை அருகில் இருந்தோர் மீட்டு திருச்சூர் மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி சௌமியா பிப்ரவரி 6-ம் தேதி உயிர் இழந்தார். இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் கோவிந்தசாமியை கைது செய்தனர். அரிதிலும் அரிதான வழக்காக கருதி கோவிந்தசாமிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. தனது தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டுமென கோவிந்தசாமி முறையிட்ட நிலையில் அவரது தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
தொடர்ந்து கண்ணூர் மத்திய சிறையில் கோவிந்தசாமி அடைக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் நேற்று அதிகாலை கோவிந்தசாமி சிறையில் இருந்து தப்பிச் சென்றார். இது தொடர்பாக சிசிடிவி காட்சிகளும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தீவிர விசாரணை மேற்கொண்ட கண்ணூர் போலீசார் மற்றும் சிறைத்துறை அதிகாரிகள் தொடர்ந்து பல்வேறு சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கோவிந்தசாமியை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
4 மணி நேர விசாரணையில் கண்ணூர் அருகே கலப்பு என்ற பகுதியில் பாழடைந்த கிணறு ஒன்றுக்குள் கோவிந்தசாமி பதுங்கி இருந்தார். அதை அடுத்து அப்பகுதி மக்கள் உதவியுடன் கோவிந்தசாமியை கைது செய்த போலீசார் மீண்டும் சிறையில் அடைத்துள்ளனர். ஏற்கனவே பாலியல் வன்கொடுமை வழக்கில் அவர் தண்டனை பெற்றிருக்கும் நிலையில், சிறையில் இருந்து தப்ப முயன்றதாக மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஒத்த கையுடன் ஒருவர் சென்றாரா? என போலீசார் விசாரணை நடத்திய நிலையில் பொதுமக்கள் அடையாளம் காட்டி அந்த நபரை கைது செய்திருக்கின்றனர். சிறையில் இருந்து தப்பிய கைதியை நான்கு மணி நேரத்திற்குள் போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பொதுமக்களிடம் பாராட்டை பெற்று இருக்கிறது. அதே நேரத்தில் ஒரு கை மட்டுமே உடைய நபர் சிறையில் இருந்து தப்பியது எப்படி? சிறையில் இருந்த சக கைதிகள் அல்லது காவல் அதிகாரிகள் அவருக்கு உதவி செய்தார்களா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர் பொதுமக்கள்.
முன்னதாக கோவிந்தசாமி இருக்கும் தகவல் தெரிந்ததும் அப்பகுதியில் ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். இந்நிலையில், தீயணைப்புத் துறையினர் உதவியுடன் போலீசார் கோவிந்தசாமியை கிணற்றிலிருந்து மீட்டு நிலையில் அவரது தலை முடியை பிடித்து இழுத்த பொதுமக்கள் சரமாரியாக தாக்கினர். பொதுமக்களிடமிருந்து கோவிந்தசாமியை பாதுகாப்பாக மீட்டு சென்ற போலீசார் அவரை சிறையில் அடைத்துள்ளனர். தற்போது கோவிந்தசாமி தாக்கப்பட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications