கேரளாவில் இரவு நேர ஊரடங்கு ரத்து... படிபடியாக இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் மக்கள்..!
திருவனந்தபுரம்: கொரோனா பரவல் காரணமாக கேரளாவில் அமலில் இருந்த இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை ரத்து செய்துள்ளார் அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன்.
கடவுளின் தேசம் என வர்ணிக்கப்படும் கேரளாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியது. இதனால் அம்மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. அந்த வகையில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவரும் வகையில் அங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இதனால் கேரள மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. இருப்பினும் கொரோனாவை கட்டுப்படுத்த அரசு முன்னெடுத்து வரும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு நல்கி வந்தனர்.
இந்நிலையில் நாள்தோறும் 30 ஆயிரம் என்ற அளவில் இருந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக சரியத் தொடங்கியிருக்கிறது. 30 ஆயிரத்தில் இருந்து 26 ஆயிரம் 19 ஆயிரம் என அடுத்தடுத்து கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்தது.
இதனிடையே நிபா வைரஸ் அச்சுறுத்தல் கேரள மக்களை பீதி கொள்ளச் செய்துள்ளதால் அது தொடர்பான தடுப்பு பணிகளையும் கேரள அரசு தீவிரமாக செய்து வருகிறது. அண்டை மாநிலமான தமிழகம் மற்றும் கர்நாடகாவில் ஓரளவு இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ள நிலையில் கேரளாவில் மட்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக பின்பற்றப்பட்டன.
இதனால் பலரும் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு நினைத்த நேரத்தில் செல்ல முடியாமல் தவித்து வந்தனர். இந்தச் சூழலில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை திரும்பப்பெறுவதாக அறிவித்திருக்கிறார் கேரள முதல்வர் பினராயி விஜயன்.

கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுவிட்டது என்பதற்காக மக்கள் அஜாக்கிரதையாக இருக்கக்கூடாது என்றும் வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் முககவசம், சமூக இடைவெளி உள்ளிட்டவைகளை பின்பற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழகத்தில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டதால் கேரளாவிலும் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளை திறப்பது குறித்து ஆலோசித்து வருகிறார் பினராயி. இதனிடையே ஆசிரியர்கள் ஒரு டோஸ் தடுப்பூசியையாவது இந்த வாரத்திற்குள் செலுத்திக்கொள்ள வேண்டும் என பினராயி விஜயன் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், இளங்கலை மற்றும் முதுகலை இறுதியாண்டு கல்லூரி மாணவர்களுக்கு அக்டோபர் 4 முதல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்ற அறிவிப்பையும் பினராயி வெளியிட்டுள்ளார். இதன் மூலம் கேரள மக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கைக்கு படிபடியாக திரும்பத் தொடங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications