'சாரே.. ஒரு சாயா..' டீ கடைக்கு திடீர் விசிட் அடித்த ராகுல் காந்தி.. வைரலாகும் கலக்கல் வீடியோ
திருவனந்தபுரம்: கேரளாவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு திரும்பிய ராகுல் காந்தி, ஆட்டோ ஓட்டுநர்களின் வேண்டுகோளை ஏற்று அவர்களுடன் டீ குடித்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
வயநாடு எம்பி ராகுல் காந்தி நேற்று கேரளாவின் களிகவு என்ற ஊரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு கார் மூலம் திருவனந்தபுரத்திற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்,
அப்போது ராகுலின் கார் வண்டூர் வழியே சென்ற போது, சில ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர்கள், ராகுலை நோக்கி கை அசைத்துள்ளனர். இதைப் பார்த்ததும் உடனடியாக தனது காரை நிறுத்திய ராகுல் காந்தி, ஆட்டோ ஓட்டுநர்கள் அருகே சென்று அவர்களுடன் கலந்துரையாடினார்.

சார் ஓரு சாயா
அப்போது அந்த ஆட்டோ ஓட்டுநர்களில் ஒருவர், "சார் நாம் ஒன்றாக டீ குடிக்கலாமா' என்று கேட்டுள்ளார். அந்த ஆட்டோ ஓட்டுநரின் அழைப்பை ஏற்ற ராகுல் காந்தி, அவர்களுடன் அருகிலிருந்த டீ கடைக்குச் சென்றார். அந்த டீக்கடையில் அவர்களுடன் டீ குடித்த ராகுல் காந்தி, கொரோனா காலத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் என்ன மாதிரியான சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர் என்பது குறித்துக் கேட்டார்.

ராகுல் கலந்துரையாடல்
மேலும், பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது அன்றாட வாழ்வில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது குறித்தும் ஆட்டோ ஓட்டுநர்களிடம் கேட்டறிந்தார். இது மட்டுமின்றி தன்னால் முடிந்த உதவியைச் செய்வதாகவும் அவர்களுக்கு உறுதி அளித்தார். எந்தவொரு முன்னறிவிப்பும் இன்றி தங்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று ராகுல் டீ குடிக்க வந்ததாகத் தெரிவித்த ஆட்டோ ஓட்டுநர், ராகுல் காந்தி மிகச் சிறந்த ஒரு மனிதர் என்றும் புகழ்ந்துள்ளார்.

எது இந்தியா
முன்னதாக வண்டூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தி, "எது இந்தியா? இன்றைய காலத்தில் இது தான் முக்கிய கேள்வியாக உருவெடுத்துள்ளது. சாவர்க்கர் போன்றவர்களை நீங்கள் படித்தால், அவர்கள் இந்தியாவை புவியியல் அடிப்படையில் வரையறுக்கிறார்கள். அவரை பின்தொடர்பவர்கள் பேனாவை எடுத்துக் கொண்டு, வரைபடம் ஒன்றை வரைந்து, இது தான் இந்தியா என்று கூறுகிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை அந்த கோடு தான் இந்தியா. ஆனால் என்னைப் பொறுத்தவரை இந்தியா என்பது இங்கு வாழும் மக்கள் தான்.

ஆர்எஸ்எஸ் - காங்கிரஸ்
ஆர்எஸ்எஸ்ஸைப் பொறுத்தவரை, இந்தியா என்பது வரைபடத்தில் உள்ளது மட்டுமே. ஆனால் காங்கிரஸைப் பொறுத்தவரை, இந்தியா என்பது இந்நாட்டில் வாழும் மக்கள் தான். ஒருவர் வேலைக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் போது, அவர்கள் மற்றவர்களை மரியாதையுடன் நடத்தும்போது, அவர்கள் அங்கு இந்தியாவின் உயர் மதிப்புகளை நிலைநாட்டுகிறார்கள். வெளிநாடுகளில் உள்ள ஆயிரக்கணக்கான கேரள செவிலியர்கள் இதேபோல இந்திய கொள்கைகளை நிலைநாட்டுவதை நம்மால் பார்க்க முடிகிறது" என்று பேசினார்.

ராகுல் காந்தி
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திரும்புகையில் தான் ஆட்டோ ஓட்டுநர்கள் தங்களுடன் டீ குடிக்க வேண்டும் என ராகுலுக்கு கோரிக்கை விடுத்தனர். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த 2019 மக்களவை தேர்தலில் வயநாடு தொகுதியில் போட்டியிட்ட ராகுல் சுமார் 4.90 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். அதன் பிறகு தொடர்ச்சியாக ராகுல் வயநாடு தொகுதியில் மக்களைச் சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications