நெஞ்சு பதறுதே.. நேரில் ஆறுதல் சொல்ல முடியலையே.. ராகுல், பிரியங்கா காந்தியின் வயநாடு பயணம் ரத்து!
திருவனந்தபுரம்: கேரளாவில் பெருமழை-நிலச்சரிவால் 150-க்கும் மேற்பட்டோர் பலியான வயநாடு மலைப் பகுதிக்கு லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் செல்ல இருந்த பயணம் மோசமான வானிலையால் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. வயநாடு லோக்சபா தொகுதியில் 2 முறை எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ராகுல் காந்தி. அவர் தமது பதவியை ராஜினாமா செய்ததால் வயநாடு லோக்சபா தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட இருக்கிறார் பிரியங்கா காந்தி.
கேரளா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை கொட்டித் தீர்த்து வருவதால் காட்டாறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அணைகள் நிரம்பி வழிவதால் உபரி நீர் பெருமளவு திறந்துவிடப்பட்டுள்ளது. கேரளாவின் மலைப் பகுதிகளில் பயங்கர நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.

வயநாடு மலைப் பகுதிகளான சூரல்மலை, முண்டகக்கை ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்த ஏற்பட்ட நிலச்சரிவுகளும் பெருக்கெடுத்து ஓடிய காட்டாற்று வெள்ளமும் மிகப் பெரிய மனிதப் பேரழிவை ஏற்படுத்தி இருக்கின்றன. 150-க்கும் மேற்பட்டோர் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்துள்ளனர். 200க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 3,000-க்கும் அதிகமானோர் நிவாரண முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். வயநாடு மலைப் பகுதிகளில் 2-வது நாளாக இன்றும் மீட்புப் பணிகள் தொடருகின்றன.

இந்த நிலையில் வயநாடு தொகுதியின் முன்னாள் எம்பியான லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடி மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் வயநாடு மீட்பு பணிகள் குறித்து பேசினார். அதேபோல வயநாடு மாவட்ட ஆட்சியருடனும் தொடர்பு கொண்டு நிலைமையை கேட்டறிந்தார் ராகுல் காந்தி.
இதனைத் தொடர்ந்து ராகுல் காந்தியும் அவரது சகோதரியும் வயநாடு வருகை தர இருப்பதாக காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்தனர். ஆனால் வயநாடு மலைப் பகுதிகளில் நிலவும் மோசமான வானிலையால் ராகுல், பிரியங்கா காந்தியின் வயநாடு பயணம் திடீரென ஒத்தி வைக்கப்பட்டது.
2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் உ.பி.யின் அமேதி, கேரளாவின் வயநாடு ஆகிய இரு தொகுதிகளில் ராகுல் காந்தி போட்டியிட்டார். அமேதியில் தோல்வியைத் தழுவிய ராகுல் காந்திக்கு வயநாடு தொகுதி வாக்காளர்கள் பிரம்மாண்ட வெற்றியைக் கொடுத்து அவரது கவுரவத்தைக் காப்பாற்றினர். 2024 லோக்சபா தேர்தலிலும் கேரளாவின் வயநாடு மற்றும் உ.பி. ரேபரேலியில் போட்டியிட்டு இரு தொகுதிகளிலும் வென்றார் ராகுல் காந்தி. அதேநேரத்தில் வயநாடு தொகுதி எம்பி பதவியை ராஜினாமா செய்தார். ஆனாலும் வயநாடு லோக்சபா தொகுதி இடைத்தேர்தலிலும் தங்கையும் காங்கிரஸ் பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications