புகழ்பெற்ற மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் காலமானார்! சோகத்தில் இலக்கிய உலகம்!
திருவனந்தபுரம்: புகழ்பெற்ற மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் காலமானார். இதய செயலிழப்பு காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த எம்.டி.வாசுதேவன் நாயர், 91 வயதில் இன்று காலமானார். அவரது மறைவு, எழுத்துலகினருக்கும், வாசகர்களுக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மலையாள இலக்கிய உலகில் அழியாத முத்திரை பதித்தவர் எம்.டி.வாசுதேவன் நாயர். 1933 ஆம் ஆண்டு கேரள மாநிலம் மலப்புரத்தின் பொன்னன்னி தாலுகாவில் உள்ள கூடலூரில் பிறந்தார். மாமக்காவு தொடக்கப்பள்ளி, குமரநெல்லூர் மேல்நிலைப்பள்ளி மற்றும் பாலக்காட்டில் உள்ள விக்டோரியா கல்லூரியில் படித்தார். பள்ளிப் பருவத்திலேயே எழுதத் தொடங்கினார்.

விக்டோரியா கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது அவரது முதல் சிறுகதைத் தொகுப்பு வெளியானது. தொடர்ந்து எழுதி வந்த அவர், 1957ல் மாத்ருபூமி இதழில் பணிக்குச் சேர்ந்தார். நாலுகெட்டு நாவலுக்கான கேரள அரசின் சாகித்ய அகாடமி விருதை வென்றுள்ளார். அவரது ஏராளமான படைப்புகள் தமிழ் மற்றும் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
இந்திய அரசின் பத்ம பூஷண் விருது பெற்றவர் எம்.டி.வாசுதேவன் நாயர். இந்தியாவில் இலக்கியத்துக்காக வழங்கப்படும் மிக உயரிய விருதான ஞானபீட விருது கடந்த 1996-ம் ஆண்டு அவருக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது. மேலும் சிறந்த திரைக்கதைக்காக 4 தேசிய விருதுகளையும், 11 முறை மாநில அரசின் விருதுகளையும் வென்றுள்ளார் எம்.டி.வாசுதேவன் நாயர்.
சினிமா உலகிலும் பெரும் பாய்ச்சல்களை நிகழ்த்தியவர் எம்.டி.வாசுதேவன் நாயர். 54 படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ள எம்.டி.வாசுதேவன் நாயர், 7 படங்களை இயக்கியும் உள்ளார். எம்.டி.வாசுதேவன் நாயரின் பல்வேறு சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு அண்மையில் 'மனோரதங்கள்’ என்ற பெயரில் ஆந்தாலஜியாக வெளியானது.
வாசுதேவன் நாயர் கடந்த சில நாட்களாக கோழிக்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். மூச்சு விடுவதில் சிரமம் மற்றும் இதய பாதிப்பு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை நேற்று சற்று மேம்பட்ட நிலையில், வெண்டிலேட்டர் அகற்றப்பட்டது.
இந்நிலையில், இதய செயலிழப்பு காரணமாக, மூச்சு விடுவதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டு இன்று காலமானார் எம்.டி.வாசுதேவன் நாயர். அவரது உடல், கோழிக்கோட்டில் உள்ள அவரது வீட்டிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அவரது இறுதிச் சடங்குகள் நாளை வியாழக்கிழமை மாலை 5 மணியளவில் நடைபெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
எழுத்தாளர் எம்.டி வாசுதேவன் நாயரின் மறைவு காரணமாக, நாளை மற்றும் நாளை மறுநாள் (டிசம்பர் 26, 27) ஆகிய 2 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது. அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில், நாளை நடைபெற இருந்த அமைச்சரவை கூட்டம் உட்பட அனைத்து அரசு நிகழ்ச்சிகளையும் ஒத்தி வைக்க கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.
எழுத்தாளர் எம்.டி வாசுதேவன் நாயரின் மறைவுக்கு எழுத்தாளர்களும், திரையுலகினரும், அவரது வாசகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். “மலையாள இலக்கியத்தின் தலைமகன்களில் ஒருவரான எம்.டி.வாசுதேவன் நாயர் மறைந்தார். மலையாள இலக்கியத்தில் 'தொட்டதெல்லாம் பொன்னாக்கியவர்’ என எம்.டி கருதப்படுகிறார். எம்.டியின் நாவல்கள், சிறுகதைகள் மட்டுமல்ல கட்டுரைகளும்கூட முக்கியமானவை. சுவாரசியமாக வாசிக்க முடியாத ஒரு வரிகூட அவர் எழுதியதில்லை.” என முன்னணி தமிழ் எழுத்தாளர் ஜெயமோகன் நினைவுகூர்ந்துள்ளார்.












Click it and Unblock the Notifications