ஐப்பசி மாத பூஜைகள்! இன்று சபரிமலை ஐயப்பன் கோயில் நடைதிறப்பு! எப்போது வரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம்
சபரிமலை: ஐப்பசி மாத பூஜைக்காகச் சபரிமலை ஐயப்பன் கோயில் இன்று மாலை நடை திறக்கப்படுகிறது. வரும் அக். 22ஆம் தேதி வரை பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுகிறார்கள்.
உலகப் புகழ் பெற்ற ஐயப்பன் கோவிலாக உள்ளது சபரிமலை ஐயப்பன் கோயில். கேரளாவில் அமைந்துள்ள இந்த கோயிலுக்குத் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் பக்தர்கள் தரிசனத்திற்கு வருகிறார்கள்.

சபரி மலையில் கார்த்திகை, மார்கழி மாதங்களில் மண்டல பூஜை நடைபெறும் அதைத்தொடர்ந்து தை மாதம் அங்கே மகரவிளக்கு பூஜை நடைபெறும். மேலும், ஒவ்வொரு மாதமும் தமிழ், மலையாள மாதப் பிறப்பை ஒட்டி ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டு 5 நாட்கள் சிறப்புப் பூஜைகளும் நடைபெறும்.
பூஜைகள்: அதன்படி ஐப்பசி மாத பூஜைக்காக இன்று மாலை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையைத் திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி தீபாராதனை நடத்துகிறார். தொடர்ந்து நாளை அக். 18 முதல் 22ஆம் தேதி வரை 5 நாள்கள் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்படும்.
முதல் நாளான இன்று எந்தவொரு சிறப்புப் பூஜைகளும் நடக்காது. நாளை முதல் வழக்கான பூஜைகளுடன், நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், களசாபிஷேகம், சகஸ்ர காசாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை நடைபெறும்.
தரிசனம்: ஐப்பசி மாத பூஜையின் போது வரும் ஆண்டிற்கான மண்டல, மகர விளக்குப் பூஜைக்காக ஐயப்பன் கோவில், மாளிகைப்புறத்து அம்மன் கோவிலில் பணியாற்றும் மேல் சாந்தி தேர்வு நடைபெற உள்ளது. தொடர்ந்து அவர் 22ஆம் தேதி இரவு 10 மணியளவில் ஐயப்பன் கோவிலின் நடை அடைக்கப்படும்.
தரிசனத்திற்கான முன்பதிவு இணையதளம் மூலம் நடைபெற்று வருகிறது. மேலும், பக்தர்களின் வசதிக்காக நிலக்கல் பகுதியில் தற்காலிக முன்பதிவு மையமும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தாண்டு ஐப்பசி மாதத்தில் ஸ்ரீ சித்ர ஆட்ட திருநாள் பூஜைக்காக நவம்பர் 10, 11 தேதிகளில் நடை திறக்கப்படும். அதேபோல மண்டல பூஜைக்காக வரும் நவ. 16 முதல் டிசம்பர் 27 வரை நடைதிறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications