பாஜக, காங்., ஆர்எஸ்எஸ், முஸ்லீம் லீக் ஒரே கோரிக்கைக்காக போராடும் அதிசயம்.. கேரளாவில்தான் சாத்தியம்!
திருவனந்தபுரம்: கேரளா என்பது கடவுளின் தேசம் என்பார்கள், ஆம் அது உண்மைதான். கடவுளை போலவே கணிக்க முடியாத பல வியப்புகளை உள்ளடக்கிய மாநிலம் என்பதாலும் இந்த பெயர் அதற்கு சாலப்பொருந்தும்.
அதில் ஒரு அதிசயம்தான் இப்போது கேரளாவில் நடந்து வருகிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்க கூடாது என்ற விஷயத்தில், கொள்கை, மதம் என அத்தனை பேதங்களும் அங்கு மறக்கப்பட்டு எதிர் எதிர் கோணங்கள் உடையோர் ஒன்று கூடியுள்ளனர்.
ஆம், ஆர்.எஸ்.எஸ் இந்த விஷயத்தில் போராடுவதை ஒப்புக்கொள்ள முடிகிறது. முஸ்லீம் லீக்கும் இதே கொள்கையுடன் கரம் கோர்த்துள்ள அதிசயம் கேரளாவிற்கு மட்டுமே சாத்தியம்.

இந்து அமைப்புகள் ஏற்பாடு
ஆர்.எஸ்.எஸ்., பாஜக மற்றும் இந்து அமைப்புகள் இணைந்து, நேற்று மாபெரும் எழுச்சி பேரணியை, நடத்தின. ஆண்கள், பெண்கள் என இதில் சுமார் 1 லட்சம் பேர் பங்கேற்றதாக கூறப்படுகிறது. தலைநகரம் திருவனந்தபுரமே ஸ்தம்பித்தது. இப்போது காங்கிரஸ் என்ன செய்திருக்கும் என்று நினைக்கிறீர்கள்? மற்ற மாநிலங்களாக இருந்தால் காங்கிரஸ் என்ன செய்திருக்கும்? ஆனால் இதுதான் கடவுளின் தேசமாயிற்றே, இங்கு பாஜகவை போலவே காங்கிரஸும் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளது.

காங்கிரஸ், முஸ்லீம் லீக்
எரிமேலியில் இன்று காங்கிரஸ் ஏற்பாடு செய்த போராட்டத்தில் பல ஆயிரம், ஆண்-பெண்கள் பங்கேற்றனர். இதில் என்ன மற்றொரு ஆச்சரியம் தெரியுமா? இந்த போராட்டத்திற்கு இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கும் ஆதரவு அளித்து களத்தில் குதித்துள்ளது. அதாவது, ஆர்எஸ்எஸ்சும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கும் ஒரே கோரிக்கையை வலியுறுத்தி போராடுகிறார்கள். "ஈஸ்வரா.. நீரும் நெருப்பும் ஃபிரெண்ட்ஷிப்பானது உன்னால் ஈஸ்வரா.." என்ற பாடல் வரி எதற்கு பொருந்துமோ இல்லையோ, இந்த சிட்டுவேஷனுக்கு பக்காவாக பொருந்துகிறது பாருங்கள்.

பெண்களே எதிர்க்கும் மற்றொரு அதிசயம்
இதுமட்டுமா. பெண்களை கோயிலுக்குள் அனுமதிக்க கூடாது என்ற போராட்டத்திற்கு அதிக ஆதரவு அளிப்பதே பெண்கள்தான். இது மற்றொரு ஆச்சரியம். கேரளா பெண்கள் ஏதோ ஒரு வட மாநிலத்தை சேர்ந்த குக்கிராமத்து பெண்கள் போலவெல்லாம் கிடையாது. இவர்கள் நன்கு கல்வியறிவு பெற்றவர்கள். பல மாநிலங்கள், பல நாடுகளுக்கு பணி நிமித்தமாக குடி பெயர்ந்து சூழ்நிலைக்கு ஏற்ப பணியாற்றும் திறமை படைத்தவர்கள்தான் கேரளத்து பெண்கள். ஆனால், அவர்களே சபரிமலைக்குள் அனைத்து வயது பெண்களும் செல்வதை எதிர்க்கிறார்கள் என்றால், இது மற்றொரு பேரதிசயம். எப்படி நடக்கிறது இந்த அதிசயம்?

என்ன காரணம்
இங்குதான் உள்ளது கேரளாவின் ஒருமைத்தன்மை. மலையாளிகளுக்கு மொழி, இனம், மதம் என்பதையெல்லாம் தாண்டி, தங்கள் கலாச்சாரம் மீது ஈடு இணையற்ற பிணைப்பு உள்ளது. பிற வழிபாடுகள் கூடாது என்பது மத கோட்பாடாக இருந்தபோதிலும், கேரளாவிலுள்ள கிறிஸ்தவர்களும், முஸ்லீம்களும் ஓணம் பண்டிகையை வெகு விமரிசையாக இந்துக்களை போலவே கொண்டாடுவார்களே, அதே மாதிரிதான் அவர்கள் சபரிமலை ஐயப்பன் கோயிலையும் தங்கள் பாரம்பரியத்தின் ஓர் அங்கமாக பார்க்கிறார்கள். இதை பெண்களுக்கு எதிரான பாரபட்சமாக எந்த மதத்தை சேர்ந்தவர்களும் பார்க்க விரும்பவில்லை. பெண்களுமேதான். நாங்கள் 50 வயதான பிறகுகூட போகத்தயார் என்றுதான் பெண்களே மனமுவந்து சொல்கிறார்கள். எந்த ஊரில் இருந்தாலும், தங்களது சாப்பாடு, பண்டிகை, உடை போன்றவற்றில் தனித்துவம் காட்டுபவர்கள் மலையாளிகள். சபரிமலை சாஸ்தா விஷயத்திலும் அவர்கள் நாட்டுக்கே முன் மாதிரியாக இப்படி ஒரு தனித்துவத்தை மீண்டும் நிலை நிறுத்தி விட்டனர்.












Click it and Unblock the Notifications