சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆன்லைன் டிக்கெட் வாங்கி தருவதாக மோசடி.. பக்தர்களே உஷார்
சபரிமலை: சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல மகரவிளக்கு பூஜைக்காக, ஆன்லைன் மூலமாக நிறைவேற்ற டிக்கெட் முன்பதிவில், சில ஏஜென்டுகளால் முறைகேடுகள் நடப்பதால், பக்தர்கள் எச்சரிக்கையோடு இருக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
கொரோனா நோய் பரவல் காரணமாக இந்த ஆண்டு சபரிமலை ஐயப்பன் கோவில் செல்லக்கூடிய பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதன்படி ஆன்லைன் மூலமாக இ டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொண்டு வருவோருக்கு மட்டுமே தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது.

ஆன்லைன் பாஸ்
மண்டல மகரவிளக்கு பூஜையை ஒட்டி, ஆன்லைன் மூலமாக பாஸ் வழங்கும் பணியை சபரிமலை கோவில் நிர்வாகம் ஆரம்பித்தது. ஆனால், 12 மணி நேரத்துக்குள் 44 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனையாகின. இதையடுத்து 10 நாட்களுக்கு முன்பே டிக்கெட்டுகள் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் இது தெரியாத பக்தர்களிடம் இருந்து சிலர் பாஸ் பெற்று தருவதாக போலியாக வாக்குறுதி அளித்து பணத்தை ஏமாற்றும் சம்பவங்கள் தமிழகம், கர்நாடகா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் அதிகரித்துள்ளன.

தெலுங்கானாவில் மோசடி
சமீபத்தில் தெலுங்கானா தலைநகரம் ஹைதராபாத் நகரில் 4 பக்தர்களிடம், தலா 1,250 ரூபாய் கட்டணமாக பெற்றுக்கொண்டு சபரிமலைக்கு பாஸ் பெற்று தருவதாக கூறி ஒரு கும்பல் ஏமாற்றியுள்ளது. ஆனால் உண்மையிலேயே சபரிமலைக்கு செல்வதற்கு ஆன்லைனில் புக் செய்வதற்கு எந்த கட்டணமும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

கர்நாடக பக்தர்கள்
இதே போல தான், கர்நாடகாவில் 8 பக்தர்களுக்கு போலியாக ஒரு கும்பல் பாஸ் வினியோகம் செய்துள்ளது. இந்த பாஸை எடுத்துக்கொண்டு பக்தர்கள் சபரிமலை சென்ற போது நிலக்கல் பகுதியில் வைத்து அது போலி என்று காவல்துறை கண்டுபிடித்து அவர்களை திருப்பி அனுப்பிவிட்டனர்.

இ பாஸ் பெற வெப்சைட்
எனவே பக்தர்கள் இது போன்ற போலி ஏஜென்டுகளை நம்பி ஏமாற வேண்டாம். நேரடியாக, https://sabarimalaonline.org/#/login என்ற வலைதளத்திற்கு சென்று டிக்கெட் முன்பதிவு செய்யலாம். ஆனால் தற்போது டிக்கெட் வழங்குவதற்கான அளவு முடிந்துவிட்டது. ஒருவேளை மாநில அரசு தளர்வு கொண்டுவந்து, கூடுதல் பக்தர்களுக்கு அனுமதி வழங்கினால், அப்போது பக்தர்கள் பலன் பெறலாம். ஏஜெண்டுகளை நம்ப வேண்டாம் என்பதே கோரிக்கை.












Click it and Unblock the Notifications