கேரளா: ஹவாலா பணத்தை பாஜக தலைவர்கள் கொள்ளையடித்த விவகாரத்தில் சிக்கும் பெருந்தலைகள்?
திருவனந்தபுரம்: கேரளா சட்டசபை தேர்தலின் போது தேர்தல் செலவுக்காக பாஜக மேலிடம் அனுப்பி வைத்த ரூ3.5 கோடி ஹவாலா பணத்தை சினிமா பாணியில் பாஜக தலைவர்களே கொள்ளையடித்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது இந்த ஹவாலா பணம் கொள்ளை வழக்கில் பாஜக மூத்த தலைவர்கள் பலருக்கும் தொடர்பும் இருப்பதும் அடுத்தடுத்து அம்பலமாகி வருகிறது.
கேரளாவில் எப்படியாவது ஒரு இடத்திலாவது வெற்றி பெற வேண்டும் என பாஜக முனைப்பு காட்டியது. இதற்காக பணத்தை வாரி இறைக்கும் நடவடிக்கைகளையும் பாஜக மேற்கொண்டது.

ரூ.3.5 கோடி ஹவாலா பணம்
கர்நாடகா மாநிலத்தில் இருந்து ரூ3.5 கோடி ஹவாலா பணம் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் இந்த ரூ3.5 கோடி பணம், கொடக்கரா என்ற இடத்தில் மர்ம கும்பலால் கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இது தொடர்பாக கேரளா சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தியது.

பணம் கொள்ளை- 19 பேர் கைது
இந்த விசாரணையில் பாஜக தலைவர்களுக்கு நெருக்கமான தர்மாராஜா உள்ளிட்ட 19 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கேரள மாநில பாஜக தலைவர் சுரேந்தரனின் உதவியாளர்களும் விசாரணை வளையத்தில் சிக்கி உள்ளனர். அதேபோல் சுரேந்திரனின் மகனும் போலீஸ் விசாரணையில் சிக்கி இருக்கிறார்.

நடிகர் சுரேஷ் கோபிக்கும் சிக்கல்
அத்துடன் பாஜகவின் நடிகர் சுரேஷ்கோபியிடமும் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தியது. இது கேரளா அரசியலில் பெரும் புயலை கிளப்பி இருக்கிறது. ஆனால் இதனை மறைப்பதற்காக கேரளாவில் ஆளும் இடதுசாரி அரசும் காங்கிரஸும் தங்களுக்கு எதிராக சதி செய்வதாக குமுறிக் கொண்டிருக்கின்றனர் பாஜக தலைவர்கள்.

பாஜக தலைவர்கள் சிக்குகின்றனர்
கேரளா அரசியலில் புயலை வீசிக் கொண்டிருக்கும் இந்த விவகாரத்தில் மாநில பாஜக மூத்த தலைவர்கள் சிலர் விரைவில் கைதாகும் நிலை உள்ளது என்கின்றன பத்திரிகையாளர்கள். மேலும் ஹவாலா பணத்தை அனுப்பி வைத்த கர்நாடகா பாஜக பிரமுகர்களும் கேரளாவின் விசாரணை பிடியில் சிக்கக் கூடும் எனவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications