திருவனந்தபுரம் கோயிலில் துலாபாரத்தின் போது விபத்து.. காங். வேட்பாளர் சசிதரூர் காயம்
Recommended Video

திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு கோயிலில் துலாபாரம் கொடுத்த போது இரும்புக் கம்பி தலையில் விழுந்து அத்தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிதரூர் காயமடைந்தார்.
கேரள மாநிலத்துக்கு வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படுகிறது. இதன் முடிவுகள் மே 23-ஆம் தேதி வெளியாகிறது.
இருமுறை எம்பியாக இருந்த சசிதரூர், திருவனந்தபுரம் தொகுதியின் எம்பி வேட்பாளராக காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்பட்டுள்ளார். இவர் அப்பகுதியில் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

துலாபாரம்
இந்நிலையில் இன்று கேரள மாநிலத்தவர்கள் விஷு வருடத்தை கொண்டாடுவது வழக்கம். அதன்படி கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்துவர். அந்த வகையில் கழக்கூட்டம் தொகுதியில் பிரசாரம் மேற்கொண்ட சசிதரூர், தம்பனூரில் உள்ள காந்தாரி அம்மன் கோயிலுக்கு சென்றார். அங்கு துலாபாரம் கொடுத்தார்.

எடைக்கு நிகர்
துலாபாரம் என்பது எடைக்கு எடை காசோ, பணமோ, பொருளோ, பாத்திரமோ, தங்கமோ, வெள்ளியோ அவரவர் வசதிக்கேற்ப கொடுப்பது. அது போல் இவர் தனது எடைக்கு நிகராக வாழைப்பழத்தை கொடுத்தார்.

சிகிச்சை
அப்போது தராசின் இரும்பு கம்பி சசிதரூரின் தலையில் விழுந்தது. இதையடுத்து அவருக்கு தலை மற்றும் காலில் காயம் ஏற்பட்டது. அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பரபரப்பு
பின்னர் திருவனந்தபுரத்தில் உள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தலையில் 6 தையல்கள் போடப்பட்டுள்ளன. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications