இடுக்கி அணை திறப்பால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை.. தமிழக அரசுதான் காரணம்..கேரள அமைச்சர் குற்றச்சாட்டு
திருவனந்தபுரம்: முல்லைப் பெரியாறு அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, அழுத்தத்தைக் குறைக்கும் வகையில் கேரள அரசு இடுக்கியில் உள்ள செருதோணி அணையை இன்று அதிகாலை திறந்தது.
இந்தியாவில் உள்ள மிகப் பழமையான அணைகளில் ஒன்று முல்லைப்பெரியாறு அணை. கேரளாவில் பெய்யும் மழையால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்தது.
முல்லைப் பெரியாறு அணை கேரளாவில் உள்ள போதிலும், அந்த அணை தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. அணையில் இருந்து நீரைத் திறக்கும் முடிவைத் தமிழக அரசு அதிகாரிகளே எடுத்து வருகின்றனர்.
ஐஐடி மாணவி பாத்திமா மர்ம மரண விவகாரம்- சிபிஐ முன்பு இன்று ஆஜராகிறார் தந்தை லத்தீப்
இடுக்கி அணை திறப்பு
இந்தச் சூழலில் அணையின் நீர்மட்டம் உயர்ந்ததைத் தொடர்ந்து நேற்று முல்லைப் பெரியாறு அணையில் இருந்து நீர் திறந்துவிடப்பட்டது. இதனால் ஏற்பட்ட அழுத்தத்தைக் குறைக்கும் வகையில் கேரள அரசு இடுக்கியில் உள்ள செருதோணி அணையை இன்று அதிகாலை திறந்தது. கடந்த 3 மாதங்களில் மட்டும் இடுக்கி அணை 4 முறை திறக்கப்பட்டுள்ளது. இப்படி 3 மாதங்களில் 4 முறை இடுக்கி அணை திறக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். இதன் காரணமாகத் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
கேரள அமைச்சர் குற்றச்சாட்டு
இருப்பினும் அணை திறக்கப்படுவதை கண்டித்து இடுக்கி மற்றும் பத்தனம்திட்டா மாவட்டங்களில் அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தியதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். முல்லைப் பெரியாறு அணை திறக்கப்பட்டதை அடுத்து கேரள நீர்வளத்துறை அமைச்சர் ரோஷி அகஸ்டின் அங்கு நேரில் சென்று நிலைமையைப் பார்வையிட்டு வருகிறார். தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரும் என்று அவர் தெரிவித்தார். மேலும், இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் தமிழ்நாடு அரசு பொறுப்பற்ற முறையில் அணையைத் திறப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
என்ன நடந்தது
100 ஆண்டுகள் பழமை வாய்ந்த முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் நேற்று 141.90 அடியை எட்டியதை அடுத்து, இரவு 7.45 மணியளவில் அணையின் மதகுகளைத் திறந்தனர். இரவு 10 மணிக்கு அணையின் மூன்று மதகுகள் மூடப்பட்டதாகக் கூறப்படுகிறது. தமிழக அதிகாரிகளின் இந்த நடவடிக்கையால் அங்கு வசிக்கும் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இடுக்கியில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
கேரள முதல்வர்
முன்னதாக இது தொடர்பாகக் கேரள முதல்வர் பினராயி விஜயன் கடந்த வாரம் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில் கடந்த நவம்பர் 30ஆம் தேதி முல்லைப் பெரியாறு அணையில் இருந்து 5,700 கன அடி நீர் திறந்துவிடப்பட்டது. அதைத் தொடர்ந்து இன்று அதிகாலை (டிச.2) 8,017 கன அடி நீர் திறந்துவிடப்பட்டது. இரண்டு முறையும் போதிய முன்னறிவிப்பின்றி அணையில் இருந்து நீர் திறந்துவிட்டுள்ளதாகவும் பினராயி விஜயன் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அணையில் இருந்து நீரைத் திறக்க திட்டமிட்டால், அதற்குத் தகுந்தபடி திட்டமிட்டு, தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களுக்கு போதிய எச்சரிக்கையை வழங்க வேண்டும். அதன் பின்னரே அணையில் இருந்து நீரைத் திறக்க வேண்டும் என்று அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்,